பவளவிழா நாயகர் " ஞானமிதழின் " ஆசிரியர்
திரு ஞானசேகரன் அவர்களை வாழ்த்திப்பாடிய
பிறந்தநாள் வாழ்த்துப்பாமாலை
எழுபதைத் தாண்டினாலும் இளமையாய் இருக்குமெங்கள்
முழுநிறை ஞானமண்ணா முன்நிலை செல்வோமானால்
அழகுடை சிரிப்பைப்பார்ப்போம் அறிவுடை பேச்சைக்கேட்போம்
விழிகளில் கருணைபார்ப்போம் வியந்துமே நிற்போமங்கே !
வைத்தியம் பார்த்தபோதும் வண்ணமாய் தமிழைப்பார்த்தார்
எழுத்திலே பலதும்சொல்லி எல்லோரும் நினைக்கவைத்தார்
அழுத்தமாய் கதைகள்சொல்லி அளவிலாபரிசும் பெற்றார்
அவர்வாழ்வு சிறந்துநிற்க அன்பினால் வாழ்த்துகின்றேன் !
தமிழிலே ஞானம்தந்து தலைவனாய் உயர்ந்தேவிட்டார்
தமிழிலே எழுதுவார்க்குத் தக்கதோர் துணையுமானார்
அளவுடன் எழுதுகின்றார் அமுதமாய் அனைத்தும்சொல்வார்
புவியிலே நிலைத்துநின்று புகழுடன் வாழ்கவாழ்க !
ஏழைகளின் துயர்கண்டு எழுச்சியுடன் எழுதிநின்றார்
சாதிமதம் பாராமல் சமத்துவமாய் உலவுகின்றார்
போதிமரம் போலவவர் பொறுமையுடன் நிற்பதனால்
சாதனையின் நாயனாய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் !
ஞானத்தின் தலைவாவாழ்க நற்றமிழ்ப் புதல்வாவாழ்க
ஈனத்தை எதிர்த்துநிற்கும் எழுதுகோல் உடையாய்வாழ்க
வானத்துத் தேவரெல்லாம் வாழ்த்தவுன் பிறந்தநாளை
வையத்தில் மக்களோடு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன் !
பிரம்ம ஸ்ரீ எம் . ஜெயராமசர்மா மெல்பேண்
15 - 04 - 2016 அவுஸ்திரேலியா.