வாய்க்கும் நல்லதீபாவளி - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

  இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
  மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
  நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
  நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

       புலனெல்லாம் தூய்மைபெற
       புத்துணர்வு பொங்கிவர
      அலைபாயும் எண்ணமெலாம்
       நிலையாக நின்றுவிட
       மனமெங்கும் மகிழ்ச்சியது
       மத்தாப்பாய் மலர்ந்துவிட
       வாசல்நின்று பார்க்கின்றோம் 
       வந்திடுவாய் தீபாவளி !

       பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
       தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
       கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
       இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

        தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
        தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம் 
        தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
        தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !


        ஓலைக் குடிசையிலும் ஒழுகிநிற்கும் வீட்டினிலும்
        கூழைக் குடித்தாலும் குறையெனவே எண்ணாமல்
        வாழக்கிடைத்ததை வரமாக எண்ணி நிதம் 
        வாழ்கின்றார் மகிழ்ந்துவிட வந்திடட்டும் தீபாவளி !

         ஏழையொடு பணக்காரர் எல்லார்க்கும் தீபாவளி 
         வாழ்வினிலே வருவதனை வையகத்தில் பார்க்கின்றோம்
          வசதிபல வந்தாலும் மனமகிழ்ச்சி வரவேண்டும்
          மனநிறைவு பெற்றவர்க்கே வாய்க்கும் நல்லதீபாவளி !

No comments: