தமிழன்னை தவிக்கின்றாள் ! - ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா



  [  கலைஞருக்கு ஒரு இரங்கற்பா  ]
             
            தமிழ்த்தாயின் தவப் புதல்வா
               தானாக எழுச்சி பெற்றாய்
           அமிழ்தான தமிழ் மொழியை
                 ஆசை கொண்டு அரவணைத்தாய் 
            தமிழ் முரசாய் நீயிருந்தாய்
                   தமிழெங்கும் முழங்கி நின்றாய்
            தவிக்க விட்டுப் போனதெங்கே
                    தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

            சங்கத் தமிழ் இலக்கியத்தை
                தானாகக் கற்று நின்றாய்
            பொங்கிவந்த தமிழ் உணர்வால்
                  பொழிந்து நின்றாய் பலவுரைகள்
            ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
                  உள்ளம் அதால் நேசித்தாய்
            உனைப் பிரிந்து வாடுகின்றார்
                 ஓலம் அது கேட்கலையா    !

             வள்ளுவத்தை  வாழ்வு  எல்லாம் 
                  மனம் முழுக்க நிறைத்தாயே 
            வள்ளுவத்தை பலர் அறிய
                 வரைந்தாய் நீ ஓவியத்தை
             வள்ளுவர்க்கு சிலை எடுத்தாய்
                  வள்ளுவர்க்கு உரு கொடுத்தாய்
             தெள்ளு தமிழ் அறிவுடையாய்
                  தேம்பி நின்று அழுகின்றோம் ! 


         வெள்ளித்திரை  உன்  வரவால்
             வீறு  நடை  போட்டதன்றோ 
         அள்ளிவந்த உன் தமிழை
              ஆர்வமுடன் பலர்  ரசித்தார் 
         எதுகை மோனைத் தமிழாலே
              எல்லோரும் உனைப் பார்த்தார்
          எல்லோரும் ஏங்கி நிற்க
               எங்குதான் சென்று விட்டீர்    !


           சட்ட   சபை    வரலாற்றில் 
               சாதனைகள் பல படைத்தாய்
           திட்டம் இட்டுச் செயலாற்றி
                தீரனாய் உயர்ந்து நின்றாய்
           கட்டழகு மீசை உடன் 
                கறுப்பு நிறக் கண்ணாடி
           கலைஞர் அதை அடையாளம்
                காணாமல் போன தெங்கே  ! 


       மு.க  எனும்  எழுத்தை 
           முணு முணுக்கும் மக்களெலாம்
      முத்தமிழின் சொத்து என 
          மு.க வை மதிக்கின்றார் 
      மு.க. வின் துணிச்சலுக்கு
           மு.க தான் சமமாகும்
      மு.க வை  காணாமக்கள்
           மூச் சொழிந்து நிற்கின்றார் ! 








No comments: