ஆன்ம தாகம் - -க. கணேசலிங்கம்

.

நீண்டு  பரந்த  கடலினை – நான்
நீந்திக்  கடக்க  விழைகிறேன்
ஆண்டுகள்  போயின  ஆயினும் - பெரும்
ஆழியை  நீந்த  முயல்கிறேன்!
பொங்கும்  உணர்வுகள்  மோதிடும் - எழில்
பூத்த  கனவுகள்  ஆடிடும்
நுங்கு  நுரைக்கடல்  மீதிலே - எனை
நோக்கி  அலைகளும்  சாடிடும்!
வெள்ளை  மணற்கரை  தன்னிலே - கடல்
வெண்ணுரை  சிந்திநின்  றாடிடும்
கொள்ளை  அழகு  குலவிடும் - அந்தக்
கோலம்  கலைந்துபின்  னேகிடும்!
வானத்து  வெண்மதி  தண்ணொளிக் - கதிர்
வண்ணக்  கரங்களை  நீட்டிடும்
கானம்  இசைத்துக்  கடலலை - நிலாக்
காதலில்  வீழ்ந்து  புரண்டிடும்!
காதல்  வெறிகொண்ட  பேரலை - இரு
கண்கள்  மறைத்தெனைச்  சாடிடும்
ஏதும்  வழியின்றி  வீழுவேன் - இடர்
எய்திடும், பின்னரும்  நீந்துவேன்!
சிந்தும்  நுரைகளில்  மேல்விழுந்(து) – ஒளி
சேரும்  பொழுதினில்  தென்படும்
விந்தை  நிறங்களின்  ஓவியம் - எழில்
விஞ்சு  வடிவங்கள்  காட்டிடும்!
காணும்  வடிவங்கள்  எத்தனை? – முன்பு
கண்ட  வடிவங்கள்  எத்தனை?
ஆணெனப்   பெண்ணெனக்  கூடியே - இங்கு
ஆடிய  ஆட்டங்கள்  எத்தனை?
எத்தனை  நாடகம்  கண்டனன்? - இங்கு
எத்தனை  மேடைகள்;  கண்டனன்?
நித்தமும்  ஆடிடும்  நாடகம் - இந்த
நீணில  மீதென்று  நிற்குமோ?
உள்ளக்  கடலலை  மோதிடும் - அதில்
உள்ளவை  வெண்ணுரை  யாகிடும்
நள்ளிரு  ளாகிய  வேளையில் - உயிர்
நல்லொளி  காணத்  துடித்திடும்!
நீண்டு  பரந்த  கடலினை – நான்
நீந்திக்  களைத்தின்று  செல்கிறேன்!
ஆண்டுகள்  எத்தனை  போயினும் - இந்த
ஆழியை  வென்றிட  நீந்துவேன்!



No comments: