வாழ்த்துவதால் தெய்வீகம் மலரும் அன்றோ?

 



இயற்றியவர்:  சிவஞானச் சுடர் பாரதி இளமுருகனார்          வாழ்நாட் சாதனையாளர்.





 நீர்க்குமிழி போன்றவெங்கள் நிலையிலா வாழ்வில்

        நேரத்தை விரயஞ்செயா நிலைப்பாட் டுடனே

வார்த்தைதனில் இன்சொற்கள்  மெருகு கூட்ட

        வாஞ்சையொடு பேசிநீவிர் அன்பை வளர்ப்பீர்!

நேர்த்தியாய் அமைதிவிஞ்சப் பொறுமை காத்து

        நிறைவினிலே இன்பமதை நித்தந் துய்த்துச்

சீர்த்தியுங்கள் வாழ்வினிலே திருவாய் இலங்கச்

        திண்மைமிக வாழ்வாங்கு வாழ்தல் நன்றே!   


வாழ்த்துவதால் வாழ்த்தினொலி அலைகள் மூலம்

        வாழ்த்தப்பெறும் மனதைமிக மகிழச் செய்யும்!

தாழ்வுநிலை அகற்றிவிடும்! தவறு செய்வோர்

        தாமாகத் திருந்தவழி வகுத்து நிற்கும்!

காழ்ப்புணர்ச்சி நீக்கியன்பைக் கமழ வைக்கும்!

        காதலொடு வாழ்த்தும்மனம் சாந்தி பெறும்!

வாழ்த்திடுவீர்! வளத்துடனே வாழ்க வென்று

        வாழ்த்துவதால்  தெய்வீகம் மலரும் அன்றோ?














தவறிழைத்தல் மன்பதையும் எதிர்கொழக் கூடும்!

        தவறிழைப்போர் மனங்கன்றத் தகாத வார்த்தை

தவறியேனும் சொலலாகாத் தாழ்மை வேண்டும்!

        தயவாகத் தவறிழைத்தோர் அன்புள் ளுருகத்

தவறிழைத்த தெதுவதுவோ உண்மை யென்றால்

        தனியாகத் தெரிவித்தல் பண்பாய் அமையும்!

தவறிழைத்தோர் நாணிடவே புரிந்து ணர்வைத்

        தக்கவைக்க ஒற்றுமையும் தழைக்கு மன்றே!
















“வையகத்தில் உயர்ந்ததொரு நாகரிகந் தன்னை

        வளர்த்ததுடன் வரையறையும் செய்தான் தமிழன்!

ஐயமின்றி நம்பிவாழ்ந்தான்! பயனும் பெற்றான்!

        அவசியமென் றேநல்ல விழுமி யங்கள்         

மெய்யாக வழிவழியாய்த் தெடர வைத்தான்!        

        விரும்பாத சிலரின்று அவற்றை மறந்து

பொய்வாழ்க்கை வாழ்கின்றார்! மனதை மாற்றிப்

          புடஞ்செய்யப் புயங்கன்தான் அருள வேண்டும்!     




















முந்திநின்ற வினைகளெ லாம் பனிபோ லுருக

         முத்தியென்ற பெரும்பேறு முகிழ்த்தே விளங்க

அந்தமில்லாப் பரம்பொருளை மனதி ருத்தி

        அனுதிமும் நேயமொடு அன்புள் ளுருகிச்

சிந்திநெஞ்சே சிந்தியென்று சரண டைந்து

        திருவைந்து எழுத்தொன்றே துணையெனச் சிவனார்

கந்தம்மலி மறுவறுபொற் கழல்கள் தன்னைக்

        கதியெனவே பற்றிநிற்றல் பிறவிக் கடனே!



No comments: