துணையெனவே கொண்டிடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா


     ஆலயம் தொழுவது சாலவும் நன்று
     நூலகம் போவது யாவர்க்கும் நன்று
     ஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்
     நூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் !

    சாதியும் பாராது சமயமும் பாராது
    பதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது
    படிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு
    பக்குவமாய் கிடைக்குமிடம் நூலகமொன்றேயாம் !

    நூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்
    நூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்
    வாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்
    வளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் ! 

   ஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்
   பாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும் 
   வேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால் 
   விருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் !


   கோவில்களும் நூலகமும் நாட்டினுக்கு இலட்சணமே 
   கோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது 
   அதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்
    அறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் !

    நூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார் 
    குழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார் 
    நூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்
    நூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே !

    தாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி  நிற்பதற்கு
    நூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும் 
    வேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்
    நாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ !

    கோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்
    நூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம் 
    கற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்
    கற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் ! 
   


  எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

No comments: