ஆனந்தம் பெருகிடுமே ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா



        கல்லுக்குள் உறைந்திருக்கும்
           கலைநயத்தைப் பார்ப்பதற்கு
        மெல்லவே உளிசென்று
            வெட்டிவிடும் கல்லதனை 
       வேண்டாத பகுதிகளை 
             வெட்டியே எறிந்துவிடின்
        வெளிப்படும் பகுதிதான்
            வியப்பெமக்குத் தந்துவிடும் !

       வேதனையும் சோதனையும் 
         தாங்குகின்ற வேளையில்த்தான்
      மேலான தன்மையங்கே
          வெளிப்பட்டு வந்துநிற்கும் 
      கல்பட்ட வேதனையால்
         கடவுளுரு காட்சிதரும்
      கால்மிதிக்கும் கல்லுக்கு
          வேதனைகள் புரியாது ! 

    மனமென்னும் கல்தன்னை
       மாற்றிவிட  வேண்டுமென்று
   தினமுமே பலவற்றை
      செய்கின்றோம் வாழ்வெல்லாம்
   ஆனாலும் அம்மனமோ 
       ஆகாத வழிசென்று
    ஆணவத்தை அணைத்துவிட
        ஆர்வம்கொண்டே நிற்கிறது !


   ஆணவத்தை அணைத்துவிட்டால்
      அன்பங்கே அகன்றுவிடும்
   அறமொளிந்து மறமோங்கி
       ஆசையங்கே ஆர்ப்பரிக்கும் 
   அன்புபாச நேசமெல்லாம் 
      அனாதரவாய் ஆகிவிடும்
   ஆண்டவனின் நினைப்புமே
        அற்பமாய் ஆகிவிடும் !

   வேண்டாத அத்தனையும்
      வேராக ஊன்றிவிடின்
  வில்லங்கம் அத்தனையும் 
      நல்லவற்றை அழித்துவிடும் 
  வில்லங்கம் தனையகற்ற
     நல்லதொரு செயலாக
 வேண்டாத அத்தனையும்
   வெட்டிவிடல் முறையாகும் ! 

   வேண்டாத விஷயங்களை
      விரைவாக வெட்டிடுவோம்
   வேதனையும் சோதனையும்
       சாதனைக்கே வழிசமைக்கும்
   ஆதலால் அனைவருமே
       ஆண்டவனைக் காண்பதற்கு
   அகற்றிடுவோம் ஆணவத்தை
        ஆனந்தம் பெருகிடுமே !


 image1.JPG



No comments: