சித்தாந்தத்தை நாடுவார்க்குத் திருவருட்பயன் தந்த திருவருட் செல்வர் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 

  சமயம் என்றால் என்ன சமயம் என்றாலே கடவுள் நெறி பற்றிச்


சொல்லுவதா ? என்னும் ஐயம் எழுவது இயல்பா னதுதான். இதனால் சமயம் என்றால்  என்ன வென்று ஒரு தெளிவு அவசியமாய் வேண்டப்படுகிறது அல்லவா ! சம யம் என்றால் " மக்கள் ஆன்மலாபத்தை அடைதற்குரிய வழியைத் தெரிவிப்பதே " என்று சொல்லப்படுகிறது. கடவுள் நெறி பற்றிக் கண்டு கொள்ளாமலே சமயம் என்று சொல்லிக் கொள் ளும் நெறிகளும் காணப்படுகின்றன என்பதும் நோக்கத்தக்கது.

  சமயங்கள் யாவுமே கடவுள் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளனவா என்பதிலும் தடுமாற்றம் காணப்படுகி றது. சமயங்கள் என்று பெயரளவில் இருந்தாலும் கடவுள் என்னும் சிந்தனையினைத் தொடாதன வாகவும் சமயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.


கடவுள் கொள்கையினுக்கு முதன்மை கொடுக்காமல் ஓரளவு நிலையில் ஒத்துக் கொள்ளும் சமயங்களும் இருக்கின்றன.அதேவேளை சமயம்  என்னும் பெயரில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெளத்தமோ சமணமோ கட வுள் என்னும் கருத்தை ஏற்றிடாச் சமயங்களாகவே இருக்கின்றன. தர்க்கம் வேறு. தத்து வம் வேறு. தர்க்கிப்பது என்பதை மூலமாய்க் கொண்ட னவே பெளத்தமும் சமணமும். தத்துவத்தை முதன்மைப் படுத்தும் சமயங்கள் நிலை  வேறாய் அமைகிறது. அந்த வகையில் சைவசமயமானது சைவசித்தாந்தம்  என்னும் தத்துவத்தை முழுமையாக்கி கடவுள் நெறியினை வலிமையாக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசிய மாகும்.

  உலகில் பிறக்கின்ற உயிர்களின் நிலையினை மையபடுத்தி சமயங்களின் நிலையினை நோக்குதல் அவசிய மாகிறது.எல்லாச் சமயங்களுமே உயிரின் இறுதி நிலை என்ன என்பது பற்றி எடுத்துக் கொள்ளு வதில் நாட்டம் உடையனவாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.இந்த நோக்கில் பார்க்கின்ற பொழுது உயிரின் முடிந்த பயன் என்பது " முத்தி " அல்லது  வீடுபேறு " என்னும் நிலைக்குள் வந்து விடுகின்றன. ஆனால் இதிலும் ஒருமித்த நிலை இல்லை என்றே ஆகிறது. அந்தந்த சமயத்தின் நிலைக்கு ஏற்பவே  இந்த " முத்தி " என்பதும் எடுக் கப்படுகிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

  இந்த நிலையில் சைவமசமயத்தை உற்று நோக்கும்பொழுது - கடவுள் கொள்கையினை முற்றிலும் முதன்மையாகக் கொண்டே


விளங்குகிறது என்பது நோக்கத்தக்கதாகும்.எது நடப்பதானாலும் , எது நடந்தாலும்எது நடப்பதாக இருந் தாலும் அத்தனைக்கும் கடவுளே காரணம் என்றும் அவனது திருவருளே பெருந்துணை என்றும் அசையாத நம்பிக் கையினைக் கொண்டிருக்கிறது. " முத்தி என்னும் பெரும் பயனானது உயிர் இறைவனது திருவருளை அடைவது தான் " என்பது சைவத்தின் நிலையாகும்.திருவருளினை மையப்படுத்தி சைவசமயம் இருக்கின்ற காரணத்தால் சைவசமயத்தை " திருவருள் நெறி " என்று பெயரி ட்டு அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கும் அல்லவா ! 

  

                    அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன் 

                    அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே

                    மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

                    எப்பொருளும் ஆவ தெனக்கு 

 

காரைக்கால் தந்த தமிழ் அன்னையின் இப்பாடல் இறைவன் திருவருளினைக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

  திருவருளினைப்பற்றி சித்தாந்த சாத்திரங்கள் யாவுமே விளக்கி நிற்கின்றன. ஆனால் எந்தச் சித்தாந்த சாத்தி ரங்களும் திருவருள் என்பதைத் தலைப்பாக்கி அந்தப் பெயரில் இருக்கின்றனவா என்றால் - அந்த நிலையில் ஒன்று மட்டும் தன்னை முன்னிலைப்படுத்தி நிற்பதைக் காணமுடிகிறதுஅதுதான் உமாபதி சிவாச்சாரியார் என்னும் அனுபூதிமானால் அளிக்கப்பட்ட மிகவும் பெருமைமிக்க " திருவருட் பயன் " ஆகும். ஒன்றே முக்கால் அடியில் அமைந்த வள்ளுவப் பெருமானின் திருக்குறள் காலத்தால் முந்தியது. கருத்துக்களால் நிறைந்தது. திருக்குறள் அறநெறியினை அள்ளித்தரும் நூல்.திருக்குறள் வழியில் பயணி த்து அவரின் குறள் வடிவினையே கையாண்டு அருள்நெறியினை வழங்கிடும் வண்ணம் அமைந்ததுதான் திருவருட் பயன். உலகிலே இருக்கின்ற மக்கள் உணர வேண்டிய நெறிகள் இரண்டு.ஒன்று உலகியல் நெறி. மற்றயது மெய்நெறி.இதில் உலகியல் என்பதை பொது நெறி என்றுதான் எடுக்கலாம்.ஆனால் மெய்நெறி என்பதைச் சிறப்பு நெறி என்றே எடுத்திடல் வேண்டும். பொது நெறிக்கு திருக்குறள் வாய்த்தது. சிறப்பு நெறிக்கு அதன் வழியில் பயணப்பட்ட திருவருட் பயன் வாய்திருக்கிறது.  உமாபதி சிவாச்சாரியார் வள்ளுவருக்கு பிற்பட்ட காலத்தவராய் இருந்த பொழுதும் வள்ளுவரின் வழியில் பயணப்பட்டு சித்தாந்த தத்துவத்தை மிகவும் சிறப்பாக ஒன்றே முக்கால் அடியில் கொண்டுவந்து தந்திருக்கும் ஆற்றலுக்குக் கார ணமே அவருக்குக் கிடைத்த  ஆண்டவனின் திருவருள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. உமாபதி சிவாச் சாரியார் காலத்தில் குறள் வடிவில் இலக்கியம் என்பது காணப்படா நிலையில் திருவருட் பயன்  குறள் வடிவில் வாய்த்திருக்கிறது என்பதும் ஆண்டவனின் கருணையென்றே கருதிட வைக்கிறதல்லவா ! திருவருட் பயன் நூலி னை "  மெய்ந்நெறித் திருக்குறள் " என்று அழைப்பதும் பொருத் தமாய் இருக்கும் அல்லவா !

     குறள் வெண்பாவில் நூலினை ஆக்கிடப் பலருமே முன்வருவதில்லை. அதற்குக் காரணம் நினைத்த கருத் தினையெல்லாம் அத்தனை எளிதாகக் குறள் வெண்பாவில் கொண்டுவந்து காட்டிவிடல் இயலாததாகும். அப்படிச் சொல்ல முற்பட்டாலும் சொற்சுவையும்பொருட்சுவையும் பொலிந்திடக் குறள் வெண்பாவினைக் கையாண்டு வெற்றி பெற்றவர்கள் என்னும் பொழுது ஒரு சிலரே வருவார்கள். அப்படியானவர்களுள் திருவருட்பயனை அருளிய உமாபதி சிவாச்சாரியார் அமைகிறார் என்பதும் சிறப்பாய் இருக்கிறதல்லவா !

  சைவசிந்தாந்த நூல்களில் மெய்கண்ட தேவரின் சிவஞான போதம் முக்கியமானது. அதுபோல் சிவஞான சித்தி யாரும் முக்கியமானது. சிவஞான போதத்தின் வழிநூலே சிவஞான சித்தியாராகும்.அப்படி இவை இரண்டும் இருக்க உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம் என்னும் நூலினை ஏன் படைக்க வேண்டும். என் னும் சிந்தனை எழுகிறதல்லவா? சிவஞான போதத்தைசிவாஞான சித்தியாரை படித்து அதன் நுட்பங்களை எழுதில் அறிந்து கொள்ளுவது எல்லோர்க்கும் இலகுவானதாக இருக்கவில்லை. இந்த நிலையிலேதான் யாவரும் அணுகும் வகையில் இலகுவாக்க சிவப் பிரகாசம் நூலினை  உமாபதி சிவாச்சாரியார் வழங்கும் நிலை ஏற்பட்டது. சிவப்பிரகாசத்துக்கு உதவியாகவே திருவருட் பயனை அரு ளினார் என்பதும் நோக்கத்தக்கத்தக்கதாகும்,திருவருட் பயனினை முதலில் தெரிந்து கொண்ட பின்னர் அது காட்டுகின்ற வழியில் சிவப் பிரகாசத்தைப் பயின் றால் சித்தாந்தப் பொருளினை முட்டினின்றி நன்றாய் விளங்கிடக் கூடிய தாக இருக்கும் என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய விடயமாகும். சிவாகமக் கடலைக் கடக்க உதவிடும் மரக்கலம் சிவப்பிரகாசம் என்றால் அந்த மரக்கலத்தை இயக்கிடும் மாலுமி யாக அமையப் பெற்றிருப்பதுதான்  " திருவருட் பயன் " எனலாம்.வள்ளுவத்தை மனமிருத்தி அவர் வழியில் பயணி த்து சைவசித்தாந்த கருத்துக்களை வழங்கிட ஆசைப்பட்டார் உமாபதி சிவாச்சாரியார். வள்ளுவர் அறம்.   பொருள்,   இன்பம் என்னும் அளவில் நின்றுவிட உமாபதி சிவாச்சாரியார் அதற்கு அப்பால் சிந்தித்து " வீடு " பற்றி சொல்லுவ தையே குறிக்கோளாக்குகிறார்.

  அந்த நிலையில்தான் திருவருட் பயன் வந்து அமைகிறது எனலாம். வள்ளுவரைப் பின்பற்றி அதிகாரங்கள் வைக் கிறார். அதிகாரங்களுக்குள் வள்ளுவர் பாதையில் பத்துக்குறள் என்பதையும் அமைக்கின்றார். ஆனால் அவர் அமை க்கும் குறள்களின் அடிநாதம் மட்டும் வீடு பேற்றினையும் திருவருள் பற்றியதுமாகவே அமைகிறது என்பதுதான் மிகவும் முக்கிய நிலையாகும்.வள்ளுவரை விட்டு விட திருவருட்பயன் ஆசிரியருக்கு மனமில்லை. அதனால் தொட க்கத்திலேயே வள்ளுவர் வழியில் தானும் பயணப்ப டுவதையே காணமுடிகிறது. 

  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

  பகவன் முதற்றே உலகு 

என்றுதான் வள்ளுவர் திருக்குறளை ஆரம்பிக்கின்றார். திருவருட் பயன் ஆசிரியரும் அதனைப் பின்பற் றியே

       அகர உயிர்போல் அறிவாகி யெங்கும்

      நிகரில்இறை நிற்கும் நிறைந்து

 என்றே ஆரம்பிக்கின்றார். வள்ளுவர் அகரத்துக்குக் காட்டும் விளக்கத்தில் இறைவன் என்பது சொல்லாமல் சொல் லப்படுகிறது. ஆனால் இறைவனையும் அவன் திருவருளினையும் மட்டுமே காட்டும் வண்ணமாய் வந்திருக்கும் திருவருட்பயனின் நிலையோ வேறாக நிற்கிறது. அகரத்தை அங்கிங்கு அலைய விடாமல் இறைவனுடன் இணைத்தே இருப்பதுதான் திருவருட்பயனின் தனித்துவம் !அதன் தத்துவம்  என்றும் கொள்ளலாம் அல்லவா !

  வள்ளுவர் உலகியலை உட்பொருளாக்கியபடியால்தான் கூறவந்த யாவற்றையும் பொதுமை நோக்கி லேதான் பார்க்கிறார். அதற்கான வழியிலேதான் அனைவரையும் அழைத்தும் செல்லுகிறார். ஆனால் திருவருட் பயன் ஆசிரியர் வள்ளுவர்வழியில் பயணப்படப் புறப்பட்டாலும் அவரின் உட்கிடை இறை பற் றியதும் . இறையினது திருவருள் நிலை பற்றியதுமாகவேதான் நிறைந்திருக்கிறது.வள்ளுவர் எந்த வொரு நிலையிலும் கடவுளின் பெயரினைக் காட்டாமலே திருக் குறளினை அமைத்திருக்கிறார்.ஆனால் வள்ளுவர் வழியில் பயணப்பட்ட உமாபதி சிவாச்சாரியாரோ திருவருட் பயனின் காப்புச் செய் யுளிலே ஆனைமுகக் கடவுளைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவ தைக் காணுகிறோம்.

 

        நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்

        கற்குஞ் சரக்கன்று காண்

 

இதற்குக் காரணம் திருவருட்பயன் இறைவனின் திருவருளினை வெளிக் கொணரும் பாங்கில் பயணப்படுவதே யாகும். அந்த வகையி லேதான் திருவருட் பயனின் அதிகார வைப்பு முறைகளும் இருக்கின்றன என்பது மனங் கொள்ளத் தக்கதாகும். பதிமுது நிலைஉயிரவை நிலைஇருள்மல நிலைஅருளுறு நிலைஅறியு நிலைஉயிர் விளக்கம்இன்புறு நிலைஐந்தெழுத்தருள் நிலை,அணைந்தோர் தன்மை.என்னும் பாங்கில் அத்தனை அதிகா ரங்களுமே திருவருளோடு இணைந்தாகவே வீடு பேற்றின் நுட்பத்தை உணர்த் துவதாகவேதத்துவ தரிசன மாகவேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வள்ளுவத்தின் போக்கில் இருந்து தனித்துவமாய் திருவருட் பயனை உமாபதி சிவாச்சாரியார் வழங்கியிருக்கிறார் என்பதே உண்மையாகும்.

  சமயபாடத்தைக் கல்வியில் இணைத்து அதனைக் கட்டாய பாட மாக்கிய நாடென்னும் வகையில் இலங்கைத் திரு நாட்டைத்தான் குறிப்பிட வேண்டும். அரசாங்கத்தால் சமயபாடம் கல்வி அமைப்பில் கட்டாயம் ஆக்கப்பட்டி ருக்கிறது. அவரவர் விரும்பிய சமயபாடத்தைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும். அந்த வகையில் இலங்கையில் இருக்கின்ற சைவத்தமிழ் பிள்ளைகள் சைவசமயத்தைக் கற்றிடும் நல் லதோர் வாய்ப்பு வாய்த்திருக்கிறது. அங்கு சமயபாடத் திட்டத்தில் தோத்திர நூல்களும்சாத்திர நூல்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. சாத்திர நூல்கள் என்னும் நிலையில் " திருவருட் பயன் " சேர்க்கப் பட்டிருக்கிறது என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமான செய்தியாகும்.இந் தியாவில் தமிழ்நாட்டில்தான் தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் தோன்றின. அதனை ஆக்கிய மகான்களுமே தோன்றினார்கள். ஆனால் அங்கு சமயபாடம் பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதே இல்லை என்பது நோக்கத் தக்கது.இதனால் இந்தியத் தமிழ்ப்பிள்ளைகளுக்குக் கிடைக்காத பெருவாய்ப்பு இலங்கை சைவத் தமிழ் பிள்ளை களுக்கு வாய்திருக்கிறது என்பது இறைவனின் திருவருள் என்றுதான் எண்ணிட வைக்கிறது.

  சைவசித்தாந்தக் கருத்துக்கள் என்றாலே பலரும் தூரவே ஓடி விடுவார்கள். அப்படி ஓடுபவர்களை யெல்லாம் ஓடவிடமால் அருகில் அன்புடன் அரவணைக்கும் பாங்கில் அமையப் பெற்ற சித்தாந்த நூலாக அமையப் பெற்றி ருப்பதுதான் திருவருட் பயனின் சிறப்பு என்று சொல்லலாம். சித்தாந்தக் கருத்துக்களை விரித்து உரைக்காமல்,   சிக்கலாக்கி நிற்காமல்தட்டு முட்டு இல்லாது இலகுவாய் மனதில் பதியும் வண்ணம் குறைந்த அடியில் நிறைந்த கருத்துக்களை தந்து நிற்பதாய் அமையப் பெற்றிருப்பதுதான் திருவருட் பயன் என்றால் அது மிகையாது.

    நூறு குறட்பாக்களில் சித்தாந்தக் கருத்துக்களைத் தந்து நிற்கும் வகையில் திருவருட்பயன் அமையப் பெற்றி ருக்கிறது என்பதும் அதன் சிறப்பினைக் காட்டி நிற்கிறது எனலாம். குறட் பாக்களைக் கையாண்டு கருத்துக்களை வெளிப்படுத்துவதில் வள்ளுவப்பெருமான் வல்லவரே. ஆனால் சித்தாந்தக் கருத்துக்களை குறப்பாவினால் வெளி ப்படுத்தும் துணிவு உமாபதி சிவாச்சாரியாருக்கே உரித்தாகியிருப்பதையே திருவருட் பயன் தெளிவுறுத்தி நிற் கிறது. சித்தாந்தக் கருத்துக்களை யாவரும் தெளிவாய் மனதில் இருத்திட வேண் டும் என்னும் நோக்குடன் ,   உவ மைகளைக் கையாண்டு திருவருட் பயனைத் தந்த நிலையினை வியந்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது எனலாம். வள்ளுவர் பெருமான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு அவரின் நோக்குக்கு - வள்ளுவத்தில் உவமை களைக் கையாழுவது அவ்வளவு கடினமானது அல்ல. ஆனால் சித்தாந்தத்தை காட்டும் வகையில் எழுந்த திருவ ருட்பயனில் காட்டி அதனையும் அகத்தினுள் அமர்ந்தி டச் செய்திட்ட பாங்கினைப் பாராட்டி வியந்திடவே வைத்திட வைக்கிறதல்லவா ! உவமைகளைக் கையா ண்டதோடு மட்டுமல்லாமல் புதுமைவகை விளக்கத்தினையும் கையாண்டமையும் வியந்து பார்த்திட வேண்டியே இருக்கிறது.

 

      ஏகன் அநேகன் இருள்கருமம் மாயை இரண்டு

      ஆகஇவை ஆறு ஆதியில்

 

என்னும் திருவருட் பயன் குறளில் புதுமையினை உமாபதி சிவாச் சாரியார் புகுத்தியிருக்கிறார். சைவசித் தாந்த ப்படி பதி,பசு,பாசம் என் னும் முப்பொருள்களே உள்ளன என்று கொள்ளுவதுதான் வழக்கம். ஆனால் இவரோ ஆறு என்று திருவருட் பயனில் காட்டுவது புதுமையாக இருக்கிறதல்லவா ஆறு என்று சொல்லி விடாமல் அதற்கு விளக்க மும் அந்தக் குறளில் தருவதுதான் சிறப்பாகும். அதாவது இறைவன் உயிர்கள்ஆண வம் கன்மம்,சுத்தமாயை   அசுத்தமாயை என்று ஆறு என்று காட்டி இவை அனைத்துமே அனாதியாக உள்ளன என்று கூறி தன்னுடைய புதிய பார்வையினை வெளிப்ப டுத்துவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

 

    ஊமன்கண் போல ஒளியும் மிக இருளே

    யாம் மன்கண் காணா தவை

 

கூகை என்னும் பறவை இங்கே உவமையாகக் காட்டப்படுகிறது. ஆணவமாகிய இருளினை அனைவர் மனத்திலும் பதித்திடக்  கையாண்ட இந்த உவமை புதுமையாய் இருக்கிறதல்லவா பொருள்களை ஞானக் கண்ணால் காண முடியாத உயிர்களுக்கு ஞான மெல்லாம் அஞ்ஞானம் போலவே தோற்ற மளிக்கும். அது எப்படி என்பதை விளக் கிடவே இங்கே கூகை வருகிறது. கூகைக்கு பகலிலும் கண் தெரியாது. பகலில் சூரியனின் வெளிச்சத்தைக் கூட கூகை இருளாகவே பார்க்கும். உவமையின் சிறப்பு தெரிகிறதல்லவா !

 

  ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்

  இருபொருளும் காட்டாது இது

 

  பலரைப் புணர்ந்தும் இருபாவைக்கு உண்டு என்றும்

  கணவற்குத் தோன்றாத கற்பு

 

பால்ஆழி மீன்ஆழும் பான்மைத்து அருள் உயிர்கள்

மால்ஆழி ஆளும் மறித்து

 

பரப்பமைந்து கேண்மின் இது பாற்கலன் மேற் பூசை

கரப்பு அருந்த நாடும் கடன்

 

விடம்நகுலம் மேவினும் மேய்ப்பாவகனில் மீளும்

கடனில் இருள்போவது இவன்கண்

 

எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகன்

தங்குமவன் தானே தனி

 

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்

பானு ஒழியப் படின்

 


இங்கே காட்டப்பட்ட திருவருட் பயன் குறள்களை உற்று நோக்கும் பொழுது சிந்தாந்தக் கருத்துக்களை அதாவது சிக்கலான கருத்துக்களை சிந்தனைகளை இலகுவாக்கிட எடுத்திட்ட புதுமையும் உவமைகளும் புலனாகி நிற்கிறது அல்லவா !

  சித்தாந்த சாத்திரங்களைப் படித்திட நினைப்பார்கள் மிகவும் குறைவு. அதற்குக் காரணம் அவை அமைந் திருக்கும் பாங்கு என்று கூடச் சொல்லலாம். துணையில்லாமல் அவற்றைப் படித்து விளங்குவது என்பது சற்று கடினமாகவே காணப்படுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.இவற்றை எல்லாம் மனதில் இருத்தியே யாவரும் எழுதில் சித்தாந்தத்தை நாடவேண்டும். அதனுள் மூழ்கிட வேண்டும் என்னும் நோக்கில் அமையப்பெற்றிருப்பதுதான் உமாபதி சிவாச்சாரிரியார் என்னும் அனுபூதிமானால் அருளிச் செய்யப்பட்ட   திருவருட் பயன் " என்னும் நூலாகும். படிப்போம் ! பயன் பெறுவோம் ! பரமனின் அருளினை  உணர்ந் திடுவோம் ! பரி பக்குவமும் வந்து வாய்க்கும் !


No comments: