அகத்தில் வைத்துப் பூசிப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்  மெல்பேண் ....அவுஸ்திரேலியா




    தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு

        தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்

        ஊணுறக்கம் தனைமறப்பாள் ஒருகணமும்  தனையெண்ணாள்

        தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !



    பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது

       கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள் 

       பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றவளும்

       துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

 

       உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா  வண்ணம் 

       குட்டியாப் பொட்டுவைப்பாள் குழிவிழும் அக்கன்னமதில்

       கட்டியணைத் தணைத்து கற்கண்டே  எனவிழித்து

       தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

 

      ஏங்கித்  தவிக்கும்தாய்  இதையெல்லாம் எண்ணுகின்றாள்

      எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை 

      தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்

      ஏங்கித் தவிக்கவிட்டு இவனிங்கே மகிழுகிறான்  !

 

      தாயவளோ  காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்

      தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது 

      தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்

      தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

 

      காப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற

      கருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்

      கர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை

      கவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ !

 

      நோய்வந்து படுக்கையிலே நூறுமுறை கண்விழித்து

      பாய்மீதும் படுக்காமல் பஞ்சணையில் உறங்காமல்

      கண்விழிக்கும் காலம்வரை கண்ணுறங்கா இருந்தவளை

      காப்பகத்தில் விட்டுவிட்டு கண்ணுறங்க மனம்வருமா !

 

      பரிசுபெற வேண்டுமென்று பலகனவு கண்டவளை 

      உரிமையுடன் பாராமல் ஒதுக்கிடுதல் முறையாமோ

      கருவுற்ற நாள்முதலாய் பெற்றெடுக்கும் காலம்வரை

      எமைநினைத்து நின்றவளை ஏங்கவிடல் முறையன்றோ !

 

      அன்னைதனை அரவணையார் அகமகிழ வாழார்கள்

      அன்னையவள் அடிதொழுவார் அனைத்துமே பெற்றிடுவார்

      அன்னையது கண்ணீரால் அனைத்துமே அற்றுவிடும்

      அன்னையவள் தினமதனில் அவளாசி பெற்றுநிற்போம் !

 

      ஆர்மனதும் நோகாமல் வாழ்ந்துவந்த அன்னையவள்

      ஆருமற்ற வெறுமையிலே அழவிடுதல் முறயன்றோ 

      அன்னைதினம் கொண்டாடும் அனைவருமே கேளுங்கள்

      அன்னையது மனம்மகிழ அகத்தில்வைத்துப் பூசிப்போம் !


No comments: