நாம் உணர்ந்து செயற்படுவோம் ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா



      பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை
      பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை
      பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால்
      பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !

      இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது
      இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது
       நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால்
       நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !

      விஞ்ஞானம் எனச்சொல்லி விவரீதம் வந்திருக்கு
      விளைச்சிலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை
      பொய்யில்லா வகையினிலே விளைச்சல்கண்ட பூமியெலாம்
      பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !

     காய்கறியைப் பெருக்குதற்கு கண்டுவிட்ட விஞ்ஞானம்
     காய்பெருக்க வைத்துவிட்டு கால்பறித்து நிற்கிறதே
     நோய்நொடிகள் பலதந்து நொய்யும்படி செய்யுமிந்த
     வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !


     நாகரிகம் எனும்பெயரால் நம்வீட்டில் புகுந்துவிட்ட
     நாமறியா உணவுவெல்லாம் நம்முள்ளே செல்கிறது
     சென்றுவிட்ட உணவெல்லாம் சீரிழக்கச் செய்துநின்று
     குன்றிவிடச் செய்வதனை என்றுதான் உணருவதோ !

     பலகடைகள் பலவுணவு பல்வேறு வடிவங்களில்
     பாங்காக வலம்வந்து பலரையுமே மயக்கிறதே
     நலன்பற்றி நினையாமல் நயம்பற்றி எண்ணுவதால்
     நலன்கெட்டு போவதற்கு நாமுடந்தை ஆகுகின்றோம் !

     பண்டிகைகள் வந்துவிட்டால் பட்சணங்கள் செய்திடுவார்
     பட்சணங்கள் அத்தனையும் பக்குவமாய் அமைந்திருக்கும்
     இப்போது பட்சணங்கள் எத்தனையோ வருகிறது
     அத்தனையும் ரசாயான கலவையாய் அமைகிறதே !

     கூழ்குடித்தோம் மோர்குடித்தோம் குடல்நோய்கள் வரவில்லை
     பழஞ்சோற்றை உண்டாலும் பழுதெம்மை அண்டவில்லை
     விலைகொடுத்து பலவற்றை விருந்தெனவே உண்ணுகின்றோம்
     மறுநாளே வைத்தியரை வலம்வந்து நிற்கின்றோம் !

     நெல்லரிசிச் சோறுண்ண நிம்மதியே இல்லையென்று
     வெள்ளைநிற உணவெல்லாம் வீட்டில்வாங்கி வைக்கின்றோம்
     நல்லதெல்லாம் மாட்டுக்கு நாம்கொடுத்து விட்டுநிதம்
     பொல்லாத உணவையெல்யாம் பொறுக்கிவைத்து உண்ணுகின்றோம் !

    உயிர்ச்சத்து அத்தனையும் உதறிவிட்ட உணவுகளை
    உயர்வாக எண்ணிநிதம் ஒழுங்காக உண்ணுகின்றோம்
    நோய்வந்த பின்னாலே நூறுமுறை அழுகின்றோம்
    யார்வந்து சொன்னாலும் நம்குணமோ மாறவில்லை !

    பாட்டிதந்த உணவெல்லாம் பறக்கவிட்டு விட்டதனால்
    பருவம்வரும் முன்னாலே பலநோய்கள் வருகிறதே 
    நாட்டார்கள் காட்டார்கள் காட்டிவைத்தை முறையாவும்
    நம்வாழ்வை வளம்படுத்தும் என்பதனை மறந்துவிட்டோம் !

    பழமையென்னும் அத்திவாரம் பலமளிக்கும் என்பதனை
    உணருகின்ற நிலையெம்முள் உருவாகி வரவேண்டும்
    விஞ்ஞானம் நாகரிகம் விந்தைபல செய்தாலும்
    நம்வாழ்வில் அதன்பெருக்கை நாமுணர்ந்து செயற்படுவோம் !



image1.PNG




No comments: