உழைப்பை மதித்திடுவோம் ஓரணியாய் வாருங்கள் !

 


மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்  மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

       

ஊசிமுதல் உணவுவரை

உழைப்பாலே வருகிறது

உழைக்கின்றார் வாழ்வெல்லாம்

உயர்வுபெற மறுக்கிறது

காசுள்ளார் கைகளிலே

உழைப்பெல்லாம் போகிறது

கவலையுறும் உழைப்பாளி

கண்ணீரில் மிதக்கின்றான் !

 

சமத்துவங்கள் பேசுகிறார்

சங்கங்கள் அமைக்கின்றார்

நினைத்தவுடன் மாநாடு

நிறையவே வைக்கின்றார்

அனைத்துமே உழைக்கின்றார்

அனுசரணை என்கின்றார்

ஆனாலும் உழைக்கின்றார்

அல்லலிலே இருக்கின்றார் !


வியர்வையிலே தொழிலாளி

வேதனையில் தொழிலாளி

நலமிழந்து கிடக்கின்றான்

நயமெதுவும் காணவில்லை

முதலீட்டும் முதலாளி

தலைநிமிர்ந்து நிற்கின்றான்

முழுதுழைக்கும் தொழிலாளி

நிலையிழந்து தவிக்கின்றான் !



பணமெண்ணும் மனமகன்று

மனமெண்ணும் நிலைவேண்டும்

உழைப்பதனை உயர்வென்று

உணர்த்தியே விடவேண்டும்

உழைத்திடுவார் இருப்பிடங்கள்

உயரவெண்ணும் உளம்வேண்டும்

உழைப்பாளி முதலாளி

ஓரணியாய் வரவேண்டும் !

 

வளமாக வாழ்வதற்கு

வழிசமைக்கும் தொழிலாளி

நிலமீது நிம்மதியாய்

தலைநிமிர வழிவேண்டும்

வளமீட்டும் முதலாளி

மனமகிழ வைத்துவிடும்

வாழ்வளிக்கும் தொழிலாளி

வாழும்நாள் வரவேண்டும் !

 

உழைக்கும் கைகளென்றும்

உயர்வினைப் பெறவேண்டும்

உழைப்பினை மதித்திடும்

உளமது எழவேண்டும்

உழைப்பினால் உலகமே

உயர்ந்திடும் தன்மையால்

உழைப்பவர் நலத்தினை

உயர்த்தியே போற்றுவோம் !

 

உழைப்பை மதிக்கும்நாள்

உன்னதமே உலகினுக்கு

உழைப்பை மதிக்கும்நாள்

உயர்வினையே உணர்த்திவிடும்

உழைப்பை மதிக்கும்நாள்

உழைப்பாளர் மகிழ்ந்திடுவார்

உழைப்பை மதித்திடுவோம்

ஓரணியாய் வாருங்கள் !

No comments: