தமிழ்மொழிபோல் வாழ்க



முத்தமிழின் சுவை மணக்கும் மூதறிஞர் பலர் வழங்கும்
எத்தனையோ துறைசார்ந்த எண்ணங்கள் நிறைந்திருக்கும்
வித்தகர்கள் வீசுகின்ற விவாதங்கள் கனல்பறக்கும்
தத்திநடை பயிலிளவல் சகலருக்கும் களம் அமைக்கும்
கொத்துமலர் போலவண்ணக் கோலம்பல கொண்டிருக்கும்;
புத்தம் புதுப்பூவாய் திங்கள்தோறும் இதழ்விரிக்கும்
கத்தும் கடல்தாண்டிக் கண்டமெல்லாம் தமிழ் பரப்பும்
அத்தனைக்கும் “தமிழ்முரசை” அன்போடு வாழ்த்துகின்றேன்.


தமிழினத் திற்கறிவூட்டும் தக்கதொரு சுடராக
தமிழ் மொழியின் சிறப்புணர்த்தும் தளராத விளக்காக
அமுதெனவே தமிழ்பருகும் ஆர்வலர்க்கு விருந்தாக
தமதறிவை, அனுபவத்தைத் தரணிக்குப் பயனாக்கும்
தமிழாய்ந்த பெரியோர்க்குத் தக்கதொரு வடிகாலாய்
அமைவுற்று நான்காவ தாண்டினிலே நடைபயின்று
இணையத்தில் வருகின்ற இன்னிதழே! தமிழ்முரசே!
எமதன்னைத் தமிழ்போல என்றென்றும் வாழியவே!!


பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


No comments: