முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை !
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை !
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவுக்கு AMO சான்றிதழ்
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு
வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதி அரசியல்வாதிகள் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகிறது - வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம் சுட்டிக்காட்டு
தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை !
29 May, 2025 | 12:08 PM
ச.தொ.ச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிறுவனம் ஒன்றின் மூலம் 14000 கரம்போர்ட் மற்றும் 11000 டாம்போட் ஆகியவற்றை வாங்கி விளையாட்டு கழகங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக நளின் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணயின் போது ஊழல்,மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நன்றி வீரகேசரி
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை !
29 May, 2025 | 01:09 PM
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிறுவனம் ஒன்றின் மூலம் 14000 கரம்போர்ட் மற்றும் 11000 டாம்போட் ஆகியவற்றை வாங்கி விளையாட்டு கழகங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊழல்,மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நன்றி வீரகேசரி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவுக்கு AMO சான்றிதழ்
29 May, 2025 | 11:02 AM
தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் (Civil Aviation Authority of Thailand) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவுக்கு வெளிநாட்டு பழுதுபார்க்கும் நிலையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு அமைப்பு (AMO) சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை இந்த சான்றிதழ் அங்கீகரிக்கிறது.
இந்த சான்றிதழானது பரந்த அளவிலான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவை மேலும் ஊக்குவிக்கிறது.
இந்த சான்றிதழானது, விமானத்தின் செயல்பாட்டு செயல்திறனை
மேம்படுத்துதல், விமானம் தரையிறங்கும் நேரத்தைக் குறைத்தல், செலவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கான தீர்வுகளை வழங்கி ஸ்ரீலங்கன்ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவை வலுப்படுத்த உதவுகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவின் சேவையானது, உலகெங்கிலும் உள்ள பயணிகளின் நம்பகத் தன்மையை வென்றுள்ளது. நன்றி வீரகேசரி
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு
28 May, 2025 | 12:26 PM
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
கைதான யுவதியிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்கவில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதனை அடுத்து அவரை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை குறித்த யுவதி போதைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையுடன் , யுவதியை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (27) முற்படுத்திய வேளை , யுவதியை எதிர்வரும் 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதி அரசியல்வாதிகள் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகிறது - வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம் சுட்டிக்காட்டு
Published By: Vishnu
28 May, 2025 | 03:51 AM
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடம் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.
யாழ். மாவட்டத்துக்கான குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில்
ஆளுநர் குறிப்பிட்டார். கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக குடிதண்ணீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான செலவு அதிகம் என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் இங்கு வலியுறுத்தினார். நன்றி வீரகேசரி
தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
Published By: Vishnu
28 May, 2025 | 03:01 AM
ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment