வாய்த்துள்ளாய் குலவிளக்காய் ! - எம் .ஜெயராமசர்மா... மெல்பேண்

.

        செம்பவள வாய்திறந்து 
        சிரித்துநிற்கும் உன்முகத்தை
        தினமுமே பார்த்திருந்தால் 
        சிந்தனையே தெளிந்துவிடும்
        வந்தநோவும் ஓடிவிடும்
        வலியனைத்தும் மறைந்துவிடும்
        எந்திருவே உனையணைத்து
        என்னாளும் இன்புறுவேன் !

        முழுநிலவு வடிவான
        அழகுநிறை உன்முகத்தை
        முத்தமிட்டு முத்தமிட்டு
        மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
        கொழுகொழுத்த கையாலே
        குறும்புநீ செய்கைகையிலே
        ஒழுகிவரும் இன்பமதை
        உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !


        பொட்டுவைத்துத் தலைசீவி
        புதுச்சட்டை போட்டுனக்கு
        மெத்தையென என்மடியில்
        விரல்சூப்ப விட்டிருப்பேன்
        சூப்பிவிட்டு துப்புகின்ற
        எச்சிலெனை நனைக்கையிலே
        பார்க்கின்ற அத்தனையும்
        பரவசமாய் தெரியுமப்போ !

        மழலை  மொழிபேசி
        மயக்குவாய் எனைநீயும்
        மாமருந்தாய் வந்தமைந்த
        மாமணியே நீயெனக்கு 
        மாதவத்தால் உனப்பெற்றேன்
        வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்
        வையகத்தில் நான்வாழ
        வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

No comments: