மாநிலத்தில் ஊனமுற்றோர் ! - எம் . ஜெயராமசர்மா ... அவுஸ்திரேலியா

.

   
       பார்வையற்றோர் குறையெதையும் பார்க்காது இருந்திடுவர்
       செவிப்புலனை இழந்தவரோ குறைகேட்கா இருந்திடுவார்
       கையற்றோர் தீயவற்றை தொட்டுவிடா திருந்திடுவார்
       இத்தனைகள் குறையிருந்தும் இவர்நிறைவா யிருப்பார்கள் !

       அழகான கண்ணிருக்கும் அகன்றபெரும் செவியிருக்கும்
       திடமான கையிருக்கும் திரண்டபெரும் உடலிருக்கும்
       வரமாக இவையிருந்தும் வண்ணமுற இருக்காது
       வசைபாடிக் குறைசொல்லி வாழ்நாளைக் கழித்திடுவார் !

       ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு எம்படைப்பே
       பகுத்தறியும் பேரறிவை படைக்கையிலே புகுத்திவிட்டான்
       குறையற்ற உடல்கிடைத்தும் குறைசொல்லி இருந்துவிடின்
       எமைப்படைத்த இறைவனுக்கே ஏற்குமா எண்ணிடுங்கள் !

       குறைகள்பல கொண்டிருப்போர் குறைபற்றி நினைக்கவில்லை
       குறையற்ற உடலுடையோர் குறைகளிலே உறைந்துவிட்டார் 
       கறையற்ற வாழ்வினைநாம் காணவேண்டு மெனநினைத்தால்
       நிறைவாக நினைப்பதற்கு எமைமாற்றல் வேண்டாமோ !

       வெள்ளத்தின் நிலையுயர மெள்ளமெள்ளப்  பூவுயரும்
       உள்ளமது உயர்வுபெறின் கள்ளமுடை நிலையகலும் 
       நல்லதென பார்க்கின்ற நற்பார்வை வளர்ந்துவிட்டால் 
       கள்ளமது கழன்றகன்று கண்ணியமே வந்துநிற்கும் !

       ஊனமுற்றோர் என்றுசொல்லி ஒதுக்கிவிட முயலுகின்றோம்
       உடலினால் ஊனமுற்றோர் ஊனமுற்றோர் ஆகார்கள் 
       ஆணவத்தின் வசமாகி அறம்தவறி நடப்பவரே 
       மாநிலத்தில் ஊனமுற்றோர் ஆகிடுவார் வாழ்வினிலே !