மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 8


.
                                                                                         பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 8

தூது செல்லல்


இந்தப் பகுதியி;ல் பெண்கேட்டுத் தூது செல்வதுபோன்ற சில பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவள் குங்குமப் ப+ப்போல செந்நிற அழகி.  வாளிப்பான உடற்கட்டுக் கொண்டவள்.  பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் பருவ அழகு நிரம்பப் பெற்றவள்.  பலருக்கு அவளிலே ஒரு கண்.  அந்த ஊர்ப் பணக்காரர் ஒருவருக்கும் அவளிலே தீராத ஆசை.  மாடு-கன்று, தோட்டம்-துரவு, நன்செய்- புன்செய் என்று நிறையச் சொத்து அவருக்கு உண்டு.  இந்தச் சொத்துகளில் மயங்கி அவளைத் தனக்குக் கட்டிவைக்க அவளது பெற்றோர் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர் ஒரு பெண்மணி மூலம் தூது அனுப்புகிறார். இவ்வாறு வயதான பாட்டிமார் திருமணத் தூது செல்வது கிராமங்களில் வழமை.

அவளது தாய் வீட்டு முற்றத்திலே பாய் இழைத்துக் கொண்டு இருக்கிறார்.  தூது சென்ற பெண்மணி மெல்லச் சென்று  அவளருகே அமர்ந்து தான் வந்த காரணத்தை மறைமுகமாகச் சொல்கிறாள்

காலையில்லை மாலையில்லை
கடும் பகலும் சாமமில்லை
வாயில்வெள்ளைச் சுருட்டுடனே இந்த
வளவைச்சுற்றித் திரியுறாண்டி

ஊரிலுள்ள பணக்காரர் ஒருவர் உன் மகளுக்குக்காகச் சுற்றித் திரிகின்றார் என்பதைக் கூறிய அவள், பெண்ணின் தாயைக் கவர்வதற்காக மேலும் சொல்கிறாள்.

அட்டியலும் மோதிரமும்
அழகான றவுக்கைகளும்
வாங்கித் தருவாருனக்கு
வயதுமென்ன நாற்பதுதான்

உடனே மணப்பெண்ணின் தாய் கூறுகிறாள் இப்படி,

நாணல் ப+ப்போல
நரைத்தகிழவனுக்கு
கும்மாளம் ப+ப்போல இந்தக்
குமர்தானா வாழுறது?

தூது வந்த பாட்டி அனுபவம் உள்ளவளல்லவா? உடனே, இப்படிச் சொல்கிறாள் -

தங்கத்தால் சங்கிலியும்
தகதகென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டுப்
பகல் முழுதும் சற்றிவாறான்

பெண்ணின் தாய்க்கு இந்தச் சம்பந்தமே பிடிக்கவில்லை. சற்று வெறுப்பாகக் கூறுகிறாள்.

அத்தர் புனுகுகளாம்
அழகானபவுடர்களாம்
இஞ்சிதின்ற குரங்குபோல
இவருக்கேனோ இச்சொகுசு?

வந்த காரியம் சரிவராதுபோல் தெரிவதால் தூதுவந்த கிழவி வேறுவிதமாகக் கதைக்க முயல்கிறாள்.  மாப்பிளைக்குத்தான் சீதனம் கொடுப்பது வழமை.  இந்த மாப்பிள்ளை சீதனமில்லாமல் உங்கள் பிள்ளையை முடிப்பதுடன் உங்களுக்கு அன்பளிப்பும் செய்வார் என்று சற்று இதமாகக் கேட்கிறாள்.

சட்டிவரும் பொட்டிவரும்
பொட்டகத்தில் ப+ட்டிவரும்
வண்ணக் குதிரையிலே
மாப்பிள்ளையும் கூடவரும்

ஏழவண நெல்லும்
எருமைமாடு கண்டுகளும்
தாறதுதான் உங்களுக்குச்
சம்மதமோ சொல்லிடுகா

தாய்க்குக் கோபம் வந்து விடுகிறது.  இருந்தாலும் வாசலுக்கு வந்தவளை அதுவும் தூதாக வந்தவளை கோபத்தோடு ஏசுவது பண்பாடல்ல என்பதால் இப்படிப் பாடுகிறாள்.

காலக் கொடுமையிது
கலிபுரண்டு போச்சுதடி
நாலுதுட்டுக்காசு இப்போ
ஞாயமெல்லாம் பேசுதடி

மேலும் அந்த மாப்பிள்ளையின் இலட்சணங்களை அடுக்காகக் கூறுகிறாள்.

கச்சான் அடித்தபின்பு
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலுமயிர்
ஓரமெல்லாம்தான் வழுக்கை

முப்பத்திரெண்டிலேயும்
மூணுபல்லுதான் மீதி
காகக்கறுப்பு நிறம்
ஒரு காலும் பிசகாமே

கண்ணுமொரு பொட்டை
காதுஞ் செவிடாமே
குருத்தெடுத்த வாழைபோல
கூனிவளைஞ் சிருப்பார்

விட்டாளா தாய்...தன் வெறுப்பையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறாள் இறுதியில் தன்மகளைப் பெண்கேட்டு வர அவருக்கு என்ன தகுதி என்ற தோரணையில் இப்படிக் கேட்கிறாள்.

சுட்டகட்டைபோல அவன்
சுடுகாட்டுப் பேய்போல
அட்ட முகறன் என்ர,
அடுப்படிக்கும் ஆகுமோகா

இழைத்த பாயைத் தூக்கித் தட்டி, சுற்றிக் கொண்டே அவள் இவ்வாறு கேட்டதும், தூதுவந்த கிழவி முணுமுணுத்துக் கொண்டு வெளியேறுகிறாள்.

No comments: