எல்லோரும் பொங்கிநிற்போம் !எம். ஜெயராமசர்மா .... மெல்பேண்


image3.JPG

.

   புத்துணர்வு புதுக்கருத்து
   புறப்பட்டு வந்திடட்டும்
   பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து
   புதுப்பொலிவு பெற்றிடுவோம்
    பொறுமையெனும் நகையணிந்து
    பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்
    இறைநினைப்பை மனமிருத்தி
    எல்லோரும் பொங்கிநிற்போம் !

   குறையகன்று ஓடிவிட
   இறைவனைநாம் வேண்டிடுவோம்
   நிறைவான மனதுவரும்
   நினைப்புடனே பொங்கிடுவோம்
    துறைதோறும் வளர்ச்சிவர
    துடிப்புடனே உழைப்பதென
    மனமெண்ணி யாவருமே
    மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

    சாந்தியொடு சமாதானம்
    சகலருமே பெற்றுவிட
    சந்தோஷம் வாழ்வினிலே
    சகலர்க்கும் நிலைத்துவிட
    மழைபொழிந்து பூமியெங்கும்
    பயிர்செழித்து வளர்ந்துவிட
    வழிவகுக்க இப்பொங்கல்
    வாய்துவிட பொங்கிநிற்போம் !




     பால்பொங்கி வருவதுபோல் பண்புபொங்கி வரவேண்டும்
     பச்சரிசி சிரிப்பதுபோல் பலமனங்கள் விரியவேண்டும்
     சுவைபயக்கும் சர்க்கரையாய் சுகங்கள்பல வரவேண்டும்
     இவையாவும் வாழ்வினிலே இருக்கவெண்ணிப் பொங்கிடுவோம் !

      புலம் பெயர்ந்த நாட்டினிலும்
      பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்
       நலந்திகழும் நாளாக நாமெண்ணிபொங்கிடுவோம்
       நிலம் பெயர்ந்து போனாலும்
       நெஞ்சில் பொங்கல் நிறைத்துவைத்து
        உளம் மகிழக் கூடிநின்று
        உவகைபொங்கப் பொங்கி நிற்போம் !

       எல்லோரும் இன்பமுற இப்பொங்கல் அமைகவென
       நல்லெண்ணம் மனமிருத்தி நாம்பொங்கல் பொங்கிடுவோம்
       பொல்லாத குணமெல்லாம் போயகல வேண்டுமென்று
       எல்லாமாய் இருக்கின்ற இறைவனைநாம் வேண்டிநிற்போம் !

No comments: