விதைத்ததைநாம் காத்துநிற்போம் !எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
          ஆங்கிலத்தில் கற்றாலும்
          ஆன்மீகம் அகம்நிறைத்தார்
          அறிவுடனே ஆன்மீகம்
          அவருரைத்து நின்றாரே
           தன்குருவை சோதித்து
           தன்னுணர்வை அவர்வளர்த்தார்
           தன்குருவின் ஆசியினால்
           தரணியெங்கும் ஒளியானார் !

            ஈரமதைக் கொண்டிருந்தும்
            வீரமுடன் செயற்பட்டார்
            ஊரெல்லாம் அவர்வார்த்தை
            உத்வேகம் ஊட்டியதே
            பாரினிலே புரட்சியுடன்
            பலகருத்தை அவர்பகர்ந்தார்
            பார்வையெலாம் பலநோக்கில்
            பாய்ந்துமே சென்றதுவே !



            சமயத்தின் தத்துவத்தை
            தாமுணர்ந்தே போதித்தார்
            சரியான பாதைசெல்ல
            தன்கருத்தை அவர்தந்தார்
            மனிதமன நிலையாய்ந்து
            மருந்தாகப் பலசொன்னார்
            நிலையான கருத்தெனவே
            நிறுத்திவிட்டு அவர்சென்றார் !

           விளக்கமில்லா நின்றவர்க்கு
           விவேகமாய் விரித்துரைத்தார்
           வேதனையில் இருப்பாரை
           வெளியேற்றல் கடமையென்றார்
           போதனையைச் சொன்னாலும்
           பொறுப்புடனே அவர்செய்தார்
           சாதனையின் சிகரமென
           சகலருமே போற்றுகின்றார் !

             காவிகட்டி வந்தபலர்
             கண்மூடிப் பலசொன்னார்
             மூடிநிற்கும் பலவற்றை
             மூடியே வைத்துநின்றார்
             வாடிநிற்கும் மக்கள்தமை
             மனங்களிலே கொள்ளாமல்
             மூடிநிற்கும் தத்வத்தை
              முணுமுணுத்தே நின்றார்கள்  !

               காவிகட்டி நின்றாலும்
               கண்மூடிக் கொள்கைகளை
               களைந்திடுங்கள் எனச்சொன்னார்
               களத்தில்நின்று விவேகாநந்தர்
                கண்மூடி நில்லாமல்
                கண்திறக்க வைத்தவர்தான்
                காலமெல்லாம் நாம்நினைக்கும்
                 கனிவுநிறை விவேகாநந்தர் !



              வாய்மையினை யாவருமே
              வாழ்வியலாய் ஆக்கிடுங்கள்
              வைரமுடை உடலுடனே
              வரநீங்கள் முயன்றிடுங்கள்
              பொறாமைதனைப் புறந்தள்ளி
              புதுத்தெம்பு பெற்றிடுங்கள்
              புதுவாழ்வு உங்களுக்குப்
              பொலிவாக அமையுமென்றார் !
           

              தேசமதை நேசித்த
               திறலான துறவியவர்
               பாதகங்கள் தனையெதிர்த்த
               பாரதத்தின் துறவியவர்
               வீரமுள்ள உணர்வுதனை
               ஊட்டிநின்ற துறவியவர்
                விவேகநிறை விவேகாநந்தர்
                விதைத்ததைநாம் காத்துநிற்போம் !