ஆல முண்ட ஆண்டவனே அவர் அவலம் போக்கிவிடு !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




வளர்ந்து வந்த நாடாக
வரைபடத்தில் இடம் பிடித்து
மருத்துவத்தில் பல கண்டு
வானுயர வாழ்த்துப் பெற்ற

பாரதத்தின் நிலை காண
பதை பதைப்பு வருகிறது
பாதை எலாம் ஓலமிடும்
மக்கள் துயர் பெருகிறது  ! 

 

அலை இரண்டின் எழுச்சியதால்
அவலங்கள் பெருகி நின்று
அல்லல் படும் மக்களினை
ஆர் அணைக்க வருவாரோ !

ஆக்கிசனை தேடி மக்கள்
அலைந் தலைந்து ஓடுகிறார்
அல்லல் உறும் மக்கள்தமை
ஆர் காக்க வருவாரோ !

பரா மரிக்கும் மருத்துவர்கள்
பரி தவித்து நிற்கின்றார்
பால் அருந்தும் பாலகரும்
மருந் தின்றி தவிக்கின்றார் !

அம்புலன்சு கொண்டு வரும்
அவஸ்த்தைப் படும் பலபேரும்
ஆர்வருவார் என ஏங்கி
அதற் குள்ளே மாழுகிறார் !

பரா மரிக்க வழியின்றி
படுக்கும் நிலை பாதையிலே
பதை பதைத்து துடிதுடித்து
பாதை எலாம் மரணங்கள் !

கூட வந்த உறவுகளை
பாதையிலே போட்டு விட்டு
ஓலமிடும் மக்கள் குரல்
உலக எலாம் கேட்கிறதே !

கொண்டு வந்த உறவுகளை
கொள்ளை கொண்ட சூழலிலே
தன்னிலமை தனை இழந்து
தவிக்கின்றார் மக்கள் இப்போ !

கூட்டி வந்த உறவுகளை
வாட்ட உறும் மனத்துடனே
நாட்டம் இன்றி தீயிட்டு
நகரகங் கண்டு தவிக்கின்றார் !

ஓலம் இடும் மக்களுக்கு
உற்ற துணை வரவேண்டும்
ஆல முண்ட ஆண்டவனே
அவர் அவலம் போக்கிவிடு !

No comments: