களிப்புற்று நின்றிடுவோம் ! - எம். ஜெயராமசர்மா


       விண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்                                        
            மண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல் 
      ஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை
               அனைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் ! 

      மானிட  இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்
             வரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்
     காதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்
             காதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் ! 

    காதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே
         காதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும் 
   மோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்
         காதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ ! 

    காதலில்லா வாழ்வினைநாம்  கசப்பென்றே எடுக்கவேண்டும்
          காதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும் 
   காதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்
         ஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் !

    காதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு
           காதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்
   காதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்
          காதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் ! 
    
       
       


No comments: