இணையில்லா வரகவியே எங்களது அருணகிரி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்   
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




கந்தருக்கு அலங்காரம் 

கந்தருக்கு அனுபூதி

கந்தருக்கு அந்தாதி

தந்துநின்றார் அருணகிரி

வேலவனின் வாகனத்தை

வேலவனின் கொடியதனை

வேலவனின் வேலதனை

விருத்தமாய்  எமக்களித்தார்  ! 

 

தாளமொடு தமிழ்பாட

ஆழநிறை சொல்லமைத்து

நீளமுள்ள கவிதைகளாய்

நெக்கருக  உவந்தளித்தார்

செந்திலவன் திருவடியை

சந்ததும் நினைப்பதற்கு

சந்தமதைத் தமிழாக்கி

தந்துநின்றார் அருணகிரி  !

 

பக்தியொடு தத்துவத்தை

பாடினின்றார் சந்தத்தில் 

கையாண்ட  சந்தங்கள்

கந்தனருள் பெற்றனவே 

எங்கள் தமிழிலக்கியத்தில்

சந்தமழை சிந்துகவி

அருணகிரிக் கவிமேகம்

அள்ளியே தந்ததுவே  !

 

இலக்கியத்தில் இசைபுகுத்தி

திருப்புகழை எமக்களித்த

இணையில்லா வரகவியே

எங்களது அருணகிரி 

திருப்புகழைப் பாடிடுவார்

திருமுருகன ருள்பெறுவர் 

அருணகிரி தமிழருந்தி

ஆன்மீகவழி நடப்போம் ! 


No comments: