மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 2


.
வரலாற்று நாடகம்
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)
(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)
(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

காட்சி 2
களம்:- சிற்றரசன் கவந்தீசனின் அரசவை
பங்கு கொள்வோர்:- அரசன் கவந்தீசன்
அமைச்சர்
துட்டகைமுனு
அரசவையினர்

(அமைச்சர் ஓலையை வாசிக்கிறார். அரசர் பலத்த சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்கமாக உலாவுகிறார்)

கவந்தீசன்:- என்ன செய்வது மந்திரியாரே! எல்லாளனின் வலிமையையும் நாம்
எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளதே.

அமைச்சர்:- உண்மைதான் மன்னவா. இந்த ஓலையின்படி எல்லாளன் நிச்சயம் நம்மீது
படையெடுப்பான். அவனது படையெடுப்பைத் தடைசெய்வதற்கு திறைசெலுத்துவதைத் தவிர வேறுவழி இல்லை.



கவந்தீச மன்னன்:- திறைசெலுத்துதல் முறையானதுதான். ஆனால் முன்னர் திறை
கொடுப்பதை நிறுத்தினோம், பின்னர், படைஎடுப்பதைக் கண்டு பயந்துவிட்டோம் என்று நமது வீரத்தைப்பற்றி எல்லாளன் குறைவாக எண்ணிவிடுவானே என்று தான்...

அமைச்சர்:- இல்லை மன்னவா. எல்லாளன் ஒருபோதும் அப்படி எண்ணமாட்டான்.
மாற்றான் வலிமையையும் மதிக்கின்றபண்பு அவனுக்கு உண்டு. அத்துடன், நாட்டு மக்களின் நன்மையைத்தான் நாம் கருதவேண்டும். திறையைச் செலுத்தி விட்டால் போரைத் தவிர்க்கலாம். போரைத் தவிர்த்துவிட்டால் பல வீரர்களின் சாவைத் தவிர்க்கலாம். அதன் மூலம் நாட்டு மக்களின் நல்வாழ்வைச் சிறப்பாக்கலாம். குடிமக்களின் நல்லாவாழ்வுதான் கோலோச்சும் அரசனின் குறிக்கோள் போர் அல்ல. ஆகவே நாம்...

கவந்தீசன்:- திறை செலுத்துவதே முறை என்கிறீர்...

அமைச்சர்:- அதில் பிழை ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை மன்னா.

கவந்தீசன்:- பிழையே அதில் இல்லை! அமைச்சரே! திறை செலுத்துவதற்கான
ஏற்பாடுகள் முறையாக நடக்கட்டும். நாளைப்பொழுது மறைவதற்குள் திறை எல்லாளனைச் சேர்ந்தாகவேண்டும்.

(துட்டகைமுனு சபைக்கு விரைந்து வருகிறான்)

துட்டகைமுனு:- அப்பா! எதற்குத்திறை? யாருக்குத்திறை? எல்லாளனுக்கா?
எழுதிவிடுங்கள் அவனுக்கு ஓலை, திறை இல்லை என்று. சச்..சச்..சச்..ச எல்லாளனுக்குத் திறை செலுத்தி மானங்கெட்டு வாழ்வதைவிட படைநடத்திச் சென்று அவன்கையால் மாள்வதுமேல். இந்தத் துட்டகைமுனு இருக்கும்வரை, அவனுக்குத் திறை செலுத்த ஒருக்காலும் விடமாட்டேன்.

கவந்தீசன்:- கைமுனு! உன் து~;டகுணத்தை இதிலேயும் காட்டாதே.

துட்டகைமுனு:- எதப்பா து~;டகுணம்? எல்லாளனுக்கு அடிபணிய மறுப்பதா
து~;டகுணம்? எம்மைத் திறை கட்டச்சொல்லுகின்ற எல்லாளனின் கொட்டத்தை அடக்க அவனது தலையை வெட்டநினைப்பதுவா து~;டகுணம்? இனியும் பொறுக்குமா நம் சிங்கள இனம்? அப்பா! எழுதிவிடுங்கள் ஓலை, போருக்குத் தயார் என்று. நடக்கட்டும்போர் அப்போது தெரியும் கைமுனு யாரென்று!

