நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 2 - கீதா மதிவாணன்

.

மழைக்காலத்தில் ஊரின் அழகையும் செழிப்பையும்  எடுத்தோம்பும் எழில்வரிகளை ரசிப்போமா?
 புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,


பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி,
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப;
 வெண்ணிற முசுட்டைப்பூவும்
பொன்னிற பீர்க்கம்பூவும்
பூவாடை போர்த்தினாற்போல்
புதர்தோறும் மலர்ந்து நிற்க....


பெயல் அடங்கியப் பொழுதிலே

புயல் எனப் பறந்துவந்தன

பசுங்காற் கொக்குகளும்
செங்கோட்டு நாரைகளும்



கருவண்டல் படிந்த வெண்மணல்
காணும் பரப்பெல்லாம்
கனத்த ஈரம் படர்ந்திருக்க 
பறந்துவந்த பறவை யாவும்
பரந்த சேற்றில் அமர்ந்திருந்து... 


வெள்ளம் எதிர்த்து வேறுதிசை பார்த்து
நீந்திய மீன்களை ஏந்தின அலகால்! 

அடைமழை பொழியும் ஆகாயமேகமோ
நடைகற்கும் குறுமழலைபோல்
சிறுதூறல் கற்கத் தொடங்கிற்று.
 




அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க;
முழுமுதல் கமுகின் மணிஉறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண்நீர் பசுங்காகய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க, (13- 28)




சேற்றுவயல் நிறைந்து
நாற்று யாவும் வளர்ந்து
முற்றிய கதிர் வளைந்து
மண்ணை வணங்கி நிற்க... 
 


மணியாரமென அணிவகுத்து
கமுகின் கழுத்தை அலங்கரிக்கும்
குறுமணிக்குலைகள் யாவும்,
பணியாரமென உருண்டு திரண்டு
கொழுத்து செழித்திருக்க....
 

எழில் சுமந்த பொழில்களில்
இலை சுமந்த கிளைகளில்
மலர் சுமந்த நுனிகளில்
மழைத்துளி சுமந்து அழகூட்ட... 
 
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பருஏர்எறுழ் திணிதோள்

முடலை யாக்கை, முழுவலி மாக்கள்

வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, (29- 35) 




 

ஓங்கிய மாடமாளிகைகள் நடுவினிலே
ஆறு போன்று அகன்றோடும் தெருக்களிலே
ஓங்கிய வலியதோள்களில்
தேங்கிய பூமாலை சொரியும்
மது உண்ட வண்டாட்டம் மிக
மதுவுண்டு கொண்டாட்டம் மிக
துடிப்புடைய கீழ்மக்கள் பலரும்
பொழுது அடங்கிய பின்னரும்
பொழுது உணராப் போதையோடு

தூறலைப் பொருட்டாய் மதியாது,
ஆடித்திளைத்தும்கூடிக் களித்தும்
ஆடை நனைய ஆங்கே திரிவர்.

Nantri:geethamanjari.blogspot