உறவுகளே அற்றுப் போகும்போது…!

 


-சங்கர சுப்பிரமணியன்.






பகல் பன்னிரெண்டு மணி இருக்கும். வானத்தில் சூரியன் மறைந்தும் வெளி வந்தும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க ஜூலை மாதக் குளிர் வாட்டிக்கொண்டிருந்தது. மெல்பனில் நடுத்தரத்துக்கும் மேலுள்ள
மக்கள் வாழக்கூடிய பகுதியில் வாழும் நடுத்தர வயது தம்பதியர் குளிர்தாங்க முடியாமல் வீட்டில் சாளரங்களை எல்லாம் திரைகளால் மூடி சீடேற்றும் சாதனத்தை ஓடவிட்டபடி அமர்ந்திருந்தனர். 

திடீரென அவர்கள் வீட்டின்முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் திரைச்சீலையை விலக்கிப்பார்த்த ஜான் மனைவி மேரியிடம்,

“ஹனி, நம் வீட்டு ட்ரைவையில் ஒரு கார் வந்து நிற்கிறது” என்றார்.

“யாராவது திரும்புவதற்காக நம் பாதையை பயன்படுத்துவார்கள், டியர்” என்றாள் மேரி.

“இல்லையில்லை யாரோ காரிலிருந்து இறங்குகிறார்கள்”

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அவர்களது மகன் ஸ்டீவ் காரிலிருந்து இறங்கி வந்து அழைப்பு மணியை அழுத்த கதவைத் திறந்தார் ஜான். ஸ்டீவ் கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு பீட்ஷா கடையில் டெலிவரி பாயாகவும் வேலை செய்கிறான்.

கதவைத்திறந்த ஜான், “என்ன ஸ்டீவ் இன்னும் உனக்கு வேலை நேரம் முடியவில்லையே? 
அதற்குள் வந்து விட்டாய்? அதுவும் விலையுயர்ந்த காரிலிருந்து இறங்குகிறாய்?”

என்று அப்பா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே அம்மா தன் பங்குக்கு,
“என்ன விலையுயர்ந்த காரிலேயே வந்திருக்கிறாய்? யாராவது நண்பனுடைய காரை ஆசைக்கு ஓட்டிப்பார்க்க எடுத்து வந்தாயா?” என்று கேட்டாள்.

“ஐயோ அம்மா அப்பா,ஒவ்வொருத்தராக கேள்வியை கேளுங்கள். உங்கள் ஆர்வமும் பிரமிப்பும் எனக்கு புரிகிறது” என்றவன் பெற்றோரைப் பார்த்து,

“உங்கள் இருவருக்குமான பதில் இந்த விலையுயர்ந்த கார் என்னுடைதுதான். நான் இதை விலைக்குத்தான் வாங்கியிருக்கிறேன்” என்றான்.

வியப்புக்கு மேல் வியப்படைந்த பெற்றோர் சும்மா விளையாடாதே. இன்னும் படித்தே முடிக்கவில்லை. நீ பார்க்கின்ற பீட்ஷா டெலிவரியில் வரும் வருமானத்தை வைத்து இவ்வளவு விலையுயர்ந்த காரை எப்படி உன்னால் வாங்க முடியும் என்றனர் பெற்றோர்.

“நான் தான் வாங்கியிருக்கிறேன். இதன் விலையைக் கேட்டால் இன்னும் நீங்கள் அதிர்ந்தே போவீர்கள்” என்றான்.

“என்ன நீ புதிர்மேல் புதிர் போடுகிறாய்.  எப்படிப் பார்த்தாலும் நாற்பது ஆயிரம் டாலர் இருக்குமே? என்றார் ஜான்.

“நீங்கள் சொல்வது சரிதான் டாட். ஆனால் நான் இதை வெறும் ஐந்தாயிரம் டாலரிக்குத்தான் வாங்கியிருக்கிறேன். இதுதான் உண்மை. நம்புங்கள்” என்று ஸ்டீவ் பதில் சொன்னான்.

இதை சற்றும் எதிர்பாராமல் நம்பவும் முடியாமல் வாயடைத்து நின்ற பெற்றோரிடம் விளக்கினான் ஸ்டீவ். இதே தெருவில் எமிலி என்ற மருத்துவர் வசிக்கிறார். அப்பெண்மணிக்கும் உங்கள் வயதே இருக்கும். அவர்கள் வீட்டுக்கு வாடிக்கையாக நான்தான் பீட்ஷா டெலிவரி செய்வேன்.

அந்த பழக்கம்தான். ஒரு தாய் தனது மகனுடன் பேசுவதுபோல் அன்பாக பேசுவார்கள். கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் வீட்டுக்குள்ளே அழைத்து கேக் எல்லாம் கொடுத்து உபசரிப்பார்கள் என்று சொல்லி வரும்போதே,

“கேக்கெல்லாம் கொடுப்பது சரி. அதற்காக விலையுயர்ந்த காரை இந்த விலைக்கா கொடுப்பார்கள்?” என்று கேட்டாள் மேரி.

“அதைத்தான் மாம் என்னாலும் நம்ப முடியவில்லை. கொஞ்சநாளாகவே கலகலப்பாக இருக்கும் அவர்கள் எதையோ பறிகொடுத்ததுபோல் இருக்கிறார்கள்”

“அப்படியா?”

“ஆமாம், மாம். அப்போதுதான் நான் ஓருநாள் பீட்ஷா டெலிவரி செய்தபோது இந்த காரைக்காட்டி இந்தகார் உனக்கு பிடித்திருக்கிறதா?” என்றார்கள்.

நான் ஆம் என்றதும் அப்படியானால் நீயே எடுத்துக்கொள் என்றதும் நான் என்னிடம் இந்த காரை வாங்கும் அளவு பணமில்லையே என்றதும் உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார்கள். நான் மூவாயிரம் இருக்கிறது என்றதும் ஐயாயிரத்துக்கு வாங்கிக்கொள் என்றார்கள்.

நான் சற்று யோசித்ததும் திரும்பவும் கார் பிடித்திருக்கிறதா என்றார்கள். நான் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு என்றேன். அப்படின்னா நீயே எடுத்துக்க என்றதும் மீதம் இரண்டாயிரம் இல்லையே என்றேன். பரவாயில்லை உன்னால் எப்போது கொடுக்கமுடியுமோ அப்போது கொடு. கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தாலும் பரவாயில்லை என்று சொன்னார்கள்.

“அப்படியா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நான் அவர்களைப் பார்க்க வேண்டுமே.” என்றாள் மேரி.

“நம்ம தெருவில் தான் அம்மா. எட்டு வீடு தாண்டியுள்ளது. வீட்டு எண் இருபத்தெட்டு அவர்கள் பெயர் எமிலி” என்று சொல்லியபடி
தன் அறைக்கு சென்றான்.

சில தினங்கள் சென்றன. மேரி எமிலியின் வீட்டுக்கு சென்றாள். சென்றவள் தன் பெயர் மேரி என்றும் தான் ஸ்டீவின் அம்மா என்று அறிமுகப் படுத்தியதும் முகம்மலர்ந்த எமிலி மேரியை உள்ளே அழைத்து உபசரித்தாள். அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தபோது மேரி,

“ஸ்டீவ் சொன்னான். நீங்கள் விலையுயர்ந்த காரை வெறும் ஐந்தாயிரத்துக்கு கொடுத்திருப்பதாக சொன்னான், உண்மைதானா?” என்றாள்.

“உண்மைதான் மேரி, அதிலென்ன சந்தேகம்?”

“சந்தேகமொன்றும் இல்லை. எப்படியும் நாற்பது ஐம்பதாயிரத்துக்கு விற்கலாம். குறைத்து குறைத்து விற்றாலும் முப்பாதியிரத்துக்கு விற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் ஐயாயிரத்துக்கு கொடுத்திருக்கிறீகள். அதிலும் மூவாயிரத்தைப் பெற்றுக்கொண்டு மீதிப்பணத்தை மெதுவாக கொடுக்கச் சொல்லியிருக்கிறீர்கள். அதைத்தான் நம்ப முடியவில்லை” என்றாள் மேரி.

கொஞ்ச நேரம் யோசித்தபடியே அமைதியாக இருந்த எமிலி பேசத் தொடங்கினாள்.

“உயிருள்ள உறவுகளே அற்றுப்போகும்போது உயிரற்ற பணமும் பொருளும் நமக்கு எதைத் தந்துவிடும? ஸ்டீவுக்கு நான் இக்காரை இலவசமாகவே கொடுத்திருப்பேன். தன்மானமுள்ள அவன் வாங்கவே மாட்டான். அவன் எனக்கும் மகன் போலத்தான். அதனால்தான் கொடுத்தேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் தெறித்துச் சிதறின.

இதை சற்றும் எதிர்பாராத மேரி எமிலியின் கண்களை துடைத்து விட்டவள் அவளது கரங்கள் இரண்டையும் ஆறுதலாக இறுகப் பற்றினாள். கொஞ்சநேர அமைதிக்குப்பின் எமிலியே தொடர்ந்தாள்.

கிறிஸ்டோபர் அதுதான் என்கணவர் தன் அலுவலகத்தில் பணிபுரிந்த அவரைவிட இருபது வயதுகுறைந்த அவரது செயலாளராக இருந்த பெண்ணுடன் சென்றுவிட்டார். இனி வரமாட்டார் என்றாள். மீண்டும் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தபடி காரை விற்று பணத்தை அனுப்பச் சொன்னார் என்றவள் மீண்டும் அமைதியானாள்.

என்னிடம் சரியாக இல்லாத ஒருவருக்காக நான் மட்டும் ஏன் சரியான விலைக்கு காரை விற்று பணத்தை அனுப்ப வேண்டும். எனக்கு அப்படிச் செய்ய விருப்பமில்லை. அதனால் கிடைத்த விலைக்கு விற்று பணத்தையும் அவருக்கு அனுப்பிவிட்டேன். மறுபடியும் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தோட அழ ஆரம்பித்தாள்.

மேரிக்கு இதைக்கேட்டதும் கவலையால் மனம் வாடியது. ஆறுதல் படுத்தும் வகையில் எழுந்து சென்று அவளைக் கட்டியணைத்து கண்ணீரைத் துடைத்து முதுகைத் தடவிக் கொடுத்தபடியே அமைதியாக இருங்கள் என்று சொன்னவள் கொஞ்சநேரம் கழித்து திரும்பவும் வந்து அமர்ந்தாள்.

எமிலியின் முகம் கலங்கமற்று தெளிவுற்றிருந்த நிலையில் பேச ஆரம்பித்தாள். இன்னும் சில மாதங்களில் இந்த வீட்டை விற்றுவிட்டு ஸ்பெயினில் இருக்கும் என் உறவுகளுடன் வாழப்போகிறேன். அப்படியே போலந்தில் இருக்கும் என் மகளின் அருகில் இருந்தபடியும் இருக்கும் என்றாள்.

எமிலி பேசிமுடித்ததும் மேரி எமிலியிடம் ஸ்பெயின் சென்றாலும் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஆஸ்திரேலியா வாருங்கள். இங்கு ஸ்டீவ் என்ற மகனும் மற்றும் உறவுகளாக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி விடைபெற்று வீடு திரும்பினாள். 

நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த மேரி தனக்குத்தானே ஏதே பேசிக்கொண்டு போவது தெரிந்தது. அவள் என்ன பேசிக்கொண்டு போனாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மனதில் ஏதோ வந்து அழுத்துவதுபோல் இருந்தது.

அத்தோடு கண்டசாலா பாடிய உலகே மாயம் வாழ்வே மாயம், நிலையேது நாம் காணும் சுகமே மாயம், காணும் சுகமே மாயம், 
உலகே மாயம் வாழ்வே மாயம் என்ற அந்த பாடல் நினவில் தோன்ற என்னையறியாமல் கண்கள் கசிந்தன.

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: