கோடையின் கொடுமை - செ பாஸ்கரன்

.

பருவ காலங்கள் பலகண்டு
மகிழ்ந்திருந்த என் மனது
கோடைகாலத்தின் வருகை கண்டு
குதூகலிக்கவில்லை
வந்த வேகத்தில் வாரி அணைத்து
வாயில் போட்டது
தீநாக்கின் திமிங்கிலங்கள்
நேப்பியன் நதியும்
வானுயர்ந்த மலைகளும்
தீநாக்கின் தழுவலினால்
கருகிச் சிதைந்தது
ஆயுத அரக்கனால் அகதியாகாத
என்நாட்டு மக்கள்
தீ அரக்கனின் தீண்டுகையில்
குடியிருக்க குடிலற்றுப்போனார்கள்
நெருப்பரக்கனின் பெருமூச்சு
காற்று வெளியெங்கும்
புகையாய் எழுந்தாட
கோபத்தில் கதிரவனும்
கொப்பளித்து சிவந்து நின்றான்
கோடை வருகையின் பொல்லா முகத்தை
பொருட்களின் அழிவோடு மட்டுமல்ல
வீடுகளின் எரிவோடும்
பார்த்து கண்ணீர் விடுகின்றோம்.

1 comment:

Anonymous said...

அருமை!
கோடையின் கொடுமை அல்ல,
கவிதையின் இனிமை!
- பாடும் மீன்