அமைச்சர்:- சண்டை கூடாது இளவரசே. சமாதானமே அனைவருக்கும் நல்லது.

துட்டகைமுனு:- அமைச்சரே! எது சமாதானம்? மாற்றானுக்குப் பணிந்து, மண்டியிட்டு,
திறைசெலுத்துவதா சமாதானம். அது அடிமை வியாபாரம். திறையும் வேண்டாம், போரும் வேண்டாம் என்று அவன் சொல்லட்டும். நல்ல தென்று நாமும் கொள்ளலாம். அதுதான் சமாதானம்.

கவந்தீசன்:- கைமுனு எல்லாளன் மாற்றானல்ல. மன்னர் மன்னன். இலங்கையின்
எல்லாப் பகுதிகளும் இன்று அவனது புலிக்கொடியின் கீழ்.

துட்டகைமுனு:- புலி...ஹ..ஹஹஹா பெரிய புலி. நம்மிடம் இருப்பது சிங்கக்கொடி.

கவந்தீசன்:- கைமுனு! எல்லாளனின் வலிமை தெரியாமல் நீ இப்படிப் பேசுகிறாய்.
சென்ற இடமெல்லாம் வென்ற புகழுடையவன் அவன்.

துட்டகைமுனு:- வென்றவன் என்பதற்காக எப்போதுமே வெல்வான் என்று எதிர்பார்ப்பது
பேதமை.

கவந்தீசன்:- வெற்றி தோல்வி நிச்சயமற்றது.

துட்டகைமுனு:- அதனால் தான் சொல்கிறேன், அனுப்புங்கள் ஓலை போருக்கு
ஆயத்தம் என்று. எமக்குத்தான் தோல்வி என்று என்ன நிச்சயம்? என்னைப் பொறுத்தவரை எமக்கு வெற்றி தான் நிச்சயம்.

அமைச்சர்:- வெற்றியும் தோல்வியும் எண்ணற்ற வீரர்களின் இறப்புக்குப் பின்னர்தான்
ஏற்படும் இளவரசே?

துட்டகைமுனு:- வீரர்கள் இறப்பது போரிலே சகஜம்.

அமைச்சர்:- ஆனால், அதனால் மக்களுக்கு அவலம்.

துட்டகைமுனு:- மக்களைப்பற்றி இதிலே நினைப்பது கேவலம்.

கவந்தீசன்:- கைமுனு! முட்டாள்தனமாகப் பேசாதே. மக்களுக்காகவே மன்னன்
என்பதை மனதிலே வைத்துக்கொள். அமைச்சர் கூறுவதுதான் சரி. அப்பாவி மக்களின் அமைதியான வாழ்வைக் குலைப்பதிலும் திறை செலுத்துவது எவ்வளவோமேல். அமைச்சரே! அப்போது நான் கூறியபடி அனைத்தும் நடக்கட்டும். இப்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

அமைச்சர்:- அப்படியே மன்னவா... அப்படியானால்...நான்...

கவந்தீசன்:- சென்றுவரலாம்.

துட்டகைமுனு:- அப்படியானால் உங்கள் முடிவு?

கவந்தீசன்:- திறை செலுத்துவதுதான் முடிந்த முடிவு.

துட்டகைமுனு:- ம்...பேடியின் முடிவு.

கவந்தீசன்:- (கோபமாக) கைமுனு!!!

துட்டகைமுனு:- (போனவன் இடையில் நின்று திரும்பிப் பார்த்து) இந்த முடிவை
மாற்றுவது???

கவந்தீசன்:- நான் மரணிக்கும்வரை நடக்காது.

துட்டகைமுனு:- இல்லை! நடக்கவேண்டும், நடத்தவேண்டும், நடத்திக்காட்டுவேன்.
உங்களின் பாட்டன் மகாநாமன் உரிமை இழந்து ஓடி ஒழிந்ததுபோதும். அன்றுதொட்டு நாம் அடிமைகளாகவே இருக்கின்றோம். அந்த நிலை மாறவேண்டும.; இன்று எல்லாளனின் புலிக்கொடி பறக்கும் இடமெல்லாம் நாளை நமது சிங்கக்கொடி பறக்கவேண்டும். அதுவே எனது இலட்சியம்.

கவந்தீசன்:- கைமுனு, வீண் கனவு காணாதே. விபரீதமாகப் பேசாதே. எல்லாம்
எனக்குத் தெரியும்.

துட்;டகைமுனு:- தெரியும்! யாருக்கு எதுதெரியும் என்பது போகப்போகப் புரியும்.
அப்போது தான் உண்;மைநிலை உங்களுக்குத் தெரியும்.

கவந்தீசன்:- கைமுனு! நிறுத்து உன்பேச்சை. வீணாக உளறாதே. என் கோபத்தைக்
கிளறாதே. என் கண்ணெதிரே நிற்காதே. இப்போதே போய்விடு இங்கிருந்து.

துட்டகைமுனு:- போகிறேன். இப்போதல்ல, இனிஎப்போதும் உங்கள் முன்
நிற்கமாட்டேன். என் செயலை நிறுத்தமாட்டேன். என்கனவை மறக்கமாட்டேன். என் இலட்சியத்தைத் துறக்கமாட்டேன், அதனை அடையாமல் விடமாட்டேன். அடையும்வரை உறங்கமாட்டேன். அதுவரை உங்கள் முன் விழிக்க மாட்டேன் போகிறேன்.

---திரை---

காட்சி 3
களம் - கவந்தீசனின் அரசவை
பங்குகொள்வோர்:- கவந்தீசன்
அமைச்சர்
வீரன்
அரசவையினர்

கவந்தீசன்:- வீரனே என்ன உண்விண்ணப்பம்?

வீரன்:- இளவரசர் கைமுனு அவர்கள் என்னைத் தங்களிடம் அனுப்பினார்.

கவந்தீசன்:- என்னவாம்?

வீரன்:- இதைத் தங்களிடம் கொடுத்து, இதைத்தான் தாங்கள் அணிவதற்குத்
தகுதியுடையவர் என்று தங்களிடம் கூறும்படியும் சொன்னார்.

கவந்தீசன்:- நான் அணிவதற்கா? என்ன அது?

வீரன்:- இதோ அரசே!
(அரசனிடம் துணியால் மூடிய ஒரு வெண்கலத் தட்டினைக் கொடுத்தல். அரசன் திறந்து பார்த்ததும் மிக்க கோபமடைதல்)

கவந்தீசன்:- ங் ஆ! பெண்களின் ஆபரணம்! என்ன தைரியம் அவனுக்கு? தந்தை
ஒருபுறம், மன்னன் மறுபுறம் என்று எண்ணாது என்னையே அவமானப் படுத்திய அந்தத் துட்டகைமுனு எங்கே? எங்கிருந்தாலும் சரி, அமைச்சரே! அவனை நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள்.

அமைச்சர்:- அர...சே...!

கவந்தீசன்:- சொன்னதைச் செய்.

அமைச்சர்:- அவர் தங்கள் மைந்தன்...

கவந்தீசன்:- என்பது நீர் சொல்லித்தான் நான் தெரிந்துகொள்ளவேண்டுமா? அவனுக்கு
இங்கு இடமில்லை. அரியணைக்கும் அவன் தகுதியில்லை. மக்களைத் துன்புறுத்துவதாக பற்பல புகார்கள் வந்தும் இக்காலம்வரை பொறுத்திருந்தேன். இன்று, என்னையே, அதுவும் அரச சபையிலேயே அவமானப்படுத்திய அவனுக்கு என்னவேலை இந்த நாட்டில்? விரட்டிவிடுங்கள் அவனை நாட்டைவிட்டு. துட்டகைமுனுவை இந்த நாட்டில் யாராவது அண்டவைத்தால் அவர்களது தலை துண்டாடப்படும் என்றும் தண்டோராப் போட்டுவிடுங்கள்.

அமைச்சர்:- அரசே...தங்கள் முடிவு.???

கவந்தீசன்:- நாட்டுக்கு உகந்தது, மாற்றமுடியாதது. இது என் ஆணை!
---திரை---


(மாமன்னன் எல்லாளன் மீண்டும் வருவான்)








No comments: