வாக்களிப்போம் வாருங்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ....

.

    


              தேர்தல்தேர்தல் தேர்தலென்று 
              தெருவெல்லாம் திரிகிறார் 
             ஆளைஆளை அணைத்துபடி 
              அன்புமுத்தம் பொழிகிறார்
              நாளைவரும் நாளையெண்ணி
              நல்லகனவு காண்கிறார் 
              நல்லதெதுவும் செய்துவிட
              நாளுமவர் நினைத்திடார்  !

              மாலை மரியாதையெல்லாம்
              வாங்கிவிடத் துடிக்கிறார்
              மக்கள்வாக்கை பெற்றுவிட
              மனதில்திட்டம்  தீட்டுறார் 
              வேலைபெற்றுத் தருவதாக
              போலிவாக்கை விதைக்கிறார்
               வாழவெண்ணும் மக்கள்பற்றி 
               மனதிலெண்ண மறுக்கிறார்  ! 

               ஆட்சிக்கதிரை ஏறிவிட
               அவர்மனது துடிக்குது
               அல்லல்படும் மனதுபற்றி
                அவர்நினைக்க மறுக்கிறார்
               அதிகசொத்து பதவியாசை
               அவரைசூழ்ந்து நிற்குது
                அவரின்காசை அனுபவித்தார்
                அவர்க்குத்துதி பாடுறார் ! 

                அறத்தைப்பற்றி நினைத்திடார்
                அக்கறையை விரும்பிடார்
                இருக்கும்வரை அரசியலால்
                 எடுத்துச்சுரட்ட நினைக்கிறார் 
                வாக்களிக்கும் மக்கள்தம்மை
                போக்குக்காட்டி ஏய்க்கிறார்
                 வாக்குக்கொண்டு போகுமாறு
                 வாக்களிப்போம் வாருங்கள் ! 

No comments: