குதித்தெழுந்து வாருங்கள் ! எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா



          

             படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்
             அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்
             குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்
             அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !

             குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்
             அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்
             பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்
             எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !

             அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள்
             ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்
             என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது
             ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !

            கொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்
            நிலைகெட்டுத் தடுமாறி    நீசராய்   மாறிடுவார்
            வெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து
            வேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் !


           உழைக்கின்ற காசெல்லாம் ஒருசதமும் மிஞ்சாது
           பிழைக்கின்ற பிழைப்பதனில் பெருங்குழப்பம் வந்துவிடும்
           கிடைக்கின்ற நல்வாழ்வும் கீழ்நிலைக்கு வந்துவிடும்
           நடைப்பிணமாய் ஆகியவர் நரகத்தைத் தொட்டுநிற்பர் !

           நாட்டிலே குடியொழித்தால் நல்லதே நடக்குமென
           ஏட்டிலே எழுதிவைத்த எழுத்தையெலாம் ஒதுக்கிவிட்டு
           கூட்டமாய்  குடிகுடித்து  குவலயத்தை அழிப்பதனை
           கூண்டோடு அழித்திடுவோம்  குதித்தெழுந்து வாருங்கள் !
             
            வள்ளுவர் பிறந்தமண்ணில் வகைவகையாய் குடியிருக்கு
            மாசமண முனிவரெலாம் குடியொழிக்கு வகைசொன்னார்
            தெள்ளுதமிழ் நூல்கள்பல குடியொழிக்கச் சொன்னாலும்
            உள்ளமதில் கொள்ளாமல் உயிர்குடிக்கக் குடிக்கின்றார் !
          
            அன்பை அறத்தை அஹிம்சையை அழித்துநிற்கும்
            அநியாயக்  குடிதன்னை அகற்றிடுவோம் வாருங்கள்
             துன்பமெலாம் தந்துநிற்கும் துன்மார்க்கக் குடிதன்னை 
             துடைத்தொழிக்க  வாருங்கள் தூய்மையாய் வாழ்ந்திடுவோம் !