இறைநிலைக்கே உயர்ந்து விட்டாள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா


   [ சர்வதேச மகளிர் தினத்துக்காக இக்கவிதை சமர்ப்பணம் ] 

         பொறுமைக்கு இலக்கணமாய் 
         புவிமீது வந்திருக்கும்
image1.JPG         தலையாய பிறவியென 
         தாயவளும் திகழுகிறாள் 
         மலையெனவே துயர்வரினும் 
         மனமதனில் அதையேற்று 
         குலையாத நிலையிலவள் 
         குவலயத்தில் விளங்குகிறாள்
       
          சிலைவடிவில் கடவுளரை 
         கருவறையில் நாம்வைத்து
         தலைவணங்கி பக்தியுடன் 
         தான்தொழுது நிற்கின்றோம் 
         புவிமீது கருசுமக்கும் 
         கருவறையை கொண்டிருக்கும்
          எமதருமை தாயவளும் 
         இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள் 

           பெண்பிறவி உலகினுக்கே 
           பெரும்பிறவி எனநினைப்போம்
           மண்மீது மகான்கள்பலர் 
           கருசுமந்த பிறவியன்றே 
           காந்திமகான் உருவாக
           காரணமே தாயன்றோ 
           சாந்தியொடு சமாதானம்
           சன்மார்க்கமும் தாய்தானே 


           பெண்புத்தி  தனைக்கேட்டால்
            பின்விளைவு நன்றாகும்
           நன்புத்தி நவில்பவளே 
           நம்முடைய தாயன்றோ 
           துன்மதிகள் தானகல
           துணிச்சலுடன் நின்றிடுவாள் 
           துயர்துடைக்கும் கரமாக 
            துணையாக அவளிருப்பாள் 

            வாழ்க்கைக்கு துணையெனவே
            வந்தவளே பெண்ணன்றோ
            வள்ளுவரே இச்சொல்லை
            வண்ணமுற கொடுத்தாரே 
            வாழ்வென்றும் வசந்தமாய்
            ஆக்குவதும் பெண்தானே
            வையகத்தில் வாழ்வாங்கு
            வழங்குவதும் பெண்ணன்றோ 

            பெண்மையைப்  போற்றிடா
            மண்ணுமே உருப்படா
            பெண்மையை வெறுத்திடும்
            வாழ்க்கையே விடிந்திடா
            பெண்மையே மண்ணினில்
            பெருங்கொடை  ஆகுமே
            பெண்மையை தெய்வமாய்
            போற்றியே வாழுவோம் 
            

              

      
             
  
            



No comments: