கடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்

.

உற்றுப் பார்த்திருப்பாய்
உன் கூர் விழிப் பார்வை
வியாபிக்கும்
எல்லாப் பரப்பினையும்
ஒரு மரத்தின் உச்சியிலிருந்து
கடற்கரையின்
புதர்களில் மறைந்து
ஒரு பாறை விளிம்பில்
தரித்து நின்று
எல்லாப் பரப்பினையும்
உற்றுப் பார்த்திருப்பாய்
ஒரு பறவை
கால் கடுக்கக் காத்திருந்து
நோட்டமிட்டு
வட்டமிட்டு
பறந்து களைத்து
கண்டெடுக்கும் இரையொன்றை
கொத்தி அது கிளம்புகையில்
என்ன எதிர்பார்ப்பு
காத்திருக்கும் குஞ்சுகளுக்கு
கறி கொண்டு விரைகிறதோ
அவ்வேளை நீ பார்த்து
அப்படியே ஒரு உந்தில்
மின்னலெனப் பறந்து
மிரட்டி வழி மறிக்க
என்ன செய்யும் அப்பறவை
ஏவுகணை வேகத்தில்
எகிறி நீ விரட்டுவதை
எங்கணம் அது பொறுக்கும்
உயரத்தில் காற்றிடையே
பயந்து குடல் நடுங்கி
பரிதவிக்கும் பறவை அதன்
வாய்  நழுவி  விழும் இரையை
பற்றி நீ பிடிப்பாய்
பட்டென மறைந்திடுவாய்
வானத்தில் வழிப்பறியா
ஒரு வகையான பகற்கொள்ளை
கடற் கள்ளனே
நீ வாழும் விதம் புதிதல்ல
சில மனிதருக்கு

No comments: