சங்க இலக்கியக் காட்சிகள் 21- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை
முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

போன மச்சான் திரும்பி வந்தான்!


ஆண்டுகளுக்குக் கடவுள்களின் பெயரை அந்தக்காலத்து மக்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. அவ்வாறு தெய்வங்களின் பெயர்களைக்கொண்ட பலவருடங்கள் கடந்து விட்டிருந்தன. அத்தனை வருடங்களாக அந்த நீர்த்துறையின் கரையிலே விடப்பட்டிருந்தது ஒரு தோணி. நீர்த்துறையில் இருந்து கரையைநோக்கி அடித்துக்கொண்டிருக்கும் அலை அந்தத் தோணியிலே மோதும். அவ்வாறு தொடர்ந்து பல வருடங்களாக அலையினால் மோதுண்டதால் அந்தத் தோணி பழுதடைந்து விட்டது. மீன்பிடித்தல் தொழிலுக்கு இனி அது உதவாததாகிவிட்டது. அதன் முன்பகுதி முறிந்தும் விட்டது. வழமையாகத் தொழிலுக்குப் பயன்படுத்தும் தோணிகளுக்கு நறுமணப் புகையூட்டிப் பராமரிப்பார்கள். தொழிலுக்கு இனி உதவாது என்பதால் இந்தத் தோணிக்கு அதையும் செய்யாமல் விட்டு விட்டார்கள். அது புன்னைமரமொன்றின் நிழலிலே கிடக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் அடிப்பாகத்தோடு சேர்த்து அதனைக் கட்டிவைத்திருக்கிறார்கள்.

வண்டி இழுப்பதற்கோ அல்லது வயலை உழுவதற்கோ முடியாதவாறு நடைதளர்ந்துவிட்டது எருது ஒன்று. அதனை வீணே புல்லை மேய்ந்து தன் வாழ்நாளைக் கழிக்கட்டுமென்று, புல்மிகுந்த தரையையுடைய தோட்டமொன்றிலே விட்டுவிட்டார்கள்.



இந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்ற ஊரைச்சேர்ந்தவன் தலைவன். அவன் பரத்தையரோடு தொடர்பு கொண்டிருந்தான். நீண்டகாலமாக அவன் பரத்தையொருத்தியோடு தங்கியிருந்தான். பரத்தையாயிருந்தாலும் அவள் நல்லவளாயிருந்தாள். தலைவனோடு பாசத்துடன் பழகினாள். அவள் சற்று முதுமையடைந்துவிட்டாள். அவளது உடல் முன்போலன்றி சிறிது தளர்ந்துவிட்டது. அதனால் இடையிலே சிலகாலம் அவன், அவளை விட்டுப்பிரிந்து இளமையான வேறொருத்தியை நாடி இன்பமடைந்தான். அந்தப் புதியவளுடனேயே தங்கினான். புதியவள் அவ்வளவு நல்லவள் அல்ல. பணத்திலேயே அவள் குறியாயிருந்தாள். எடுத்ததற்கெல்லாம் தலைவனோடு சண்டையிட்டாள். அதனால், தலைவன் முன்னையவளிடம் திரும்பிவருகிறான்.

அவனோடு ஊடல்கொண்டிருந்த அவள் தலைவனின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனுக்கு உணர்த்துகிறாள். “இளமையிலே தந்ததைப்போல சற்று முதுமையடைந்த விட்ட பெண்களால் இன்பம் தரமுடியாமல் போய்விட்டால் அவர்களைப் பேணி, பாதுகாப்பதை விட்டுவிட்டுப் புதியவர்களளை நாடுவதுதான் உனது செயல்” என்று அவனுக்கு இடித்துக் கூறுகிறாள். அதனை உட்கருத்தாகக் கொண்டே, பராமரிப்பற்றுக்கிடக்கும் தோணியையும், வீணே புல்மேய விடப்பட்டிருக்கும் எருதினையும் உவமானங்களாக எடுத்துரைக்கின்றாள்.

அத்துடன் நில்லாது, அவன்  உறவு கொண்டவள் நல்லவள் அல்ல என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறாள். “இப்போது அவள் சரியில்லை என்று வந்திருக்கிறாயே! அவளை நல்லவள் என்றும், சிறப்பானவள் என்றும் நம்பி அவளோடு நட்புப்பாராட்டிய நீதான் அவளுக்கு எற்ற வகையில் நடந்து அவளோடு ஒத்துப் போயிருக்க வேண்டும்” என்றுகூறி,“இதுவெல்லாம் உனக்கு வேண்டியதுதான்” என்று குத்திக் காட்டுகின்றாள். “மலர்ந்தும் மகரந்தச் சேர்க்கையடையாமல், வீணே காய்ந்து உதிர்ந்துவிடுகின்ற மலரினைப் போன்றவள் அவள்” என்று சொல்கிறாள்.

இப்படியெல்லாம் இடித்துரைத்த அவள், “உன்னாலேயே அவளைப்பற்றிச் சரியாக அறிந்துகொள்ள முடியவில்லையென்றால், நெகிழ்சியான தோள்களையும், கலக்கமுற்ற கண்களையும் கொண்ட எங்களைப் போன்ற அப்பாவிப் பெண்களின் நிலை என்னாகும். நீ எண்ணிப்பார்!” என்று கூறி, அவனோடு விருப்பமும், மதிப்பும் கொண்ட தன் உள்ளத்தை வெளிப்படுத்தி ஊடல் நிலைமையில் இருந்து இறங்கிவருகின்றாள். ஊடல் தணிகின்றாள். கூடலில் மகிழ்கின்றாள். மீண்டும் அவனோடு சேர்ந்து வாழத் தொடங்குகின்றாள்.

இந்தக் காட்சியை நமது இதயத்தில் பதிய வைக்கும் பாடல் ஒன்றைப் பார்க்கலாம்.

ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப்
பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு
மூத்துவினை போகிய முரிவாய் அம்பி
நல்லெருது நடைவளம் வாய்த்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு
நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ
ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல்
முழவுமுதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதில்
தவறுநன்கு அறியா யாயின் எம்போல்
நெகிழ்ந்தோட் கலுழ்ந்த கண்ணர்
மலர்தீய்ந்து அனையர் நின்நயந் தோரே!

(நற்றிணை. பாடல் இல: 315. நெய்தல் திணை. பாடியவர்: அம்மூவனார்)

இதன் நேரடிக் கருத்து:

ஓன்றோடொன்று தொடர்புடைய பெரிய தெய்வங்களின் பெயர்களைக் கொண்ட வருடங்களும் பல கழிந்துவிட்டன. அவ்வாறு காலம் சென்றதால் நீர்த்துறையின் கரையில் அலையினால் மோதி மோதித் தாக்கப்பட்டுப் பழையதாகி, தொழில் செய்வதற்கு உதவாதபடி தோணியொன்று முன்பகுதி முறிந்து கிடக்கிறது. அதற்கு நறுமணப் புகையும் கொடுக்காமல், புன்னை மரத்து நிழலிலே, அடிமரத்ததோடு அதைச் சேர்த்துக் கட்டி வைத்திருக்கிறார்கள். நல்லமுறையிலே தொழில்செய்வதற்கு இதுவரை உதவிய எருது, சிறப்பாக நடக்கமுடியாததாகிவிட்டதனாலே, இனிமேல் தோழில் செய்யவிடாமல் புல்நிறைந்த தோட்டத்திலே வீணேநின்று மேயும்படி விட்டுவிட்டார்கள். அத்தகைய நீர்த்துறைக்கு உரியவனான எம் தலைவனே!
 அவளைப் பெருஞ் சிறப்புள்ளவளாக எண்ணியபடியால், அவளோடு நட்பாயிருந்தபோது நீதான் சிறுசிறு தவறுகள் வராதபடி உணர்ந்து நடந்திருக்க வேண்டும். உன்னாலேயே அதனை அறிந்தகொள்ள முடியவில்லையென்றால், எங்களைப்போல நெகிழ்ந்த தோள்களையும்ää கலங்கிய கண்களையும் உடைய பெண்களின் நிலை என்னவாகும்?  மலர்ந்தும் மகரந்தச் சேர்க்கையடையாமல், வீணே காய்ந்து உதிர்ந்தவிடுகின்ற மலரின் நிலையை ஒத்ததுதான், நீ விரும்பியுறவாடிய அவர்களது நிலையுமாகும். (என்று தலைவனைப் பார்த்து அவனோடு அன்புகொண்டு உறவாடிவாழ்ந்த பரத்தை கூறுவதாக அமைந்த செய்யுள் இது)

இதனைப்பாடிய அம்மூவனார் மிகப் பெரும் புலவர். பல மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றவர். தொண்டி. மாந்தை,கொற்கை, கோவலூர் என்னும் துறைமுகங்களைச் சிறப்பித்துப் பாடியவர். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள நெய்தல் பற்றிய நூறு செய்யுட்களும் இவரால் பாடப்பட்டவை. எட்டுத்தொகை நூல்களில் இவரது இருபத்தியேழு செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன.

No comments: