தைப்பூசத் திருநாளிலே.....பால் காவடி புஷ்பக்காவடி.....துளசி கோபால்

.

சரியாச் சொன்னால் போன வெள்ளிக்கிழமை இதே நேரம்..... அரைத் தூக்கத்தில் இருந்தவளுக்கு பால்கனி கதவு திறக்கும் சத்தமும், முணுமுணுவென்று யாரோகூட்டமாக என்னமோ சொல்லும் மெல்லிய ஓசையும் காதில் விழுந்துச்சு. கண்ணைத் திறந்தால்.... பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்த கோபால், இங்கெ வந்து பாரு' என்றார்.

உச்சாணிக் 
கொம்பில் இருந்து பார்க்கிறேன். சின்னச்சின்ன மஞ்சள் உருண்டைகள் நகர்ந்து போகுது. கவனிச்சுக்கேட்டால் அந்த ஓசை  'அரோகரா!' 

பொழுது விடிஞ்சால் தைப்பூசம்.  இப்ப மணி  ராத்ரி பதினொன்னரைதான். அதுக்குள்ளே பால்குடம் போக ஆரம்பிச்சுருக்கே! 
சரியாத் தெரியலைன்னேன்.  16 வது மாடியில் இருந்து பார்த்தால் அப்படித்தான்.  கீழே போய் பார்க்கலாமான்னார். உடை மாற்றிக்கொள்ள சோம்பல்.  லாங் ட்ரெஸ்க்கு மேலே ஒரு சால்வையைப் போர்த்திக்கிட்டுக் கிளம்பினேன்.

சிங்கையில்  ஹொட்டேல் க்ராண்ட் சான்ஸ்லெரில்  ரெண்டு நாளாத் தங்கி இருக்கோம். அறை எண் ரெட்டைப்படையாக் கிடைச்சதும் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி. செராங்கூன் சாலை வ்யூ கிடைக்கும். இந்த ஹொட்டேல், நம்ம வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஜஸ்ட் பின்பக்கம் இருப்பதால்  கோபுர வ்யூவும் கேரண்டி.  நம்ம அதிர்ஷ்டம் பாருங்க..... கோவிலில் புதுக் கட்டிடங்கள் எழுப்பி விரிவுபடுத்தும் வேலை நடப்பதால்  கோபுரங்களுக்கெல்லாம்  படுதா மறைப்பு இப்போ. எப்படியும் வரும் ஜூன் மாசம் குடமுழுக்கு நாள் குறிச்சுட்டாங்க என்றபடியால் அடுத்தமுறை வரும்போது பளிச் கோபுரம் மின்னத்தான் போகுது!

கீழே வந்தப்ப 'அரோகரா' பெருசாக் கேட்டது. கைலாஷ் பர்பத் வாசலுக்கு  வந்து நின்னோம். மூணு லேன் உள்ள செராங்கூன் சாலையில் (இது ஒரு வழிப்பாதை)  ஒரு லேன் முழுக்க கம்பித்தடுப்பு  வச்சுருக்காங்க. அதுக்குள்ளே பால்குடம் சுமந்து  நடந்து போகும் பக்தர்கள். வீரமாகாளியம்மன் கோவிலைக்கடந்து போகுமுன்  ஒரு தேங்காயை கம்பித்தடுப்புக்கு வெளியே  அம்மனைக் கும்பிட்டபடி  சூறைத்தேங்காயா உடைச்சுட்டுப் போறாங்க. சாலையில் அந்தப்பகுதியில் உடைக்கபட்ட தேங்காய்ச்சில்லுகள்  சாலை முழுசுமாச் சிதறிக்கிடக்க, மற்ற ரெண்டு லேன்களில் போகும் வண்டிகள் சட்னி அரைச்சுக்கிட்டே  போய்க்கொண்டிருக்கு!  எத்தனை பஞ்சர் கேஸ்களோ!

ரெண்டு எட்டு வச்சு கோவில் பக்கம் போனால்  அந்த நேரத்திலும் சந்நிதி திறந்தே இருக்கு!  அம்மனும் அசராமல் அருள் பாலிச்சுக்கிட்டு இருக்காள்.  பதின்மவயது  'இளம் தாய்'  கேஸ்பருடன் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாங்க.  க்யூட் லிட்டில் டாக். Maltese வகை. அம்மாவைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஒரு பயத்தோடு ஊர்வலத்தை  வேடிக்கை பார்க்கிறான். ரெண்டு வயசு ஆகுதாம்.  முடி வெட்டிக்கிட்டதால் இளைச்சுப் போனமாதிரி தெரிஞ்சான்:-)  பக்கத்து அடுக்குமாடியில் வாசம்.

ஒரோரு தனிக் குழுவா பால்குட வரிசை  தங்களுக்கான பாட்டு, கோஷம் என்று போய்க்கிட்டே இருக்காங்க. பெருமாள் கோவிலில் இருந்து கிளம்பி  டேங்க் ரோடு தண்டாயுதபாணி கோவில்வரை பாத யாத்திரை.  நாங்களும் சுமார் ஒரு மணி நேரம் போல நின்னு வேடிக்கை பார்த்துட்டு அறைக்கு வந்து மீதித் தூக்கத்தைத் தொடர்ந்தோம். நடுவில் கொஞ்சம் விழிப்பு வந்தவுடன் மீண்டும் பால்கனிக்குப்போய் நின்னேன்.  ஊர்வலம் போகும்  ஓசை கேட்டதே தவிர சாலை விளக்குகள் எல்லாம் அணைஞ்சு இருந்துச்சு.  பரிவுடன் இவ்வளோ  ஏற்பாடுகள் செஞ்ச அரசு  விளக்குகளை அன்று ஒரு நாளுக்கு விட்டு வச்சுருக்கக்கூடாதா?

காலையில் ஒரு ஏழரைக்குக் கிளம்பி  நம்ம கோமள விலாஸில் இட்லி அண்ட் காஃபியை முடிச்சுக்கிட்டு  ஊர்வலத்துக்கு ஒதுக்கிய பக்கம் கம்பித்தடுப்பை ஒட்டியே  நம்ம சீனுவை தரிசிக்கப் போய்க்கிட்டு இருக்கோம்.  தெருமுழுக்கச் சட்னி அரைச்சது போதுமுன்னு  கம்பித்தடுப்புக்குள்ளே  தேங்காய் உடைக்கத் தொட்டி ஒன்னைக் கொண்டு வந்து வச்சுருந்தாங்க. சூப்பர்!


 ஊர்வலத்தில் காவடிகள் வர ஆரம்பிச்சு இருக்கு. முகம், நாக்கு, நெற்றி, கை  முதுகு தோள்பட்டை என்று அலகுகள் குத்திக்கொண்டு  கம்பிக்கூண்டு போல் இருக்கும் வேல்காவடிகளைச் சுமந்து கொண்டு  வர்றாங்க. ஒவ்வொரு காவடிக்காரருக்கும்  அவருடைய உற்றார் உறவினர், தனிப்பட்ட  மேளக்காரர்கள்  என்று சிறு  குழுவா வர்றாங்க. ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கிட்டு  பாட்டுகளைப் பாடியபடி போறாங்க. மேளம் அடிப்பவர்களுக்கு இன்னிக்கு பயங்கர கிராக்கி.  இசைப்புலியா இருக்கவேண்டியதுகூட இல்லை. ஒரு லயத்தோடு  'டும்'மத் தெரிஞ்சால் போதும் என்ற அளவே!  கூடவே  ரெண்டு நிமிசத்துக்கு ஒரு முறை 'வேல் வேல் வெற்றி வேல்,  வேலனுக்கு  அரோஹரா' இப்படி  கோஷங்கள்.




பக்தர்களின் அர்ப்பணிப்பும், அந்தச் சூழலும் நம்ம மனசையும் கட்டிப்போட்டுருது.  வேல் வேல் என்றதும்  வெற்றி வேல்,  முருகனுக்கு  என்றதும் அரோஹரா என்று முழங்கும் கூட்டத்தினருடன் நானும் பின்பாட்டுப் பாடிக்கிட்டே  அவர்கள் எல்லோரும் பெருமாள் கோவிலில் இருந்து வர  நாங்கள் பெருமாள் கோவிலை நோக்கிப்போறோம். ஊர்வலம் போகும்  வரிசையை ஒட்டி செராங்கூன் சாலையில் இருந்து பிரியும் தெருக்களுக்குள் வாகனங்கள் போகமுடியாமல்  கம்பித்தடுப்பு வச்சுருக்காங்க.  முதல்நாள் இரவு முதல்  மற்ற நாள் விடிகாலை 3 மணி வரை  வாகனங்களுக்கு அங்குபோக அனுமதி இல்லை.


சாலையைக் கடக்க நிற்கும்  பாதசாரிகளை  பத்து நிமிட்டுக்கு ஒருமுறை  தொண்டர் சிலர் போக்குவரத்தை நிறுத்திட்டு கடத்தி விடறாங்க. நல்ல வேலை!  இல்லைன்னா நம்மாலே கோமளவிலாஸ் போயிருக்க முடியாது:-)

ஊர்வலத்தையொட்டிய நடைபாதையில் அங்கங்கே தண்ணீர் (பந்தல்)  விநியோகம். அரை லிட்டர் குடி நீர் போவோர் வருவோர் அனைவருக்கும்  'அய்யா குடி, அம்மா குடி'தான்!  சில இடங்களில்  வாட்டர் அண்ட் கேஸரி!  நைஸ்:-)




ஊர்வலத்தில் நம்ம இஸ்கான் பக்தர்கள் ஒரு குட்டி ரதம் இழுத்து வந்தார்கள்.  பலராமன், சுபத்ரா, க்ருஷ்ணர்  ரதத்தின் மேடையில்.  ப்ரஸாத விநியோகம் உண்டு. எனக்கு  ஒரு பிஸ்கெட்டும் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையும் கிடைச்சது.  தோள்ப்பையில் போட்டு வச்சேன்:-)

சிலர் சின்ன சப்பரம் போல்  உள்ளதை அவரவர் குலதெய்வத்தின்  படங்களாலும் அடையாளப்பொருட்களாலும் அலங்கரிச்சு   முதுகில் குத்திய  கொக்கியின் தொடர்பாய் வரும்  கயிற்றால் சப்பரத்தை இழுக்கறாங்க. வைணவத்தின் அடையாளங்களான  சங்கு சக்ர திருமண் அலங்காரத்துடன் பக்தர் ஒருவர் ஊர்வலத்தில் போறார்.

பால்குடம் ஏந்தும் பக்தர்கள் மட்டும்  சீருடை போல மஞ்சள் நிற சல்வார் கமீஸ் போட்டுருக்காங்க. ஆண்களும் பால்குடம் தலையில் ஏந்திப்போறாங்க. ஆனால் பெண்கள் யாரும் காவடி தூக்கலை!

பக்தர்களின்  அர்ப்பணிப்பும், ஆவேசமும், இறை நம்பிக்கையும் கண்டு மனசு  அதிர்ந்தது  உண்மை!  கொஞ்சம் விட்டிருந்தால் நானும் கூட்டத்தோடு நடந்து போயிருப்பேனோ என்னவோ!

காலில் செருப்பில்லாமல், இல்லை காலணியோடு  இப்படி எந்தவிதமான  கட்டுப்பாடுகளும் இல்லாமல்  சனம் மனசுக்குப் பிடிச்சமாதிரி  போகுது! வேண்டுதல் வேண்டாமை இலனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? பக்தியை மட்டும்தானே பார்க்கிறான்! வெளிவேஷம் எப்படி இருந்தால்தான் என்ன?

அங்கங்கே சில அயல்நாட்டவரும் பால் சொம்பைக் கையில் பிடிச்சுக்கிட்டு கூட்டத்தோடு நடந்து போறாங்க.  பால் சொம்புன்னதும்  சொப்பு மாதிரி இருக்கும்  சின்னச்சின்ன குடங்களில் பால் நிரப்பி அவைகளை  முதுகு முழுதும்  கொக்கிகளில் குத்தித் தொங்கவிட்டுக்கொண்டு  சிலர்.   எலுமிச்சங்காய்களை வரிசையா குத்தித் தொங்கவிட்டுப்போகும் சிலர் இப்படி வகைவகையாக பக்தர்களின்  வேண்டுகோள் சிலிர்க்கத்தான் வைக்கிறது!

வழக்கமாகப்போகும் பெருமாள் கோவில் முன்வாசலில் அன்று  நுழைய அனுமதி இல்லை. பக்கத்துலே பெருமாள் ரோடில் போய்  வலப்பக்கம் ரேஸ்கோர்ஸ்  சாலையில்  திரும்பி  அதுலே நடந்து போனால் நமக்கு வலப்பக்கம்  ஒரு பெரிய வாசல் கேட் உண்டு. இது நம்மபெருமாள் கோவிலின்   பின்பக்கத்து வாசல். இதுநாள்வரை இதன் வழியா நாங்க போனதே இல்லை!   தைப்பூசம் தினத்தன்று  சிங்கையில் உள்ளதே நமக்குப் புது அனுபவம் . அய்க்கோட்டே!!!!

அதில் நுழைஞ்சால்  சிறுசும் பெருசுமா வரிசையாக  காவடிகள். அந்தந்தக் குழுவினர்  தங்கள் காவடிகளை வச்சு, இன்னும் சில மங்கலப்பொருட்களுடன் பூசை போடறாங்க. பூசைமுடிஞ்சதும் அதைத் தூக்கிப் போறவர் தோள்களில் ஏற்றி கம்பி அழுத்தாமல் இருக்க ரெண்டு குட்டி மெத்தைகளை  இரு தோளிலும் வைக்கிறாங்க.  இனி வேலின் கடைசியில் உள்ள  சங்கியில் கோர்த்த  கொக்கிகளை  முதுகின் தசையில்  குத்திப்பிடிப்புக்குன்னது   தொடங்குது.  நிறைய திருநீறை  கொக்கி புகும் இடங்களில் பூசிவிட்டு சரக் சரக் என்று  ஒருத்தர் குத்தி வைக்கிறார்.  இந்தக் கலையில் இவர் நிபுணராக இருக்க வேணும்!  எத்தனை வருசப் பயிற்சியோ!

சீனர் ஒருவருக்கு அலகு குத்திக் கொண்டிருந்தார்கள். அவர் மனைவி விபூதித் தட்டுடன்!  என்ன நேர்த்திக்கடனோ!


ஒருமுறை  பங்குனி உத்திரம் சமயம் நானும் மகளும் சிங்கையில் இருந்தோம்.  வீரமாகாளியம்மன் கோவில் அடுத்து ஒரு காலி இடம் அப்போ. அங்கெதான்  இந்த கைலாஷ் பர்பத் இப்போ கட்டி இருக்காங்க. அங்கே  அலகு குத்திக்கிட்டு இருந்த  சிலரைப் பார்த்ததும் மகளின் முகம் போன போக்கைப்பார்க்கணுமே! பயந்துட்டாள் இப்படி சாமி கும்பிடுவாங்களான்னு!   பக்தி என்பது ஒரு போதைன்னு சொல்லிவச்சேன்.

காவடி தோளில் நல்லபடியாக  அமை(மர்)ந்ததும்  நம்ம சீனுவின் முன் பிரகாரத்தில் வந்து  கொடிமரத்தின் முன் கொஞ்சம் ஆடிவிட்டக் கோவிலை வலம் வந்தபின், செரங்கூன் சாலையில் ஊர்வலம் நகர ஆரம்பிக்கிறது. நேற்று இரவு முதல் கோவில் அடைக்கவே இல்லை.  மருமானுக்குப்போகும் பால்குடம், காவடி சமாச்சாரங்களைப் பார்த்து அருள் ஆசி வழங்குவதில்  ஒன்னரைநாள் பயங்கர பிஸி நம்ம சீனு! 

தண்டபாணி கோவில்  இங்கிருந்து ஒரு நாலு   கிமீ தூரத்தில் இருக்கு.  செராங்கூன் சாலையில்  முஸ்தாஃபா கடந்து,  காளியம்மன் கோவில் வாசலில் தேங்காய் உடைத்துக் கும்பிட்டபின் டெக்கா மால் வரை போய்  Rochor Canal Road   தாண்டி  நேரா Dhoby ghat   கடந்து Clemenceau Avenue வழியாக Tank Road கோவிலுக்குப் போறாங்க.  இந்தக் கோவில் முதல் அந்தக் கோவில் வரை  போகும் வழியெல்லாம் கம்பித்தடுப்பு வச்சு நடந்து போகும் பக்தர்களுக்கு  எந்த  ஆபத்தும் இடிபாடும் வராம வசதிகொடுத்த  அரசை பாராட்டத்தான் வேணும்.

டேங்க் ரோடு தண்டாயுதபாணி தரிசனத்துக்கு இங்கே க்ளிக்கவும். நம்மவீடுதான் தைரியமா வாங்க.
Nantri:
thulasidhalam.blogspot

No comments: