சித்திரையை வரவேற்போம் ! - எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

.

                உள்ளமெலாம் உவகை  கொள 
                           ஊரெல்லாம் மகிழ்ச்சி பொங்க
                வெள்ளமென மக்கள் எலாம் 
                            வீதியிலே நிறைந்து  நிற்க
                 உள்ளூரின் கோவில் தனில்
                           ஊர்வலமாய் தேர் அமர்ந்து
                  வண்ண மயில் வாகனார்
                              வடிவாக வலம் வருவார் !

                   எண்ணம் எலாம் இனிப்பாக
                               எல்லோரும் இணைந்து அங்கே
                   இழுத்து நிற்போம் தேரதனை
                                    எங்கள் ஊரே திரண்டுநிற்கும் 
                    புத்தாடை தனை உடுத்தி
                                   புதுத்தெம்பு மனத் திருத்தி
                   அத்தனை பேர் கைகளுமே
                                   அத்தேரின் வடம் பிடிக்கும் !


           எத்தனையே கனவுகளை எல்லோரும் மனத்திருத்தி
           ஏங்கிய முகத்தோடு இறைவனையே பார்த்துநிற்பர்
           எதிர்காலம் இன்பமாய் இருப்பதற்கு அருளிடென
           எம்பெருமான் முருகனது தேரிழுப்பார் எல்லோரும் !

           சித்திரையின் தேரோட்டம் சீக்கிரமாய் வரவெண்ணி
           அத்தனைபேர் உள்ளங்களும் ஆவலாய் காத்திருக்கும்
            முத்திக்கு வித்தான முழுமுதலின் தேரிழுத்தால்
            எத்திக்கும் எவர்வாழ்வும் எழிலோங்கி விளங்கிடுமே !

           ஊரெல்லாம் கூடிநின்று தேரிழுக்கும் சித்திரையை
           உவப்புடனே வரவேற்று உளம்மகிழ்ந்து நின்றிடுவோம்
           யாரோடும் பகைகொள்ளா நல்லமனம் தருகவென
           மால்மருகன்  முருகனிடம் மனமார வேண்டிநிற்போம் !

           வெளிநாட்டில் உள்ளவரும் விரும்பித்தேர் இழுக்கின்றார் 
           வேலவனே வினைதீர்த்து விரும்பியதைக் கொடுத்திடென
           சீலமுடன் நாம்வாழ சித்திரையை வரவேற்போம் 
           ஞாலமதில் நாம்சிறக்க நற்குமரா அருள்தருவாய் !

           எத்திக்கு இருந்தாலும் சித்திரையை வரவேற்போம்
           அத்தனைபேர் வாழ்வினிலும் ஆனந்தம் பெருகிடவே
           சொத்தாக இருக்குமெங்கள் சொந்தங்கள் சேர்ந்திடவே
           சித்திரையில் சிரித்தென்றும் சிறப்புடனே இருந்திடுவோம் !

           மூத்தோரை அரவணைத்து முத்தங்கள் கொடுத்திடுவோம்
           சாத்திரங்கள் பார்த்தாலும் சரியாகச் செயற்படுவோம் 
           ஏற்றிவைத்த பாரமெல்லாம் இறக்கிவைக்க முயன்றிடுவோம்
           எங்கள்வாழ்வில் சித்திரையால் இனிமைவர வேண்டிநிற்போம் !

          புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புதுமைபல பார்த்தாலும்
          நலம்விளைக்கும் சித்திரையை நாம்மறத்தல் நன்றல்ல 
          நமதுகலை பண்பாடு நம்மனத்தில் இருந்துவிடின்
          நல்லதொரு சித்திரையை நாளெல்லாம் பார்த்திடலாம் ! 

           சித்திரையில் சிரித்திடுவோம் சிந்தனையை வளர்த்திடுவோம்
           அத்தனைபேர் மனங்களிலும் அன்புவரச் செய்திடுவோம் 
           சத்தியத்தைக் கடைப்பிடிப்போம் சன்மார்க்க வழிசெல்வோம்
           சித்திரையைச் சிறப்பாக்க சேர்ந்துநிற்போம் வாருங்கள் !