அறிவாலயம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
     
நூலகம் போவது யாவர்க்கும் நன்று
     
ஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்
     
நூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் !

    
சாதியும் பாராது சமயமும் பாராது
    
பதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது
    
படிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு
    
பக்குவமாய் கிடைக்குமிடம் நூலகமொன்றேயாம் !

    
நூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்
    
நூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்
    
வாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்
    
வளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் ! 

   ஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்
  பாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும் 
 வேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால் 
 விருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் !



   கோவில்களும் நூலகமும் நாட்டினுக்கு இலட்சணமே 
  கோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது 
  அதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்
 அறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் !

    நூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார் 
  குழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார் 
  நூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்
  நூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே !

    தாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி  நிற்பதற்கு
   நூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும் 
   வேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்
   நாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ !

    கோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்
    நூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம் 
   கற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்
    கற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் ! 

No comments: