தமிழ் சினிமா - நாச்சியார் – திரை விமர்சனம்



காவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா, 18 வயதுக்குட்டபட்டவர் என்பதால் அவரை சிறுவர் காப்பகத்தில் சேர்க்கிறார். கற்பழிக்கப்பட்ட இவானாவை தனது கட்டுப்பாட்டில், தனது வீட்டிலேயே வைத்து பாதுகாக்கிறார்.
பின்னர் ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்படும் விசாரணையில், ஜி.வி.பிரகாஷ் – இவானா காதலித்து வந்தது தெரிய வருகிறது. இந்நிலையில், இவானாவுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் குழந்தை – ஜி.வி.பிரகாஷின் டி.என்.ஏ. ஒத்துப் போகாததையடுத்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்பாவி என்பது தெரியவருகிறது.
இதையடுத்து இவானாவை கற்பழித்த குற்றவாளி யார் என்பது குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் ஜோதிகா, அதற்காக பல இன்னல்களை சந்திக்கிறார். இவானாவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் விசாரிக்கிறார்.
கடைசியில் இதற்கு காரணமாக குற்றவாளியை ஜோதிகா கண்டுபிடித்தாரா? அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இவானாவுக்கு பிறந்த குழந்தை பற்றிய தகவல் ஜி.வி.பிரகாஷூக்கு தெரியவந்ததா? கடைசியில் ஜி.வி என்ன முடிவு எடுத்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜோதிகா இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நேர்மையான, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக அவரது கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். இருப்பினும் கமர்ஷியலாக நடித்து வந்த ஜோதிகாவை போலீஸ் அதிகாரியாக, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பாலாவால் மட்டும் தான் காட்ட முடியும்.
ஜி.வி.பிரகாஷ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகுளித்தனத்துடன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடனான காதல் காட்சிகளில் இவானா ரசிக்க வைத்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், தமிழ் குமரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
வழக்கமான பாலா படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. காதல், பாசம், கற்பழிப்பு என காட்சிகள் நகர்ந்தாலும், அதில் பாலாவின் வழக்கமான அழுகாச்சி உள்ளிட்ட அழுத்தமான, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். பாடலிலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `நாச்சியார்’ மிரட்டுகிறாள்.    நன்றி tamilcinema.news






No comments: