காசாவுடன் லெபனான் நகரங்களிலும் இஸ்ரேல் தொடர்ந்தும் குண்டு மழை
ஈரான் மீதான எங்கள் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது
வடக்கு காசாவில் முற்றுகையை இறுக்கும் இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் மேலும் 55 பேர் பலி: முற்றுகை தொடர்கிறது
பாதுகாப்பு கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை
காசாவுடன் லெபனான் நகரங்களிலும் இஸ்ரேல் தொடர்ந்தும் குண்டு மழை
-உதவிகள் செல்ல இஸ்ரேலுக்கு அமெரிக்கா காலக்கெடு

வடக்கு காசாவில் இஸ்ரேல் முற்றுகையை தொடர்வதோடு அதன் ஏனைய பகுதிகளிலும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,409 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 99,153 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக நேற்று (16) அதிகாலை காசா நகரின் மேற்கே உள்ள அல் நாசிர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாலியன் டவுன் பகுதிக்கு அருகில் வீடு ஒன்றின் மீதே இஸ்ரேல் குண்டு வீசியதாக உள்ளூர் வட்டாரத்தை மேற்கோள்காட்டி, பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா எழுதி இருக்கும் கண்டிப்பான கடிதம் ஒன்றில் காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க 30 நாள் கெடு விதிக்கப்பட்டிருப்பதோடு இல்லாவிட்டால் அமெரிக்க இராணுவ உதவிகள் துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டிருக்கும் இக்கடிதம் இதுவரை அமெரிக்கா விடுத்த கண்டிப்பான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. வடக்கு காசாவில் இஸ்ரேல் ஒரு வாரத்துக்கு மேலாக நடத்தி வரும் முற்றுகையில் பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டு அங்கு அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்திருக்கும் சூழலிலேயே அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
மனிதாபிமான நிலைமை மோசமடைவது குறித்து அமெரிக்கா பெரும் கவலை அடைத்திருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே சுமார் 90 வீதமான மனிதாபிமான நகர்வுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது அல்லது தடுத்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை பரிசீலனை செய்வதாக இஸ்ரேல் குறிப்பிட்டிருப்பதோடு இவ்விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் அமெரிக்காவின் சகாக்களின் கவலையை சரிசெய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
முடிவுற்ற இரண்டு வார காலத்தில் வடக்கு காசாவுக்கு உணவு உதவி மற்றும் எந்த விநியோகமும் செல்லவில்லை என்றும் அங்கு எஞ்சியுள்ள 400,000 பலஸ்தீனர்களுக்கான உதவிகள் தீர்ந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு மிகப்பெரிய இராணுவ உதவியை வழக்கும் நாடாக இருக்கும் அமெரிக்கா கடந்த ஓர் ஆண்டு காலத்தில் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் விமானங்கள், வழிகாட்டி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் செல்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு அனுப்பிய கடிதத்தில் இருக்கும் உள்ளடக்கத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி இணையதளம் ஒன்றே முதல் முறை செய்தி வெளியிட்டிருந்தது. இக்கடிதத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
இதேவேளை லெபனானின் பல சிறு நகர்களிலும் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று கட்டடங்கள், வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெப்டியே மாநகரக் கட்டடத்தின் மீது நகர மேயர் மற்றும் ஊழியர்கள் இருக்கும்போது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் நகர மேயரான அஹமது கலீல் மற்றும் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று நெப்டியே பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனானின் தெற்கு நகரான கனாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இதேநேரம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் மீதும் இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு வெவ்வேறு இடங்களில் வெடிப்புகள் இடம்பெற்று கரும்புகை எழுந்ததாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்களில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களின்போது ஓர் இடத்தின் மீது மாத்திரம் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கையை விடுத்து பின்னர் பரந்த அளவில் தாக்குதல் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலத்தடி ஆயுதக் களஞ்சியத்தை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல்களை நிறுத்துவதற்கான அழைப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோனுடன் தொலைபேசியில் பேசிய நெதன்யாகு, ‘தன்னிச்சையான போர் நிறுத்தம் ஒன்றை எதிர்ப்பதாகவும் அது லெபனானில் பாதுகாப்பு நிலைமையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும்’ குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
ஈரான் மீதான எங்கள் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது
- இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்
ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எங்களை பொறுத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் பிளாஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியது.
அத்தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடாத்துவதற்கான முஸ்தீபுகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேல் எம் மீது தாக்குதல் நடாத்தினால் கடும் தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று ஈரான் கூறிவருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதோ, எண்ணெய் களஞ்சியசாலைகள் மீதோ தாக்குதல்கள் நடாத்த வேண்டாம். இத்தகைய தாக்குதல்கள் உலகளவில் பிரச்சினையை ஏற்படுத்தும். அதோடு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இதேவேளை பிளாஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கக்கூடிய டாட் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு கட்டமைப்பையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேல்’ பிரதமர் அலுவலகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் ¤ ஈரான் இடையே தொடர்ந்து கொந்தளிப்பான நிலை நீடித்து வருவதால் இருநாடுகளும் எப்போது வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபடக்கூடிய நிலை நிலவிவருவதாக போரியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். நன்றி தினகரன்
வடக்கு காசாவில் முற்றுகையை இறுக்கும் இஸ்ரேல்
- லெபனான், சிரியாவில் தாக்குதல்
ஓர் ஆண்டை கடந்திருக்கும் காசா போர் தற்போது பிராந்தியம் எங்கும் பரவி உள்ள சூழலில் சிரிய கடற்கரை நகர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதோடு யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனானில் புதிய வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈரான் மீது தாக்கினால் கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் நேற்று மீண்டும் எச்சரித்தது.
இந்நிலையில் காசா நகரில் இஸ்ரேல் நேற்று நடந்திய வான் தாக்குதலில் 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்திருக்கும் அதேநேரம் ஜபலியா அகதி முகாமுக்கு இஸ்ரேலிய டாங்கிகள் ஊடுருவி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு காசாவில் நிலவும் உணவு மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை தொடர்பில் பலஸ்தீனர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டு வருகின்றனர்.
ஜபலியாவில் இஸ்ரேலியப் படைகள் வான் தாக்குதல் நடத்தியும், டாங்கிகள் மூலம் செல் குண்டுகளை வீசியும், குண்டுகளை வைத்தும் வீடுகளை தகர்த்து வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஒன்றில் அடைக்கலம் பெற்றிருக்கும் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களை வெளியேற்றும்போது வீசப்பட்ட செல் குண்டுத் தாக்குதலில் அவர் சிக்கியதாக காசாவின் சிவில் அவசரப் பிரிவு தெரிவித்தது.
காசா நகரில் இருந்து தூர வடக்காக பெயித் ஹனூன், ஜபலியா மற்றும் பெயித் லஹியா பகுதிகளை இஸ்ரேலியப் படையினர் தனிமைப்படுத்தி இருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இப்பகுதிகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கு இந்த முற்றுகை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
‘நாம் எமது மரண சாசனத்தை எழுதி வருவதோடு ஜபலியாவில் இருந்து நாம் வெளியேறப்போவதில்லை’ என்று குடியிருப்பாளர் ஒருவர் ‘சாட் ஏப்’ செயலி வழியாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
‘போரின் ஆரம்ப காலத்தில் எமது வீடுகளில் இருந்து வெளியேறாததற்கு ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) எம்மை தண்டித்து வருகின்றனர். இப்போதும் கூட நாம் வெளியேறப்போவதில்லை. அவர்கள் எமது வீடுகள் மற்றும் வீதிகளை தகர்த்து எம்மை பட்டினியில் வைக்கிறார்கள். என்றபோதும் நாம் இறப்போமே ஒழிய எமது கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்று தமது பெயரைக் குறிப்பிடாத நான்கு குழந்தைகளின் தந்தை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்த வடக்கு காசா, போரின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் சின்னபின்னமாக்கப்பட்டது. தற்போது அங்கு நான்கு இலட்சம் வரையான பலஸ்தீனர்கள் எஞ்சி இருப்பதாக நம்பப்படுகிறது.
காசாவுக்கான உதவிகள் செல்வது மற்றும் போர் வலயங்களில் விநியோகங்கள் தடுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம்சாட்டி வருகிறது. இதில் வடக்கு காசாவுக்கு கடந்த ஒக்டோபர் 2 மற்றும் 15 ஆம் திகதிக்கு இடையே எந்த உணவு உதவிகளும் செல்லவில்லை என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஜோர்தான் வழங்கிய உணவு, நீர், மருந்துகள் மற்றும் தங்குமிட உபகரணங்களை ஏற்றிய 50 லொறிகள் வடக்கு காசாவுக்கு சென்றதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
காசாவுக்கு உதவிகளை அனுமதித்ததாக இஸ்ரேல் இராணுவத்தின் கூற்று தவறான வழிநடத்தலாகும் என்று காசாவின் அரச ஊடகப் பணிப்பாளர் இஸ்மைல் அல் தவப்தா குறிப்பிட்டுள்ளார். ‘இஸ்ரேல் இராணுவம் பொய் கூறுகிறது, உணவு லொறிகள் நுழைவது தொடர்பில் பொதுமக்களை தவறாக ‘வழிநடத்த முயற்சிக்கிறது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அனைத்து மனிதாபிமானப் பாதைகளையும் மூடி காசாவின் தூர வடக்கே தொடர்ந்து 170 நாட்களால் இஸ்ரேல் இராணுவம் விரிவான முற்றுகையை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் இங்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 342 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘வெளியேற்றும் திட்டம் ஒன்றாக இனச்சுத்திகரிப்பு, குடியிருப்புப் பகுதிகள், வீடுகள், விதிகள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை அழித்தது வடக்கு காசாவில் இனப்படுகொலை ஒன்றே இடம்பெற்று வருகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,400ஐ தாண்டியுள்ளது.
சிரியா, யெமனில் தாக்குதல்
சிரியா, யெமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் காசாவில் ஹமாஸ் ஈரான் ஆதரவு பெற்ற கூட்டணியாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய 200க்கும் அதிகமான ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுப்பதில் இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இது பல முனைகளில் இடம்பெற்று வரும் போரை பிராந்திப் போராக மாற்றும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
‘தவறு செய்து பிராந்தியத்தில் அல்லது ஈரானில் எமது இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினால் வலிமிக்க பதில் தாக்குதலை நாம் நடத்துவோம்’ என்று ஈரான் புரட்சிக் காவல் படை தளபதி ஹுஸைன் சலாமி எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட தெற்கு பெய்ரூட்டில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதலின்போது பலியான ஈரானிய ஜெனரல் ஒருவரின் இறுதிக் கிரியையில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் கோட்டை என கருதப்படும் லடகியா நகரில் நேற்று முன்தினம் (16) இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரு பொதுமக்கள் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான அயுதக் கிடங்கு ஒன்றை இலக்கு வைத்தே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
மறுபுறம் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா பி-2 குண்டுவீசும் விமானத்தைக் கொண்டு ஹூதி கட்டுப்பாட்டு யெமன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் மற்றும் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பி-2 என்பது 40,000 பௌண்ட் குண்டுகளுடன் அமெரிக்காவில் இருந்து இரகசியமாக இடைவிடாது பயணிக்கும் திறன் கொண்டது என்று அமெரிக்க விமானப்படை அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. நவீன ரக விமானங்களில் அதிக எடையுடைய ஆயுதங்களை சுமக்கக்கூடிய விமானமாக இது உள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கிழக்கு லெபனானில் பக்கா பள்ளத்தாக்கில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் புதிய வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது ஹிஸ்புல்லா அமைப்பு பலம்பெற்ற பகுதியாக உள்ளது.
இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் மற்றொரு இஸ்ரேலிய டாங்கியை அழித்ததாக ஹிஸ்புல்லா போராளிகள் நேற்றுத் தெரிவித்தனர். இங்கே இரு தரப்புக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் மேலும் 55 பேர் பலி: முற்றுகை தொடர்கிறது
ஈரான் மீது பதில் தாக்குதல் பற்றி இஸ்ரேல் புதிய அறிவிப்பு
ஈரான் நடத்திய ஏவுணைத் தாக்குதலுக்கு பதிலளிப்பது தொடர்பில் இஸ்ரேல் ஆலோசித்து வருவதோடு லெபனானில் போர் நீடிக்கும் சூழலில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் ஜபலியாக அகதி முகாமில் இஸ்ரேலின் முற்றுகை நேற்றுடன் (15) 11ஆவது நாளாக நீடித்ததோடு அங்கு நேற்று குறைந்தது 12 உடல்கள் மீட்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் அல் செய்யித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹமூத் பசால் குறிப்பிட்டார். அவர்களின் உடல்கள் அவர்களின் குடும்ப வீட்டில் புதைந்து கிடந்ததாக அவர் கூறினார்.
மற்ற ஐந்து சடலங்களும் சுற்றுப்பகுதியில் இருக்கும் வீதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிறிதொரு சம்பவத்தில் இந்த முகாமில் பிர்காத் அபூ ரஷீத் பகுதி மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்குள்ள அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு நடத்தப்பட்ட வான் தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மீட்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இஸ்ரேலிய துருப்புகள் பீப்பாய்களில் வெடிபொருட்களை நிரப்பி வீசியதில் கட்டடங்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஓர் ஆண்டாக நீடிக்கும் காசா போரில் இஸ்ரேலிய படை அடிக்கடி ஜபலியா முகாமில் படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முகாம் 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின் அகதியாக பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்ற பகுதியாகும்.
காசா நகர் உட்பட வடக்கு காசாவில் இருந்து பலஸ்தீனர்களை முற்றாக வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட நிலையிலேயே ஜபலியாவில் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. காசாவின் வடக்கே தொடர்ந்து 400,000 பலஸ்தீனர்கள் எஞ்சி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசாவின் எஞ்சிய பகுதியில் இருந்து வடக்கு காசாவை முற்றாக துண்டிக்கும் இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா. மனித உரிமை நிறுவனம் நேற்று குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை, நேற்றுக் காலை காசா நகரின் மேற்கே இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் அல் சினா வீதியில் பல வீடுகளும் அழிக்கப்பட்டிருப்பதோடு இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வீடுகளில் மேலும் 12 பேர் இருந்ததாக நம்பப்படும் நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல் சாலிஹ் குடும்பத்திற்குச் சொந்தமான வீடே தாக்கப்பட்டிருப்பதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் கான் யூனிஸின் கிழக்காக பனி சுலைஹாவில் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
‘கொலை இயந்திரம் இன்றும் நின்றதாக இல்லை. காசாவின் தெற்குப் பகுதியில் இரவு முழுவதும் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நீடித்தன’ என்று அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் விபரித்துள்ளார்.
கான் யூனிஸில் மற்றொரு தாக்குதலில் ஒரே குடும்பத்தின் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் நீடிக்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் இதுவரை 42,289 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 98,684 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிப்பதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேலிய துருப்புகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே நேரடி மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக லெபனானில் கால் பங்கு மக்கள் இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்டிருப்பதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் புதிய வெளியேற்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கும் நிலையில் ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் மத்திய கிழக்கு பணிப்பாளர் ரிமா ஜமௌஸ் நேற்று இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
காசா மற்றும் லெபனானில் போர் நீடிக்கும் நிலையில் இஸ்ரேலில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் இஸ்ரேலிய பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் துப்பாக்கிதாரி தொடர்பில் விபரம் உடன் வெளியாகவில்லை.
இதேவேளை இந்த மாதத்தில் இஸ்ரேல் மீது ஈரான் வீசிய சுமார் 200 ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதில் அளிப்பது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீர்மானிக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதான வதந்தி நீடித்து வந்த ஈரானிய முன்னணி கொமாண்டர் ஒருவர் பொதுவெளியில் தோன்றிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நன்றி தினகரன்
பாதுகாப்பு கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை
இந்தியக் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறன்களை 80 ஆயிரம் கோடி ரூபா செலவில் மேம்படுத்துவதற்கு பாதுகாப்பு தொடர்பான இந்திய மத்திய அமைச்சரவைக் குழு அங்கீகாரம் அளித்திருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட உள்ளதோடு, அமெரிக்காவிடமிருந்து 31 பிரிடேட்டர் ட்ரோன்கள் கொள்வனவு செய்யப்படவும் இருக்கிறது.
அவர்கள் ஏ.என்.ஐ. யிடம் மேலும் கூறுகையில், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் மையத்தில் இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்படும். அதன் நிமித்தம் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தத்திற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீருக்கடியிலான இந்திய கடற்படையினரின் திறன்களை மேம்படுத்த இது பெரிதும் உதவும்.
அதேவேளை, இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலான வெளிநாட்டு இராணுவ தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கன் ஜெனரல் ஒட்டோமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 31 பிரிடேட்டர் ட்ரோன்களும் கொள்வனவு செய்யப்படவிருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் அடுத்துவரும் சில நாட்களில் கைச்சார்த்திடப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment