ஏ
றக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
இவற்றை நடத்தியவர்கள்,
முன்னர் இலங்கை வடபுலத்தில் வெளியான ஈழநாடு பத்திரிகையில்
பணியாற்றியவர்கள். ஈழநாடுவில் தமது எழுத்தூழியத்தை
மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலர் தற்போது உயிரோடு இல்லை.
எனது பூர்வீகம் மேற்கிலங்கையில்
நீர்கொழும்பு. 1972 இற்குப்பின்னர், கெழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு
பிரதேச நிருபராகவும், அதேசமயம், படைப்பிலக்கியவாதியாகவும் நான் அறிமுகமானேன்.
அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து
டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாத இதழில் எனது சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்தன.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, ஒவ்வொரு மாதமும் மல்லிகை வெளியானதும், அதன் பிரதிகளுடன் யாழ். ஈழநாடு
பணிமனைக்குச்சென்று அங்கிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விநியோகிப்பார்.
ஐந்து தசாப்தங்களுக்கு
முன்னர், 1970 களில் எனது ஆக்கங்களை
மல்லிகையில் படித்துவிட்டு, சக பத்திரிகையாளர்களிடம்
என்னைப்பற்றி சிலாகித்துச்சொன்ன ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் – மதிப்பிற்குரிய
திரு. எஸ்.கே. காசிலிங்கம் அவர்களுக்கு அமுதவிழா
நடைபெறுகிறது என்ற நற்செய்தியை லண்டனிலிருந்து எனக்குத் தந்தார், மற்றும் ஒரு நீண்டகால
ஊடகவியலாளர் நண்பர் எஸ். கே. ராஜென்.
1995 – 1996 காலப்பகுதியில் பாரிஸ் ஈழநாடுவில் , மறைந்துவிட்ட
மூத்த படைப்பாளிகள் பற்றிய நினைவுத் தொடரை எழுதிக்கொண்டிருந்தேன்.
தனது தமிழன் பத்திரிகையிலும்
நான் எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவர்தான் எஸ்.கே. காசிலிங்கம் என்ற
தகவலை பின்னர்தான் நான் அறிந்தேன்.
திடீரென ஒரு நாள் பாட்டி சொன்ன கதைகள் என்ற உருவகக் கதைத்
தொடரை தமிழன் இதழக்கு அனுப்பினேன். அதனை ஒவ்வொரு வாரமும் தமிழன் இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் காசிலிங்கம், பின்னர் அந்தத் தொடர் நூலுருவானபோது, அதற்கு நீண்டதொரு
கருத்துரையும் எழுதியிருந்தார்.
இந்நூல் டொமினிக்ஜீவாவின்
மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1997
ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியானது.
காசிலிங்கம் அவர்களின்
கருத்துரையிலிருந்து பின்வரும் சுவாரசியாமான குறிப்புகளைத் தருகின்றேன்.
“ எழுத்தாளர்களா, பத்திரிகையாளர்களா உயர்ந்தவர்கள்?
“
இது தேவையற்ற சர்ச்சைதான்.