நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக் காட்டிடும் !


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



          வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே - உன்
              வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே 
              நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  - இங்கு 
              பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !

             உண்ண மறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக் காட்டியே - இங்கு

             உணவை யூட்டி உளம் மகிழ்வார் உலகில் பலருமே 
             விண்ணில் நீயும் ஓடி யோடி விந்தை காட்டுவாய் - அதை
             வியந்து வியந்து பிள்ளை பார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !

             பூரணையாய் வந்து நீயும் பொலிந்து விளங்குவாய் - அதை

             பூரிப்போடு பலரும் பார்த்து உளம் மகிழுவார் 
             காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் - அதை
             கவிதையிலே பல கவிஞர் கண்டு வாழ்த்துவார் !

             உன் வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு

             உன் வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
             மின் மினிகள் வானில் சூழ விரைந்து ஓடுவாய் - நாளும்
             உன் னொளியால் உலகை நாளும் உவகை யூட்டுவாய் !

             இறைவனது தலையின் மீது இருக்கிறாயென - இங்கு

             இந்துமதம் சொல்லி யுன்னை உயர்த்தி நிற்குது 
             குறையுடைய நிலவே யுனை நிறைவு படுத்தவே - நாளும்
             இறைவன் உன்னை தன்னிடத்து ஏற்றுக் கொண்டனன் !

             மதியைப் பற்றி பல கதைகள் மதங்கள் சொல்லிடும் - ஆனால்

             மதியைப் பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும் 
             பாதி நாளில் மதியின் வாழ்வு இருண்டு போயிடும் - ஆனால்
             மீதி நாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !

             உயர் வுதாழ்வு உலக வாழ்வில் இயற்கை என்பதை - இங்கு

             உணர்த்தி நிற்கும் செயலை நிலவே தெளிவாய் காட்டுது 
             வெளிச்சம் கொடுக்க நாளும் நிலவு விண்ணில் வருகுது - ஆனால்
             வெளியில் குறையைக் காட்டிக் கொள்ளா நிலவும் விரும்புது !

            கூடு கின்ற காதலர்க்கு குளிர்ச்சி  கொடுக்குது    - இங்கு

           வாடு கின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
            நிலவு அது வானமீது தவழ்ந்து போகுது - ஆனால்
            மனித மனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !
              
             மனதில் மகிழ்ச்சி  மலரும்போது நிலைவை வாழ்த்துவோம்  - இங்கு
             மனமகிழ்ச்சி தொலையும் போது நிலைவைத் தூற்றுவோம்
            நிலவு என்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே - அது
            கவலை கொண்டு போவதை நாம் காணமுடியுமா !

            துன்ப மின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் - அதை

            இன்ப முடன் ஏற்றுக் கொண்டால் எல்லாம் இன்பமே
           தேய்ந்து வளர்கின்ற பாதை நிலவின் பாதையே - அதை
           ஆய்ந்து பார்த்தால் மனித வாழ்வில் அமைதி தோன்றுமே !

          இருட்டும் வரும்  வெளிச்சம் வரும் எனவுணர்த்திட - இங்கு

          எல்லோருக்கு பாட மதை நிலவு நடத்துது 
          மனிதரெலாம்  நிலவைப் பார்த்து மதியைத் தீட்டுவோம் - இங்கு
          நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக் காட்டிடும் !

 

No comments: