நன்றியுணர்ச்சி ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்

image2.JPG
.
        
          கோடியைக் கொடுத்து நிற்போம்
              கொடைதனில் சிறந்து நிற்போம்
          வாடிய வாட்டம் காணில்
                மனமெலாம் இரங்கி நிற்போம்
          கூடிய மட்டும் நல்லாய் 
               குணமுடன் நடந்தே நிற்போம் 
         ஆருமே சொல்ல மாட்டார்
             அதன் பெயர் நன்றியாகும் ! 
  
                        
       பிள்ளையின் பின்னால் நின்றாலும்
           பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்
      கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்
            கருணையுடன் கடமைகளைச்  செய்தாலும்
     உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்
            ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்
     நல்லவரே எனும்நினைப்பும் வாராதே
          நன்றியுணர்வு என்பதுவுமே   மலராதே !


      நாடுமொழி இனம்காத்த பெரியவர்கள் 
          நலம்துறந்து நலிந்துநின்ற மூத்தோர்கள்
      வாழ்வெல்லாம் பிறருக்காய் உழைத்தவர்கள்
             வதைபட்டு அடியுண்ட தியாகிகள்
      நோயுண்டார் தனைப்பாக்கும் நல்மனத்தார்
              நொருங்குண்டார் தனைத்தேற்றும் பெருமனத்தார்
        வாழ்நாளில் காணாத ஒன்றென்றால்
                 வாராத நன்றியுணர் வொன்றேயாம் !


      பிள்ளைகளைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள்
             பேணிநின்று வளர்திடுவார் பெரும்பொறுப்பாய் 
     இல்லையெனச் சொல்லாது கொடுத்திடுவார்
             எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள்
      அள்ளவள்ள   நீரூறி   வருமெனவே 
              அவர்கனவு கண்டுநிற்கும் வேளைதனில் 
      உள்ளமதை ஒருபக்கம் வைத்திடுவார்
           ஒருநாளும் நன்றிதனை உரைக்கமாட்டார் ! 


       எமைப்படைத்த   இறைவனுக்கு நன்றிசொல்வோம்
           எமையீன்ற பெற்றவர்க்கும் நன்றிசொல்வோம் 
       எழுத்தறிவை ஊட்டியெம்மை உயர்த்திவிட்ட 
            எங்குரவர் யாவர்க்கும் நன்றிசொல்வோம் 
       உதவிநிற்கும் கரங்களுக்கும் நன்றிசொல்வோம் 
           உடனுறையும் நட்பினுக்கும் நன்றிசொல்வோம்
       உணர்வில்லா மனிதர்களாய் வாழுவோரே 
            நன்றியெனும் உணர்ச்சியினை நசுக்கிவிட்டார் !



                         

             



No comments: