.

டெல்லி காமனி அரங்கில் எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை நேற்று பெற்றுக் கொண்டார். விருதும் காசோலையும் பெற்றுக்கொண்டு வந்த அவரைத் தமிழர்கள், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  


அப்போது சஞ்சாரம் நாவல் உருவாக்கப் பின்னணி குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். ``சஞ்சாரம் நாவலை எழுத வேண்டும் என்ற விருப்பம் இன்று உருவானதல்ல; சிறுவயதிலேயே உருவானது. சிறுவயதிலேயே கோயிலில் திருவிழாக்களில், திருமண மேடைகளில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். இவர்களெல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள்? யார் இவர்களுக்கெல்லாம் ஆசிரியர்கள்? என்ன ஊதியம் கிடைக்கும்? என்றெல்லாம் கேள்விகள் தோன்றும். அந்த வயதில் அவர்கள் வருவதும் தெரியாது, செல்வதும் தெரியாது. ஆனால், வாசிக்கிற நேரத்தில் சரியாக வாசித்துக்கொண்டிருப்பார்கள்.





சிறுவயதில் நாதஸ்வரக் கலைஞர்களைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறேன். ஒரு முறை அப்படிச் சென்றபோது, அந்த நாதஸ்வரக் கலைஞரின் வீடு சிறிய குடிசை வீடு. அந்தச் சிறிய வீட்டினுள் உள்ள கலைஞரிடம் எவ்வளவு மகத்தான இசை இருக்கிறது என்று வியந்தேன். அப்போதிலிருந்தே இந்த நாதஸ்வரக் கலையை எழுத வேண்டும் என்றல்ல கேட்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.


பல்வேறு மிக முக்கியமான நாதஸ்வரக் கலைஞர்களின் இசையை நேரில் கேட்டேன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம். என்னுடைய அம்மாவின் ஊரான கோவில்பட்டியில் காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு சிலை உள்ளது. அடிக்கடி அந்தச் சிலையைப் பார்ப்பேன். பின், அக்குடும்பத்தில் உள்ளவர்களுடன் அறிமுகமாகி, அவர்களின் மூலம் காருக்குறிச்சி அருணாசலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.




தற்செயலாக ஒரு நண்பர் வந்து சொன்னார், `கோயில்களில் ஓர் இசைக்கருவியை வாங்கிப் பொருத்திவிடுகிறார்கள். அது வந்தவுடன் இசைக் கலைஞர்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டோம்’ என்று கூறினார். அவரிடம் நீங்க என்ன செய்றீங்கன்னு கேட்டப்போ, `நான் மேளம் வாசிக்கிறவர்தான், இப்போ ஹோட்டலில் சர்வராக வேலைபார்க்கிறேன்’ என்றார். இதைக் கட்டுரைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்று தோன்றியது. அதனால், நாவலாக்க முனைந்தேன். நிறைய இசைக்கலைஞர்களைச் சந்தித்தேன். அவர்களோடு பேசினேன். குறிப்பாக மல்லாரி கேட்க வேண்டும் என்பதற்காகக் கோயில்களில் சாமி புறப்பாடு நடைபெறும்போதெல்லாம் சென்று கேட்டேன். நான் இசை அறிஞனல்ல, அதனால், இசை நுணுக்கங்களை அறிந்தகொள்ள இந்நாவல் உருவாக்கத்தின்போது, பல இசை அறிஞர்களின் உதவியைப் பலமுறை நாடினேன்.




மற்றபடி கரிசல் மண்ணின் கதையை முன்னோடியாக எழுதிய கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, இவர்கள்  அனைவருக்கும் என் எழுத்தின் வழியாகக் காணிக்கை செலுத்தியிருக்கிறேன் என்றுதான் சொல்வேன். அதுதான் சஞ்சாரம் என்றார்” எஸ்.ராமகிருஷ்ணன். வாழ்த்துகள் தேசாந்திரி!


nantri vikatan.com/

No comments: