கண்மூடித்தனம்!

.
.

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் காற்றில் பறப்பதாகவும், தண்ணீர் மீது நடப்பதாகவும் அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள். தாங்களும் அவரை போல காற்றில் பறக்கவும், தண்ணீரில் நடக்கவும் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தார்கள்.
துறவி ஒவ்வொருநாளும் தனது குடிசையிலிருந்து வெளியே வந்து நதியின் மீது நடந்து பக்கத்து ஊருக்கு போவார். இதை பார்த்த சீடர்கள் தங்களுக்கும் நதியின் மீது நடக்கும் ரகசியத்தை சொல்லித்தருமாறு கேட்டனர்.

அதற்கு துறவி அதற்கான காலம் வரும் போது கற்றுத் தருவதாக சொன்னார். அதில் ஒரு சீடன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாள் துறவி நதியின் மீது நடந்து சென்றதும், அவர் பின்னாலேயே அந்த சீடனும் நடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, நதி அவனை இழுத்து சென்றுவிட்டது. மற்ற சீடர்கள் துறவியிடம் சென்று நீங்கள் மட்டும் நதியில் நடக்கும் போது அவனால் ஏன் முடியவில்லை என கேட்டார்கள். 

 அதற்கு துறவி நதியில் எங்கெங்கு பாறைகள் இருக்கும் என எனக்கு தெரியும், அதனால் அதன் மீது கால்வைத்து நடந்து செல்கிறேன் என்றார். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றும் போது உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன்,
அதற்குள்... அந்த சீடன் நதியில் நடக்க முயற்சித்ததால் அவனை நதி இழுத்துசென்றுவிட்டது என்றார்.

கண்மூடித்தனமாக  பின்பற்றுவதன் விளைவு இதுதானோ?.
எல்லாவற்றிற்கும் கேள்வி எழுப்பவேண்டும்.கேள்வி ஆராய் ச்சியைத் தூண்டும்.ஆராய்ச்சி தெளிவைத் தரும்.

மகரிஷி எதையும் சொல்லால் மட்டும் நம்பாமல்  சிந்தித்து தெளிவு பெற வேண்டும் என்கிறார்.பின்வரும் அவரது இறைவணக்கப் பாடல் இதை விளக்குகிறது:

"எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்

வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தஇடம்
அறிவு முழுமை அதுமுக்தி"


சுருக்கமாகச் சொன்னால் மகரிஷி அனைவரையுமே சிந்தனையாளர்களாக,ஆராய்சியாளர்களாக, உணர்வாளர்களாக  வேண்டுமென்கிறார்.

nantri:irainilai.blogspot

No comments: