தமிழே... தமிழே.... - இரா. சோழன்

.

என் கண்ணின் கருவிழியாய் விண்ணின் முழு மதியாய்
என்னுள் நிறைந்தவளே  இளம் கதிரே
கதிரே இளம் கதிரே காலம் பல காலம்
 நீயே உலகாலும் நிலை அதுவே
நிலை பெற நீ வேண்டும் கலை பல கற்றுவித்த
கவின் மலர் கற்பகமே பொற்கொடியே
பொற்காலம் தோற்றுவித்த புகழ் மாமனிதன் அவன்
மறை நூல் எழுதி வைத்த வள்ளுவனாம்
வடிவாய் எடுத்துரைத்த இருவரி இருவரிகள்
தலைமுறை தலைமுறையாய் வழிகாட்ட
காட்டிய வழியால் நாம் கடமையை தவறாமல்
போற்றியே புகழ் வாழ வழிவகுத்து
வகுத்த வழி நல் வழியாய்  நாம் எல்லாம் நலம் வாழ
தொகுத்தளித்த பழம்மொழியே பைந்தமிழே
முற்றும் துறந்தவரும் முதிர் நல் மூத்தவரும்
கற்றுத்தெரிந்தவரும் கல்லாதவரும்



கல்லாதவரும் பொருள் இல்லாதவரும் ஆகி
எல்லோரும் உன்  வயப் பட்டதுண்மை
போகும் இடம் தெரியா பொருள் தேடும் நாமெல்லாம்
மாலை வந்து மயங்குவது உன்மொழியில்
காற்றில் இசையாக எம் காதில் தேனாக
சொக்கி சுகம்கான வந்தவளே
சொல்லும் சுகமாக இன்னும் பரிமாற
சுவைக்கு சுவையாக இனித்தவளே
கன்னித் தமிழாக காலம் பலகாலம்
காணக் கண்கோடி வேண்டுமன்றோ
உன்னைக் காணக் கண்கோடி வேண்டுமன்றோ
மழலை மொழியாக  மாலைப்பொழுதாக
வானில்  நிலவான அழகு பெட்டகமே
இளமை வளமாறா இனிமை குணமாறா
உலகின் வளமான ஒரு மொழியே
முதுமை எமக்குண்டு மூப்பும் எமக்குண்டு
முடிவே இல்லா முதுமொழியே
இலக்கண இலக்கியங்கள் காவிய காப்பியங்கள்
சொத்தாய் நமக்களித்த நன் மொழியே
உன் சொத்தே சுகம் என்று சொக்கி மகிழ்ந்தவர்கள்
எண்ணிக்கை குறைந்துவர இது முறையா?

பொருளே பொருள் என்று பொழுதும் தினப் பொழுதும்
ஓடி ஓய்ந்துவிட எது உதவி   (என)
என குழந்தைப் பருவம் முதல் வேறு மொழிகற்று
வேலை கிடைத்ததும் வரும் மகிழ்ச்சி
பொருள் ஈட்டும் மகிழ்ச்சியை புறம் பேச வரவில்லை
பொருள் ஈட்டும் மகிழ்ச்சியை நான் புறம் பேச வரவில்லை

நல் அறம் செய்யும் மக்களே கரம் கூப்பிக் கேட்கிறேன்
தாய் மொழி தமிழுக்கும்  தரணியில் ஓர் இடம்
தனி நிகரில்லா  நிலை வேண்டும்
சிறுவர்கள் முதலாய் இளைஞர்கள் படையாய்
மொழி வளம்பெறவே முன் வரவேண்டும்
நம் மொழி வளம்பெறவே முன் வரவேண்டும்
இதுவரை நிலையாய் இருந்த எம் தமிழை
எதுவரையேனும் எடுத்து செல்லவேண்டும்
உலகில் எதுவரையேனும் எடுத்து செலல்வேண்டும்
வேறொரு உலகம் கண்டுவிடின் அதை
தொட்டுவிடும் மொழி தமிழாகட்டும்
தொட்டுவிடும் முதல் மொழி தமிழாகட்டும்
பழம் பெரும் மொழியாம் பலர் கூறும் மொழியாம்
தாய் மொழித் தமிழாம் தலைமை பெறவேண்டும்
தமிழின் வளர்ச்சி தானாக வருமா?
சங்கம் வளர்த்தார் சங்கம் வளர்த்தார்
பொற்குவை  கொடுத்து போற்றி வளர்த்தார்
கொடுத்ததை வைத்தா பெருமிதம் கொண்டார்
தமிழ் வளர்ந்ததை நினைத்து மார்தட்டி நின்றார்
காலம் காலமாய் தமிழ் இனி வளரும் என
தன்னலம் இல்லா பெருமக்கள் குறையா
கோடி கிடைத்தது குறைவிலா கிடைத்தது
நாடியது கிடைத்தது நாம் நலம்பெற கிடைத்தது
ஈட்டிய பொருளில் இமியளவேனும் ஈகை குணமுடையோர்
மனம் இயைந்து தாரீர்
காசுக்கா பஞ்சம் நம் மாசற்ற  நெஞ்சம்
நம்மையே கேட்கும் சில காலம்
காலம் கடந்துவிடும் நாடி ஒடிந்துவிடும்
நம் காலம் முடிந்துவிடும் அது நேரம்
நம் பேரக்குழந்தைகளின் பேசும் மொழியெதுவோ
 நாளும் அச்சம் அது நமை ஆளும்
தமிழை விதைக்காமால்  நாளும் வளரும் என
நாளை எதிர்பார்க்க முடியாது
தமிழ் வளரும் நாளை எதிர் பார்க்க முடியாது
இன்று முதலாக இரவு பகலாக
சிந்தனை சிறிதே வரவேண்டும்
தமிழ் வளர்ச் சிந்தனை சிறிதே வரவேண்டும்
நம்மின் அடையாளம் நாளை நடைபோடும்
நம்பிக்கை இன்று நமக்குண்டா
என்ற நம்பிக்கை இன்று நமக்குண்டா
கலையின் அழகும் கற்பனைத் திறனும்
மொழியின் மூலமே வெளியாகும்
மொழி அழிந்தால் நம் மூலம் அழியும்
மூலம் அழிய கலாச்சாரம் அழியும்
கலாச்சாரம் அழிய கலை அழியும்
கலை அழிய நம்மின்  நிலை அழியும்
தமிழன் என்ற நிலை அழியும்
மொழியின் அடையாளம் நம்முடன் முடியட்டுமா
இல்லை நமக்கு பின்னும் நடைபோட்டு நடக்கட்டுமா
 நாமே முடிவு செய்வோம் நம் ஆயுளை  நிறைவு செய்வோம்
( குவின்ஸ்லாந்து பொற்கரையில் (GOLD COAST ) அண்மையில் நடந்த தமிழ் எழுத்தாளர்விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)

No comments: