நாட்டுக்குத் தேவை ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.


 ஒன்றுபட்டால்  உண்டுவாழ்வு 
       ஒற்றுமை அகன்றிடின்
       அனைவர்க்கும் தாழ்வு 
       என்றிடும் வாக்கினை
        மனத்தினில் இருத்தி
       இணைந்திட நினைப்போம்
       ஏற்படும் உயர்வே ! 

       கூட்டுறவென்பது நாட்டுயர்வாகும்
       கூடிடும்போது கூடிடும்வலிமை
       நாடுகள் பிரிந்தால்
       நன்மைகள் உடையும்
       கேடெலாம் சூழ்ந்து
        நாடெலாம் குலையும் 
        குலைவினைத் தடுத்திட
        கூட்டுறவதனை தலையெனக்கொண்டு 
        நிலைபெறச் செய்வோம் ! 

        ஒருமித்து நின்றால்
        உன்னதம் விளையும்
        உடைந்துமே போனால்
        உயர்வெலாம் சரியும் 
        கூடிடும் பொழுதில் 
        குறையெலாம் அகலும்
        கூட்டுற வென்பது 
        நாட்டுக்குத் தேவை ! 

       பொதுநலனை வளர்ப்பதற்கு
       புறப்பட்டு வந்த
       புத்தூக்கம் கூட்டுறவு 
       புதுப்பாதை அன்றோ 
       அதைவளர்க்க பலபேரும்
        ஆண்டாண்டு காலம்
       அயராது உழைத்ததனை 
       அகம்நிறைத்து வைப்போம் ! 

      தனிமனித கூட்டுறவு
      சமுதாய கூட்டுறவு 
      பொருள்விரியக் கூட்டுறவு
      போரகற்றக் கூட்டுறவு 
      கூட்டுறவு எனும்கருத்து
      மொட்டாக இல்லாமல்
      மலர்ந்விடும் வேளைதனில்
      மாவிளைவைத் தந்துநிற்கும் ! 

     பலசபைகள் அமைக்கின்றார்
     பலசட்டம் தீட்டுகிறார்
     உலகசமாதனம் என்று
     உரத்தெல்லாம் உரைக்கின்றார் 
     கலவரமோ நாடெல்லாம்
     கனத்ததீயாய் எழுகிறது 
     கூட்டுறவை வளர்த்திருந்தால் 
     குழப்பங்கள் வந்திராதே !

    ஆதிக்கம் ஆதிகாராம்
    ஆணவத்தால் உலகமெலாம்
    அழிவான பாதைசென்று
    ஆக்கமெலாம் இழக்கிறது 
    கூட்டுறவு எனும்கருத்தை
    நாடெல்லாம் கடைப்பிடித்தால்
    ஆட்டிநிற்கும் ஆணவங்கள்
    அடியற்றுப் போகுமன்றோ !
     

No comments: