மலர்ந்துவிடச் செய்துநிற்போம் ! - எம் . ஜெயராமசர்மா... மெல்பேண் ..

.

                 கடவுளில் காதல்  கொள்ளு 
                 கல்வியில் காதல்  கொள்ளு
                 கடமையில் காதல் கொள்ளு 
                 காதலில் காதல்   கொள்ளு
                 இடர்தரும் விதத்தில் காதல்
                 எற்படும் பொழுது ஆங்கே 
                 குறையுனை வந்தே சேரும்
                 குழப்பத்தில் இருப்பாய் நாளும் !

                 ஒருதலைக் காதல் செய்தால்
                 உளமெலாம் வருத்தம் சேரும்
                 நிலவதைப் பார்க்கும் போதும்
                 நெருபென நினைக்கத் தோன்றும்
                 அளவிலா துன்பம் அங்கே 
                 அகத்தினை உடைத்தே நிற்கும்
                  ஒருதலைக் காதல் என்றும்
                 உயிருக்கே ஊறாய் நிற்கும் ! 


                கதைகளில் காதல் வந்தால்
                கற்பனை என்று சொல்வோம்
                கம்பனின் காதல் பார்த்து
                கவிநயம் என்றே சொல்வோம்
                கன்னியின் காதல் யாவும்
                காளையர் காதல் யாவும்
                எண்ணிடும் போது நெஞ்சில்
                ஏக்கமாய் இருக்கு திப்போ !

                கயவரிடம் காதல் போனால்
                கண்ணியத்தை இழந்து நிற்கும்
                காதல் என்னும் பெயராலே
                மோதலங்கே வெடித்து நிற்கும் 
                பேதலித்து நிற்கும் அவர்
                பேய் எனவே மாறிடுவர்
                காதலினால் கொலை செய்து
                கருணையினை ஒழித்து நிற்பார் !

                ஒருதலைக் காதலால் உருக்குலைந்து போகாதீர்
                அழிதலைச் செய்கின்ற அரக்கராய் மாறாதீர்
                காதலென்னும் புனிதத்தை களங்கமெலாம் ஆக்காதீர்
                காதலினை போற்றுங்கள் கண்ணியமாய் பார்த்திடுங்கள் !

                 மனிதனது வாழ்வினுக்கு மாமருந்தாய் வந்ததுதான்
                 மாண்புடைய காதலென மனங்களிலே கொண்டிடுவோம்
                 மரணமதைத் தருகின்ற வழியிலதை ஆக்காதீர்
                 மனமெல்லாம் நற்காதல் மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !