வரவேற்போம் வாருங்கள் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்



தைபிறந்தால் வழிபிறக்கும் 
               தானென்று நாம்நினைப்போம்
        தைமகளும் சேர்ந்துநின்று
               சித்திரையை வரவேற்பாள்
         பொங்கலொடு கிளம்பிவரும் 
                புதுவாழ்வு தொடங்குதற்கு
         மங்கலமாய் சித்திரையும்
                 வந்துநிற்கும் வாசலிலே  ! 


         சித்திரை என்றவுடன் 
                அத்தனைபேர் மனங்களிலும் 
         புத்துணர்வு பொங்கிவரும் 
                புதுத்தெம்பு கூடவரும் 
         எத்தனையோ மங்கலங்கள்
                 எங்கள்வீட்டில் நிகழுமென 
          மொத்தமாய் அனைவருமே
                   முழுமனதாய் எண்ணிடுவார் !



           உழவரெலாம் மகிழுதற்கு 
                    உதவிடட்டும் சித்திரையும்
            உழைப்பவர்க்கு மனநிறைவை
                     ஊட்டிடட்டும் சித்திரையும்
             நாட்டினிலே அமைதிவர
                      நல்வரவாய் இருந்திடட்டும் 
             நமையெல்லாம் மகிழ்விக்க 
                      சித்திரையை வரவேற்போம் ! 


               ஈழத்தில் சித்திரையும் 
                       இனிப்பாக இருக்கட்டும்
               இந்தியாவில் சித்திரையால்
                        எல்லோரும் சிறக்கட்டும்
                வாழவந்த நாட்டினிலும் 
                          மனங்குளிரச் செய்யட்டும்
                 வாழ்த்திநின்று சித்திரையை
                           வரவேற்போம் வாருங்கள் !
        


      


 



No comments: