பொலிந்துவிட வா ! - என் .ஜெயராமசர்மா .... மெல்பேண்

.




      இரண்டாயிரத்துப் பதினேழே
      இன்முகத்துடனே எழுந்தோடிவா
      இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
      வறுமையொடு பிணியகல
       வரம்கொண்டு வா
       வளங்கொளிக்கும் வாழ்வுவர
       மனங்கொண்டு வா
       அறியாமை இருளகல
       அறிவொளியாய் வா
       அரக்ககுணம் அழித்துவிட
       அஸ்த்திரமாய் வா
        நிலையாக தர்மெங்கும்
        நிறுத்திவிட வா
        நிம்மதியாய் வாழ்வுவர
        நீநினைந்து  வா !

        சாதிமதச் சண்டையினை
        சம்கரிக்க வா
        சமாதானம் குலைப்பார்க்கு
        சவுக்காக வா
         நீதியொடு சமாதானம்
         நிலைநிறுத்த வா
         நிட்டூரம் செய்வாரை
         குட்டிவிட வா
         வாதமிட்டு வம்புசெய்வார்
         வாயொடுக்க வா
         வாழ்வென்றும் வசந்தம்வர
          மனம்சிரித்து வா !

          சாந்தியுடன் சமாதானம்
          கொண்டுநீ வா
          சச்சரவு ஒழித்துவிடும்
          தீர்வுடனே வா
           காந்திபோல பலமனிதர்
           பிறக்கவெண்ணி வா
           கசடெல்லாம் கழன்றோட
            காத்திரமாய் வா
            பூந்தோட்டமாய் உலகு
             பொலிந்துவிட வா
             புதும்தெம்பு வாழ்வெல்லாம்
              புறப்படநீ வா !
 

                 ஆட்சிபுரி உள்ளங்கள் மாறவேண்டும் 
                        அவர்மனதில் அறவுணர்வு தோன்றவேண்டும்
                 அதிகாரம் காட்டுவார் திருந்தவேண்டும்
                          அமைதிபற்றி அவர்மனது நினைக்கவேண்டும்
                  காட்டுத்தனம் நாட்டைவிட்டு நீங்கவேண்டும்
                          கருணைபற்றி யாவருமே எண்ணல் வேண்டும்
                   நாட்டினிலே நலன்கள்பல பெருகுதற்கு 
                           நன்மைதரும் ஆண்டாக வரவாய்நீயும் !

                உன்னைவரவேற்க உவப்புடனே இருக்கின்றோம் 
                      முன்னைக் கவலையெலாம் முழுதாகபோக்கிவிடு 
                அன்னை எனநினைத்து ஆவலுடனிருக்கின்றோம்
                        அரவணைத்து ஆதரிக்கும் ஆண்டாகநீவருக !
                  

No comments: