நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும் நீழாயுள் கொண்டதன்றோ? பாரதி பாடல்!

.
நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும்
  நீழாயுள் கொண்டதன்றோபாரதி பாடல்!
          ------  பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி.
 

கலைமகளே பாரதியின் காதற் தெய்வம்!
         கவிதையென்றால் அவனுக்கோ வற்றா ஊற்று!
விலையறியா இலகுநடை பலரும் போற்றும்
        வித்துவத்தில் மலர்ந்திட்ட புரட்சிப் புதுமை  அலைகொஞ்சும் மணிகளைப்போல் அருஞ்சொற் கூட்டம்
        அவன்நாவின் ஏவலுக்கு இரங்கி ஏங்கும்!
நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும்
         நீழாயுள் கொண்டதன்றோபாரதி பாடல்!
 

பாரதிரப் பாவெழுதிப் புகழ்கொண் டானைப்
        பாரதத்திற் கவிமுத்தாய்த் திகழ்ந்திட் டானை
பாரதியைத் தன்நாவில் தினமி ருத்திப்
       பாமரர்க்குஞ் செழுந்தமிழ்ப்பா தந்திட் டானை
பாரதியை மகாகவியாய்ப் பலரும் போற்றிப்
       பாவலனுக் கினியவிழா எடுக்கும் ஞான்று
பாரதிகம் பேர்கூடி வழுத்தும் வேளை
       பாரதிநான் வாழ்த்துவதில் மகிழ்கின் றேனே 
  
இன்றமிழை மாந்தியவன் இயற்றித் தந்த
        எண்ணரிய படைப்புகளின் பெற்றி என்னே!
குன்றாத இளமைகொண்ட அவனின் கவிதை
        குவியாத அவனிதயப் பூக்க ளன்றோ?
மன்றத்து அந்திவண்ணன் அருளப் பிறவி
        மாகடலை வென்றானை அன்பர் நெஞ்சில்
நின்றானை நினைந்தின்று விழாவெ டுக்க
        நினைந்தஅன்பு  நெஞ்சங்களை  வாழ்த்து கின்றேன்!
   
புதுமைமிகு பலகருத்தைப் புவிக்குத் தந்து
       புலமைமிகு கவிகளினாற் புரட்சி செய்து
எதுவரினும் அஞ்சேனென் றுயர்ந்த கவியின்
        இனியநினை வாயெழுந்த விழாவில் இன்று
மதுரமிகு இசைபில்க யதுகிரி பாட
       மனங்கவர்ந்த தமிழருவி மணியன் பேச
முதுகலைஞர் பட்டிமன்றம் மோக ரிக்க
       முத்தமிழும் நனிசிறக்க வாழிவாழி!!

சனிக்கிழமை 6-12 2014 அன்று கோலாகலமாக நடைபெற்ற பாரதி விழாவில் 
வெளியிடப்பட்ட மலரிலிருந்து ஒர் வாழ்த்துப் பா!


No comments: