.
கூடுதலும், பிரிதலும் பின்னிப் பின்னிக் கோலங்களாகின்ற வாழ்க்கை இயல்பு என உணர்ந்து விட முடியா பொழுதுகள் எங்கள் கைவசமிருக்கின்றன குட்டியின் பிடனியை கவ்விக் கொண்டு அந்த நாய் வந்த போது பயத்தோடு ஒதுங்கியே நின்றேன். குட்டிகளோடு இருக்கின்ற எந்த உயிரினமும் தாக்கி விடக் கூடிய அபாயம் இருப்பதால் மனதில் பயம். நாய்கள் குட்டி போட்டதும் குட்டியை தின்று விடும் என்று அறிந்திருந்த தகவலும் நினைவில் வர குட்டியை தின்னுவதை காண நேர்ந்து விடுமோ அப்படித் தின்றால் என்னைக் கடித்ததை விட அதிக வலியாக தவித்துப் போவேனே எனும் அச்சம் இன்னும் அதிகமாய் இதயத்தை தடதடக்கச் செய்தது. உடலெல்லாம் உதிர்ந்த மயிரோடும் காயமுற்ற உடம்போடும் யாரும் விரும்பி வளர்க்கின்ற நாயல்ல என்பது நன்றாகத் தெரிந்தது ஒட்டிய வயிறு சூம்பிப் போன முகம் பாலூட்டும் உறுப்புகள் மட்டும் தன்னை நிறைத்துக் கிடந்தன.
ஆடி ஆடி அசைந்து வந்த நாயின் வாயில் துவைக்காத குருட்டழுக்கு பழுப்பு நிறமாய் கண் திறக்கவும் திராணியற்றுக் குட்டி இருந்தது. இவ்வளவு அசிங்கமான வத்திப் போன நாய்க்குப் பிறந்ததா? இந்த அழகான கொழு கொழு குட்டி என ஆச்சரியம் தந்தது அந்த புறநகர் பகுதியில் எழுப்பப் பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் அது. எதிரில் இன்னமும் கருவேலங்காடுகள் நிறைந்த இடம். பின்னால் நூற்றாண்டு இரகசியங்களை தண்ணீரில் அழித்துக் கொண்டிருந்த கிணறு. ஞாயிறானால் கிணற்றில் குளித்து காட்டுக்குள் காடை பிடிக்க கம்பி முறுக்கி வைக்கும் பசங்க கூட்டம் இடத்தின் முகத்தையே மாற்றிப் போகும். சைக்கிள்கள் அவர்கள் உடைகளை ஏந்திய படிக்கு வெயிலில் காத்துக் கிடக்கும். ஏற்கனவே வீட்டுக் கட்டிடத்தை ஒட்டி இருந்த ஒதுக்குப் புறப் பள்ளத்தில் இரண்டு குட்டிகள் இது இன்னுமொன்று. நான் கட்டிடத்திற்குள் போய் வேலைகள் சொல்லி சுற்றி வருவதற்குள் இன்னுமொரு கறுப்பு வெள்ளையுமாக குட்டியும் ஒன்றில் மற்றொன்று புதைந்து கொண்டு கிடந்தது. தாயைக் கலிôணவில்லை குட்டிகளின் அருகில் சென்று நின்றேன் ஏதோ உறுத்த நிமிர்ந்து பார்க்கின்றேன். என்னையே உறுத்துப் பார்த்தபடி இருந்தது அந்த தாய் நாய். இதுவரை கண்ணில் படவில்லை. எங்கிருந்து திடீரென வந்ததோ தெரியவில்லை. குட்டிகளின் அருகே நான் வந்துதும் வந்து விட்டது. நான் பயந்து குட்டிகளின் அருகே போகாமல் விலகவும் அது அருகே வந்து முகர்ந்து பார்த்தது. பின்னர் ஓடி மறைந்து போனது நான்கு குட்டிகளும் எது தலை எது எதன் கால் என்று உணர்ந்திட முடியாது நெருக்கத்தின் அணைப்பில் கதகதப்பில் கிடந்தது. எங்கேயோ பார்த்த பழங்காலச் சிற்பம் எட்டுப் பேர் யாருடைய கால் எங்கே இருக்கின்றது எனத் தேட வைக்கும் நடன அசைவுகளோடு இருந்திருந்த சிற்பம் என் முன் ரொம்பஎளிதாக உருவாகியிருந்தது. கலைஞன் மெனக் கெட்டதை வாழ்வு ரொம்ப சிக்கலில்லாது எளிதாக உருவாக்கிப் போயிருந்தது. அதுவும் அசையும் குணங்களோடு. மெல்லிய வேகமான மூச்சில் ஏறி இறங்கும் அடிவயிற்று அசைவில் குட்டிகளின் தலையும் வாலும் இனம் காண முடிந்தது ஆனால் அப்படியொரு தேடலைத் தவிர்த்தபடி ரசித்திருந்தேன்.
அம்மா நாய் கொண்டு வந்து போட்டுப் போய் விட்டது. இப்பொழுது குட்டிகள் தாயின் அரவணைப்பை அடுத்த அடுத்த குட்டிகளின் கத கதப்பிலிருந்து பெற முயற்சித்துக் கொண்டிருந்தன. கிடைத்த போது அசையாது விழிதிறக்காது உறங்கியும் எங்கேயிருந்தோ ஒரு சில்லிடல் காற்றும் அல்லது பூவின் வாசமாய் வெக்கையும் தழுவிய போது திண்டாடின. அசைந்தன. சிற்பங்கள், செதுக்கிய இறந்த காலத்தின் நிமிடமோடு உறைந்து போயிருக்க என் கண் முன்னால் இருந்த உயிர்ச் சிற்பம், கிளைடாஸ்கோப்பின் மாறுதலாய் மாறிக் கொண்டேயிருந்தன.
தாய் நாயை இப்பொழுதெல்லாம் நான் பார்ப்பதே அரிதாகிப் போயிற்று. சொல்லப் போனால் பார்ப்பதே இல்லை குட்டிகள் ஆரம்பத்தில் தூங்கிக் கொண்டே கிடந்தவை இப்பொழுதெல்லாம் ஆட்களின் அருகாமையில் சந்தோசம் கொண்டன.குட்டிகள் மெல்ல எழும்பி தேடத் தொடங்கியிருந்தன. எதைத் தேடுகின்றோம் என்று தெரிந்து தேடியதோ இல்லை மனிதர்கள் உறவுகளிடம் எது தேவை அல்லது எதைக் கேட்கிறோம் என்று தெரியாமலும், புரிய வைக்க முடியாமலும், தேடுதல் போல எல்லாவற்றையும் முகர்ந்தும் நக்கியும் அதிருப்தியோடு திரும்பியபடி இருந்தது. குட்டிகள் மெலியத் துவங்கியிருந்தன தாயின் வருகை அற்றுப் போயிருந்தது.
எங்களது கட்டிட கட்டுமான வேலைகளுக்கிடையில் அவர்கள் விட்டுப் போயிருந்த சாக்கை அம்மாவாக்கி இருந்தன.
கத கதப்பிற்காக அதற்குள் புதைந்து கொண்டன. வாய் திறந்து நக்கிப் பார்த்து தனக்கு பாலூட்டிய சூடு இதுவல்ல என்று உணர்ந்த போது விழிகள் மூடிய படியே நகன்று கொண்டன. பசி எடுக்கத் தேடித் தேடி அலைந்த போது மனிதக் குரல்களின் அருகாமை தேடி நடந்தன. அவர்களின் சாப்பாட்டு நேரஙலிóகளை பழகி விட்ட பொழுதினில் முதல் இரண்டு நாட்கள் இலை கிடந்தது அது மெல்ல மெல்ல பழைய டப்பா கிண்ணம் என்று மாறி பின்னொரு நாளில் யாரோ விட்டுச் சென்ற பழைய அலுமினியத் தட்டு இன்று குட்டிகளின் சாப்பாட்டு கலயமாகி அதன் நிரந்தர சொத்தாகியிருந்தது. விளையாட்டில் ஒருவரையொருவர் கடித்துக் கொள்ளத் துவங்கியிருந்தன.
சமயறியாது என் குழந்தை பருவம் வந்து போனது நினைவில். ஒரு கோழித் தலைக்கும், தலை வெளுத்த பொம்மைக்கும் தங்கையோடு மோதிக் கொண்டதும், தம்பி தூக்கி விட்டெறிவதை எடுத்து மீண்டும் அடுக்கி வைக்க முடியாது என்று அவனை எடுத்த இடத்திலேயே வைக்கச் சொல்லி தலையில் தட்டி அதற்காக கட்டி உருண்டதும் நினைவுக்கு வந்து போயின.
இன்றைக்கு தங்கையிடம் வேறொரு ஊரில் தூரத்தில், தன் குடும்பம் என அவள் ஐக்கியமாகி விட்ட பொழுதினில், விளையாட்டாய் சண்டை போடுவது இருக்கட்டும், உரிமையோடு விசாரிப்பது கூட சம்பிரதாயமாகிப் போனதில் பால்யங்களோடு உறவுகளும் தொலைந்து விட்டதா எனும் ஏக்கம் விளையாடும் அந்த குட்டிகளை சாக்கிட்டு வந்து போனது தவ்வாளமும் குதியுமாய் கிடந்தன. நான் வருகின்ற ஒவ்வொரு நேரமும் என் கால் சேலையோடு விளையாடத் துவங்கின அவற்றின் ஊசிப் பற்களுக்கிடையில் மாட்டிக் கொண்டது சேலை. அதை விடுவிக்க குனிந்து சேலையை இழுக்கின்றேன். கிழிந்து விடுமோ தயக்கத்தோடு. கை இழுக்கின்றது. குட்டி என் அருகாமையைக் கண்டதும் பயந்து வாயைத் திறந்தி விடுவித்துக் கொள்ள அனுமதித்த போதும் சேலை பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு வர மறுக்க பொய்யாய் அதன் தாடையில் ஒரு அடி வைக்கின்றேன். பல்லிடுக்கிலிருந்து சேலை விடுபட பின் வாங் கியது அந்த கருங்குட்டி. பின் வாங்கிய வேகத்தில் தவ்வாளமிட்டு தானொன்னும் அடி வாங்கலையாக்கும் என்கின்ற குதியோடு பின்னாலிருந்தசெவலையை கழுத்தோடி சேர்ந்து கடிக்க அது படுத்திருந்த படிக்கே ஒரு உறுமு உறுமியது. அதிலிருந்து விலகி கழுத்தில் வெள்ளை நிறமிருந்த குட்டியின் காதோடு கடித்தது. பல் படாமல் கடிக்கப் பழகி வைத்திருந்தது. நம்மில் பலருக்கு வருவதே இல்லை. பல் தடமட்டுமல்ல பிடுங்கியே எடுத்து இரத்தம் வர ஓடவிடும் மனிதர்கள் மத்தியில் உடன் பிறப்புகளை பல் படாமல் கடித்து வைக்கப் பழகியிருப்பது ஆச்சரியம் தான். தூரத்தில் புல்லைக் கடித்துக் கொண்டிருந்த குட்டியிடம் ஓடி அதன் வாயோடு குறுக்கே தன் வாயிட்டு கடித்தது. இரண்டும் மெல்ல நகர்ந்து மோதிக் கொண்டது துரத்தி ஓடியது
இப்பொழுதெல்லாம் கட்டிட வேலையாட்கள் சாப்பாட்டு நேரத்தை அதனது சாப்பாடு நேரமாக்கியிருந்தது. கட்டிட வேலையின் மன அழுத்தத்திலிருந்து அவற்றின் முன் மனதுக்குள் விளையாடும் தன்மையில் நானும் சில நாள் இலேசாகிப் போகின்றேன். தாய் வரவில்லை எனபதைப் பற்றி அவை கவலைப் படுமோ கேள்வியோடு அந்த கருங்குட்டியை தடவினேன் .என்னிடமிருந்து அது ஓடிப்போய் கட்டிட விளிம்பில் நின்று தூரத்து பாதையைப் பார்த்தது தலையைத் திருப்பி என்னையும் தனியே மல்லாந்திருந்த பாதையையும் எதிரிலிருந்த நாலைந்து மரங்கள் சூழ அடர்ந்து இருந்த இருளையும் அழுத்தமாகப் பார்த்தது. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தீர்க்கமான அமைதிப் பார்வை பார்த்து விட்டு திரும்பி தவ்வாளமோடு என் காலுக்குள் விளை யாட வந்து விட்டது.
நான் வேலை முடித்து அங்கிருந்து கிளம்பிவண்டியில் நூறு அடி தூரம் வந்த பிறகு அந்த தாய் நாயைச் சந்தித்தேன் இன்னும் வத்திபோய் குட்டி ஈன்றதுக்கான அடையாளங்கள் தொலைத்து முன்னே ஓட அதன் பின்னே இன்னும் சில் நாய்கள் ஓடிக் கொண்டிருந்தன.
வழக்கம் போல காலையில் வேலைக்கு நான் வந்து சேர காலுக்கடியில் விளையாடத் துவங்கிற்று கருங்குட்டி மொத்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது. அந்த நோஞ்சான் குட்டியைக் காணோமே என்றேன்.
கலவையைப் போட்டுக் கொண்டே காலைல ரோட்டுக்குப் போயிடுச்சு. வண்டி ஏதோ அடிச்சுப் போட்டிடுச்சு போல. தூக்கி நாந்தாக்கா குழியைத் தோண்டி புதைச்சேன். என்று சொல்ல எனக்குள் உடன் பிறப்பை இழந்து விட்ட குட்டிகளைப் பார்க்க கவலையாக இருந்தது. கருங்குட்டி முகர்ந்த படிக்கு எதையோ தேடியபடிக்கே இருநலிóதது. என் சேலை உரசல்கள் அதை விளையாட அழைக்கவில்லை போலும். என் உச்சுக் கொட்டலில் நிமிர்ந்து பார்த்து மீண்டும் முகர்ந்த படியே தேடியது. என் பிரிவுகள் நினைவுக்கு வந்து போயின . போன வருடம் விபத்தில் இறந்து போன அண்ணன் உருவம் இன்னும் அடிக்கடி கண்ணில் தெரிவதை யாரிடமும் சொல்ல முடியா அவஸ்தை. கண்ணை அழுத்தி மூடித் திறந்தேன் உள்ளிருந்த நீர் வெளியே வராமல் திணித்துக் கொண்டது. எனக்கு 5 வருடம் இளைய தம்பி ஏறக்குறைய 16 வருடம் ஒன்றாக அடிச்சுகிட்டும் புடிச்சுகிட்டும் வளர்ந்தோம். ஒரு நாள் திருமண வாழ்வில் புரண்டு போனது வாழ்க்கை. நான் இப்போ வேறு குடும்பத்துப் பெண். தூரங்கள் அதிகமில்லை. வேலைகள் தூரங்களை அதிகப் படுத்தியும் அவரவர் பிரச்சனைகள் என்று உரையாடலைக் குறைத்துப் போயிருந்தன.எப்படியோ பிரிவின் வலி எப்பொழுதும் நெஞ்சில் எடுபடாத முள்ளாய் குத்திய படி இருக்க நோஞ்சான் குட்டி தொலைத்த மற்ற குட்டிகளுக்காய் மனம் கவலைப் பட்டது. தப்பித்தலுக்காக வழக்கம் போல வேலைகளுக்குள் திணித்துக் கொண்டேன்.
அடுத்த வாரத்தில் இன்னுமொரு குட்டி நொண்டியபடி வந்தது. காரணம் சொல்ல எப்பவும் ஆட்கள் இருந்தனர். முன்னங்கால்களை கழுத்தோடு கட்டி விட்டபடி மேய்ந்த கழுதைகள் பின்னாடியே போய் விளையாடிப் பார்த்திருக்கின்றது. அதற்கு மனிதனும், வழியாகப் போய் வருகின்ற நாய்களும் கழுதைகளும் எல்லாமே ஒரே நட்புறவாகத்தான் தோணித்து போல. ஓடி ஓடி எல்லாரிடமும் கடித்து இழுத்து அதே விளையாட்டை நீயும் செய் என்பதாய் சீண்டியது. வேறு சில நாய்கள் சில நேரம் விளையாடும், சில தவிர்த்தபடி ஓடும் கழுதை உதைத்து விட இதன் முன்னங்காலிலும் தலையிலும் பலத்த அடி நொண்டிய படி தேம்பித் தேம்பிப் பார்வை பார்த்தது. இழப்பின் நிழல்கள் ஒவ்வொரு குட்டி மேலும் நீள விழுந்து விரட்டி வருவது எனக்குப் புரியத் தொடங்கிய பின் அவற்றிலிருந்து கொஞ்சமாய் விலகியே இருந்தேன் இன்று இன்னும் அதிகமாய் அதன் பார்வையின் வலி பச்சாதாபத்தை விட எனக்குள் இழப்பின் வலியைக் காண்பிக்க ஒதுங்கிக் கொண்டேன். என் கணிப்பு சரியானது மறுநாளில் அந்தக் குட்டியும் இல்லை கேட்டேன்.
காலையில் வந்து பார்த்த போது ஈமொய்க்க இறந்து கிடந்தது என்றார்கள்.
கழுதையின் எத்தலில் தலையில் அடிபட்டு விட்டது. மேலும் ஒரு குழி எடுத்து புதைத்து விட்டதாய்ச் சொன்னார்.
நாய்களின் கலகலப்பு குறைந்திருந்தது. என் கவனம் கட்டிட எழும்புதலில் புதைந்து கொண்டே வளர்ந்தது. இரசனைக் கப்பாற்பட்டு மெல்ல மெல்ல செங்கற் கல்லாய் நானும் மாறிக் கொண்டிருந்தேன். என்றைக்கு என்று உணர முடியா தருணத்தில் எல்லா குட்டிகளும் தொலைந்து போயிருந்தன.
கட்டிடம் சொட்ட சொட்ட நனைந்த ஒரு மழைநாளில் ஆட்கள் வேலைக்கு வராமல் போயிருந்த பகலில் தனியாளாய் கட்டிடத்துள் இருந்தேன். கீழே நிலம் சொர சொரத்தபடியும் மேலே மரத்தின் மேலே நின்றிருந்த கூரை ஈரத்தை வடித்த படியும் இருக்க நீரின் சொட்டுதகள் பேசுகின்ற உரையோடு இருளை வெளிச்சமாக்கி பார்த்து விட பிரயத்தனம் எடுத்தபடி மெல்ல நடந்தேன். யாரோ சாப்பிட்டு தூர எறிந்த பாலிதீன் பைகள் ஈரத்தில் ஆளின்மையை மறைக்க சலசலத்தபடி இருக்க அலுமினியத் தட்டின் மேலே சிமெண்ட் தூசி படிந்து கிடந்து நாய்குட்டிகள் இருந்த காலத்தை அழிக்கப் பார்த்தபடி இருந்தது துளித் துளியாய் சூரிய வெளிச்சத்தில் ஆவியாதலாய் ஒவ்வொரு குட்டியாய் தொலைந்தே போய் முழுவதும் வெறுமை நிரம்பிக் கிடந்தது. பிரிவுகளின் வலியை இயல்பாய் கடந்து காணாமல் போய் விட்ட நாய்க்குட்டிகளையும் என் தள்ளிப் போன உறவுகள், தாண்டி வந்த வாழ்ந்திருந்த வீடு, தொலைக்க விரும்பா காதல்கள், உடன் இருக்க முடியா நட்புகள், என நீளப் போன பட்டியல்கள் அடிக்கடி மனத்தில் கனத்தை ஏற்றி விடுவதை தவிர்க்க முடியாது அசை போட்டேன். மீண்டும் கனம் ஏறிக் கொள்ளப் பார்க்கின்ற போது வடுக்களை தடவிப் பார்க்கின்ற சுகமாய் நினைத்துப் பார்த்தபடி இறந்த காலத்தின் சுகந்தங்களை சுழல வைத்து விட்டு எதிர் காற்றை முகத்தில் ஏற விட்டபடி பறக்கிறது எனது ஸ்கூட்டி.
No comments:
Post a Comment