புதிய அரசியல் வியூகத்தின் அவசியம்


06/07/2019 இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் அனைத்தும் முளையில் கருகிப் போயுள்­ளன. பய­னுள்ள வகையில் அவற்றை வளர்த்­தெ­டுத்து, முன்­னோக்கி நகர்த்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரால் போதிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதே­வேளை, அர­சியல் தீர்வு காணப்­ப­டு­வதை விரும்­பாத சக்­தி­களின் ஆதிக்கச் செயற்­பா­டு­களும் இந்த முயற்­சி­க­ளுக்குத் தடைக்­கற்­க­ளாக அமைந்­தி­ருப்­பதை மறுக்க முடி­யாது.
அர­சியல் தீர்­வென்­பது, நாட்டின் ஒட்­டு ­மொத்த நலன்­சார்ந்த தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தொரு விடயம் என்ற கண்­ணோட்­டத்தின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது. இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இரு கூர்­க­ளாகப் பிரிந்து செயற்­ப­டு­கின்ற தமிழ்த்­தரப்பும், சிங்­களத் த­ரப்பும் மேலாண்­மை­யு­டைய தனித்­து­வ­மான இன அடை­யாளம் அல்­லது தனித்­து­வ­மான அர­சியல் அடை­யா­ளத்தைத் தீவி­ர­மாக முதன்­மைப்­ப­டுத்திச் செயற்­ப­டு­கின்ற போக்கே அர­சியல் தீர்­வுக்­கான பெரும் முட்­டுக்­கட்­டை­. 
இன அடை­யா­ளமும், அர­சியல் அடை­யா­ளமும் அர­சியல் தீர்வில் தற்­போது வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்ற ஐக்­கிய இலங்கை என்ற பரந்­து­பட்ட கொள்­கையில் ஆதிக்கம் செலுத்தும் வரையில் அர­சியல் தீர்வு சாத்­தி­ய­மா­காது என்­பதை ஆழ­மாக மனதில்; கொள்ள வேண்­டி­யது அவ­சியம். 
தனித்­துவம் என்­பது நல்­லி­ணக்கம், விட்டுக் கொடுப்பு, இணக்­கப்­பாடு, அர­சியல் ரீதி­யான சகிப்புத் தன்மை என்­ப­வற் றின் அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்த தேசிய நலன்­களைக் கவ­னத்திற் கொண்­ட­தா­கவும், அந்த நலன்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் அமைய வேண்­டி­யதும் அவ­சியம். 
தேசியம் என்­பதும் இந்த நாட்டில் வாழ்­கின்ற அனை­வ­ரு­டைய அர்ப்­ப­ணிப்­புடன் கூடிய பங்­கேற்றல், பங்­க­ளிப்பு என்­ப­வற்றால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். நாடு சிறி­யதோ பெரி­யதோ அது முக்­கி­ய­மல்ல. நாட்டில் வசிக்­கின்ற குடி­மக்கள் அனை­வ­ருக்கும் அது உரித்­து­டை­யது என்ற பரந்த சிந்­த­னையே முக்­கியம்.
 பயன்­ப­டாத பட்­ட­றிவு
தனிக்­கு­டும்­பங்கள் எவ்­வாறு தனித்­து­வத்தைப் பேணிக் கொண்டு பிற குடும்­பங்­க­ளு­டனும், சமூ­கத்­து­டனும் இணைந்து வாழ்­கின்­ற­னவோ அதே­போன்று இனங்­களும், மதங்­களும் தமக்குள் தனித்­து­வத்தைப் பேணிக்­கொண்டு, அதற்­கான எல்­லை­களை வரை­ய­றுத்துக் கொண்டு பிற இனங்­க­ளு­டனும், மதங்­க­ளு­டனும் இணைந்து வாழ்­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும்.
 குடும்­பங்கள் சமூ­கங்­க­ளுடன் கொண்­டுள்ள இணைப்­பையும் பிணைப்­பையும் அடிப்­ப­டை­யாகக் கொண்ட வழி­மு­றையில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் முன் ­னெ­டுக்­கப்­பட வேண்டும். அத்­த­கையதோர் அர­சியல் முனைப்பே நிரந்­த­ர­மான தீர்வை எட்­டு­வ­தற்கு வழி­ச­மைக்கும்.
ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இத்­த­கைய பரந்­து­பட்ட சிந்­த­னையின் அடிப்­ப­டையில் அர­சியல் காரி­யங்­களை முன்­னெ­டுக்­கின்ற வல்­லமை கொண்ட அர­சி­யல்­வா­தி­களை நாட்டில் காண முடி­ய­வில்லை. 
இனப்­பி­ரச்­சி­னையைச் சூழ்ந்து பல்கிப் பெருகியுள்ள ஏனைய பிரச்­சி­னை­களில் இன்று நாடு குழம்பிப் போயுள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணத் தவ­றி­யதன் விளைவே முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த மோச­மான யுத்­தமும், அதனால் ஏற்­பட்ட பேர­ழி­வு­க­ளு­ம். 
வாழ்க்­கையில் பட்டுத் தெளி­வது அவ­சியம். அர­சியல் ரீதி­யாக பல்­வேறு சிக்­கல்­க­ள், சிர­மங்கள், கஷ்­டங்­க­ளையும் எதிர்­கொண்ட அனு­பவம் இந்த நாட்டு மக்­க­ளுக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் தாரா­ள­மாக உண்டு. 
ஆனால் அந்தப் பட்­ட­றிவைப் பயன் ­ப­டுத்தி நாட்டின் எதிர்­கால சுபிட்­சத்­திற்கும், எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நன்­மைக்கும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான சிந்­த­னையை அந்த அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும், மதத் தலை­வர்­க­ளி­டமும், சமூகப் பெரி­யார்­க­ளி­டமும் காண முடி­ய­வில்லை. இந்தச் சிந்­தனை ஒரு சில­ரிடம் மிக அரி­தாகக் காணப்­பட்­டாலும், அது ஒரு பெரிய வட்­டத்தில் விரி­வ­டைந்து செல்­வ­தற்­கான வாய்ப்­புக்­களைக் காண முடி­ய­வில்லை.
 இத்­த­கைய ஒரு           பின்­ன­ணியில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மா­னதோர் அர­சியல் தீர்வு காண்­ப­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. ஆனாலும் அதற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­களை மேற்­கொள்­ளாமல் இருந்­து­விட முடி­யாது. முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யது முக்­கியம்.
பேச்­சுக்­களும் போராட்­டங்­களும்
அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் உண்­மை­யான பற்று கொண்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து ஊற்­றெ­டுத்­தி­ருக்க வேண்டும். தேசிய நலன் கரு­திய செயற்­பா­டாக அது வெளிப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அத்­த­கைய முயற்சி இது­வ­ரையில் இதய சுத்­தி­யுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 
இந்த நிலைமை, நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் உண்­மை­யான பற்­று­கொண்­ட­வர்கள் இலங்­கையில் இல்­லையோ என்ற கேள்­வியை எழுப்­பு­கின்­றது. அத்­த­கைய நகர்வு மேற்­கொள்­ளப்­ப­டா­மைக்கு ஆயிரம் கார­ணங்கள் இருக்­கலாம்.
 ஆனால், இந்த முயற்சி பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் இருந்து முன்­னெ­டுக்கப் பட்­டி­ருக்க வேண்டும். அதற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான வேலைத்­திட்­டங்கள் அந்தத் தரப்பில் இருந்து மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­னவா?  
பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழ் மக்கள் தரப்பில் இருந்து, தமிழ் மக்­களின் அர­சியல் தரப்­புக்­களில் இருந்து அத்­த­கைய முயற்­சிகள் எத்­த­னையோ மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­னவே, இது தெரி­யாதா என்ற எதிர்க் கேள்வி எழலாம். இல்லை என்று சொல்­வ­தற்­கில்லை.
எத்­த­னையோ பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எத்­த­னையோ ஒப்­பந்­தங்கள் செய்­யப்­பட்­டன. இவை  வெற்­றி­பெறத் தவ­றி­ய­தனால், சாத்­வீகப் போராட்­டங்கள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்தப் போராட்­டங்­களின் தோல்வி கார­ண­மா­கவே ஆயுதப் போராட்டம் முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தது. 
யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, சாத்­வீக வழி­மு­றை­களில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. சாத்­வீக வழி­யி­லான போராட்­டங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன என்று அர­சியல் தீர்­வுக்­கான தமிழர் தரப்பின் செயற்­பா­டுகள் குறித்து விப­ரங்கள் தெரி­விக்­கப்­ப­டலாம். விளக்­கங்கள் அளிக்­கப்­ப­டலாம். இந்த விப­ரங்­க­ளையும் விளக்­கங்­க­ளையும் மறுத்­து­ரைக்க முடி­யாது.
ஆனால் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டிய விட­யங்கள் பற்­றியும் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய வழி­மு­றைகள் குறித்தும் சிந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா? ஒரு பொது வெளியில் விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா? அர­சியல் தீர்­வுக்­கான ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான வழிமு­றை  குறித்து விரி­வாக சிந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா? – போன்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன. 
 சலித்­துப்­போன வழி­மு­றைகள்   
பாரா­ளு­மன்ற அர­சி­ய­லிலும், ஆயுத வழி­யி­லுமே அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. ஆனால் இந்த இரண்டு வழி­க­ளிலும் தீர்­வுக்­கான முன்­னேற்­றத்தைக் காண முடி­ய­வில்லை என்­பதே வர­லாறு.
யுத்த மோதல்கள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­த­போது, போர் நிறுத்தம் ஒன்றின் ஊடாக நோர்­வேயின் மத்­தி­யஸ்­தத்­து­ட­னான அர­சியல் தீர்வில் முக்­கிய பங்­கேற்­றி­ருந்த இலங்­கைக்­கான முன்னாள் நோர்­வேயின் சமா­தான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பாரா­ளு­மன்ற அர­சியல் சலித்­துப்­போன வழி என்று வர்­ணித்­துள்ளார். 
எனவே, தமிழ்த்­த­லை­வர்கள் பாரா­ளு­மன்ற அர­சி­ய­லுக்கும் போருக்கும் இடைப்­பட்ட மூன்­றா­வது வழி­யொன்றைக் கண்­ட­றிய வேண்டும் என்று ஆலோ­சனை தெரி­வித்­துள்ளார்.  
திரு­கோ­ண­ம­லையின் மூலோ­பாய கற்­கைகள் நிலை­யத்தின் இணை­ய­த­ளத்­திற்கு வழங்­கிய செவ்வி ஒ­ன்­றி­லேயே சொல்ஹெய்ம் இதனைக் கூறி­யுள்ளார். இன்­றைய அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் முடங்கிப் போயுள்ள இன்­றைய அர­சியல் சூழலில் அவ­ரு­டைய கருத்து முக்­கி­யத்­துவம்மிக்­க­தா­கவே திகழ்­கின்­றது. 
காலம் கால­மாக சாத்­வீக வழிகள் என்று ஆர்ப்­பாட்­டங்­களும், உண்­ணா­வி­ர­தங்­களும் பேர­ணி­களும், ஒத்­து­ழை­யாத போக்­கு­க­ளுமே போராட்ட வழி­க­ளா­கவும், அர­சியல் தீர்வு மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு விட­யங்­களில் தமிழர் தரப்­பினால் கையா­ளப்­பட்டு வந்­துள்­ளன. 
சாத்­வீகப் போராட்­டத்­திலும் பார்க்க ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மோச­மான நெருக்­க­டி­க­ளையும் தேசிய அளவில் பாதிப்பு ­க­ளையும் ஏற்­ப­டுத்­திய ஆயுதப் போராட்­டமே அர­சாங்­கங்­களை அர­சியல் தீர்­வுக்­கான வழிக்குக் கொண்டு வரு­வதில் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. 
சாத்­வீகப் போராட்­டங்கள் தோல்­வி­ய­டைந்த கார­ணத்­தி­னா­லேயே ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற்­றது. ஆனால், ஆயுதப் போராட்டம் முறி­ய­டிக்­கப்­பட்டு தமிழர் தரப்பு அர­சியல் ரீதி­யாக தோல்வி நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள ஒரு சூழலில் மீண்டும் சாத்­வீகப் போராட்­டங்­களின் ஊடான தீர்வு முயற்­சிகள் வெற்றி பெறுமா என்­பது சந்­தே­கமே. 
நிபந்­த­னை­யற்ற ஆத­ரவைப் பெற்­றி­ருந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நான்­கரை வரு­ட­கால அனு­ப­வங்கள், எரிக் சொல்ஹெய்ம் குறிப்­பிட்­டி­ருப்­ப­து­போன்று, பாரா­ளு­மன்ற அர­சியல் வழி அர­சியல் தீர்வு முயற்­சி களுக்கு வாய்ப்­பா­ன­தல்ல என்­பதை நிரூ­பித்­தி­ருக்­கின்­றன.
இந்த நான்­கரை ஆண்­டு­க­ளிலும் நல்­லாட்சி அர­சாங்கம் தங்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­றி­யி­ருப்­ப­தா­கவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவும் கசப்­பு­ணர்­வுடன் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். 
கைந­ழு­வி­ய பொன்­னான சந்­தர்ப்பம்
புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதன் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணலாம் என்ற உடன்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே நிபந்­த­னை ­யற்ற ஆத­ரவு நல்­கப்­பட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், அது எதிர்­பார்த்த வகையில் வெற்­றி­க­ர­மாக நிறை­வே­ற­வில்லை.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான அதி­காரப் போட்டி, புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க முயற்­சி­க­ளுக்கும் முட்­டுக்­கட்­டை­களைப் போட்­டது.
அதி­காரப் போட்­டியில் பிர­த­மரை அதி­காரம் இழக்கச் செய்­வ­தற்­காக மகிந்த ராஜ­பக்ஷவைப் புதிய பிர­த­ம­ராக நிய­மித்து, அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முயற்­சி­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு எடுத்­தி­ருந்­தது.
பிர­த­மரைப் பதவி நீக்கம் செய்து, அமைச்­ச­ர­வையைக் கலைத்து, பாராளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான உத்­த­ரவின் மூலம், அர­சி­ய­ல­மைப்­பையும், ஜன­நா­யக வழி­மு­றை­க­ளையும் மீறிய ஜனா­தி­ப­திக்கு எதி­ராக நீதி­மன்­றத்தை நாடி நியா­யத்தை நிலை­நாட்­டி­யதன் மூலம், அவரது அதி­ருப்­தியை, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு சம்­பா­தித்துக் கொண்­டது. ஜனா­தி­ப­தியின் இந்த அதி­ருப்­தியை அர­சியல் ரீதி­யான கோப­மா­க­வும்­கூட எடுத்துக் கொள்­ளலாம். 
புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் இல்­லா­விட்டால் அர­சியல் தீர்வும் இல்­லை­யென்ற நிலை­மை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் குழம்பிக் கிடக்­கின்­றன.
 இந்த நாட்டின் இரு­பெரும் பேரி­ன­வாத அர­சியல் சக்­தி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்­சியும், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக அர­சியல் செய்­வதே வழமை. ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யதும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக ஒரு கட்சி எடுக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு மற்­றைய கட்சி எதிர்ப்பு தெரி­வித்து, அதனைக் குழப்­பி­ய­டிப்­பதே அர­சியல் வர­லா­றாகும். 
இந்த நிலையில் அந்தக் கட்­சிகள் இரண்டும் இணைந்த அமைத்த நல்­லாட்சி அர­சாங்க ஆட்­சிக காலமே இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீரவு காண்­ப­தற்­கு­ரிய பொன்­னான சந்­தர்ப்­ப­மாகக் கரு­தப்­பட்­டது. அந்த சந்­தர்ப்­பத்தில் அர­சியல் தீர்­வுக்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், அந்த முயற்­சிகள் வெற்­றி­க­ர­மா­கவும், துரி­த­மா­கவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 
மாறாக பிரச்­சி­னை­களை இழுத்­த­டித்து இழுத்­த­டித்து, ஆறப்­போட்டு குழப்­பி­ய­டிக்­கின்ற ஆட்சிப் போக்­கி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க முயற்­சியும் கையா­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. 
நெருக்­கு­தல்­களின் அவ­சியம்
இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விரைந்து காணப்­பட வேண்டும். இந்த வரு­டத்­துக்குள் அர­சியல் தீர்வு எட்­டப்­பட வேண்டும். அதற்கு இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களும், நாட்டில் உள்ள ஜன­நா­யக சக்­தி­களும் ஏனைய தரப்­புக்­களும் இணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்று யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற தமி­ழ­ரசுக் கட்­சியின் மாநாட்டில் உரை­யாற்­றிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கோரி­யுள்ளார்.
இங்கு உரை­யாற்­றிய அவர், 'ஆயுதம் ஏந்திப் போரா­டி­னால்தான் அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக ஆக்­க­பூர்­வ­மான கரு­மங்­களைப் பேணு­வீர்கள். ஆயு­த­பலம் இல்­லா­விடில், அதைக் கைவி­டுவோம் என நினைப்­பீர்­க­ளானால், அது ஒரு தவ­றான நிலைப்­பா­டாகும். அவ்­வா­றான நிலைப்­பாட்டைப் பற்றி சிந்­திக்க வேண்­டிய தேவை ஏற்­ப­டு­கின்­றது' என குறிப்­பிட்­டுள்ளார். 
இந்தக் கூற்றின் மூலம், நெருக்­க­டிகள் ஏற்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­க­ளி­லேயே, ஆட்­சி­யா­ளர்கள் அர­சியல் தீர்வு குறித்து அக்­கறை கொள்­வார்கள். இல்­லையேல் அக்­கறை கொள்ள மாட்­டார்கள் என்­பதை சம்­பந்தன் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.
 எனவே, அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய புள்­ளியை நோக்கி ஆட்­சி­யா­ளர்­களை நகர்த்தி, செயற்­படச் செய்ய வேண்­டு­மானால், நெருக்­க­டி­களை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவருடைய அனுபவ கூற்று வெளிப்படுத்தியிருக்கின்றது.   
ஆகவே அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் சலித்துப் போன வழிமுறைகளில் இருந்து விலகி, அரசும், அரசியல் தீர்வைக் குழப்புகின்ற தரப்பினரும் நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்ற வழிமுறைகள் குறித்து சிந்தித்து, அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து, தமிழ் அரசியல் தரப்பினர் செயற்பட வேண்டியது அவசியம். 
அந்த வழிமுறைகள் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருப்பது போல சாத்வீக வழிமுறையில், ஒன்றிணைந்த சிவில் நடவடிக்கைகளைக் கொண்டதாக அமைய வேண்டும். 
கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால், தமிழ் அரசியல் சக்திகளை ஒன்று திரட்டி, பொது நலனைக் கருத்திற் கொண்டு பொது வெளியில் மனந் திறந்த கலந்துரையாடல்களை நடத்தி அவற்றின் ஊடாக அரசியல் தீர்வுக்குரிய அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும்.
அதுவல்லாமல், அரசும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தங்களுடைய நலன்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தைக் கையாள்கின்ற வழிமுறைகளில் இழுபட்டுச் சென்று ஒருபோதும் தீர்வு காண முடியாது. 
இனப்பிரச்சினை விவகாரத்தையும் அரசியல் தீர்வு விடயத்தையும் எந்த சக்தி அல்லது எந்தத் தரப்பினர் கையில் எடுத்தாலும், தமிழர் தரப்புக்கென திட்டமிட்டு வகுத்துத் தீர்மானிக்கப்பட்ட வழிமுறையில், அது கையாளப்படுவதற்காகப் பாடுபட வேண்டும். 
இல்லையேல் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையைப் போல  அரசியல் தீர்வு வந்தும் வராததும் போன்ற நிலைமைக்கே தமிழ் மக்கள் மீண்டும் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  
பி.மாணிக்­க­வா­சகம்
நன்றி வீரகேசரி 

No comments: