அந்த நாட்களில் பத்திரிகையில் வரும் திரைப்படங்களின் பெட்டி விளம்பரம் பார்க்க சனசமூக நிலையம் போனோம். வீட்டு மதில்களிலும் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்களை பசை வாளி கொண்டு ஒட்டி விடுவார்கள். அவை காய்ந்து விட்டால் பிறகு கொதி தண்ணீர் ஊற்றியபடி திட்டிக் கொண்டே அவற்றை மதில் வீட்டுக்காரர் உரித்து அகற்ற வேண்டியிருந்தது.
இதாவது பரவாயில்லை. தேர்தல் வந்தால் மதில் வீட்டுக்காரர்களுக்கு
இன்னொரு தலையிடியும் உண்டு. பிரசார அரசியல் கட்சிகள் தாறுமாறாக எதிர்தரப்பினரை வசை
பாடி இலகுவில் அழிக்க முடியாத வர்ணப் பூச்சுக்களைக் கொண்டு மதில்களில் எழுதி வைத்து
விடுவார்கள்.
அந்தக் காலம் ஊரில் பெரும்பாலும் கிடுகு மற்றும் பனையோலை
வேலிகளே தெருவின் இருவரிசைகளிலும் இருந்ததால் குறைவாகவிருந்த மதில் வீடுகளுக்கு
இந்த ஆபத்து இருந்தது. இன்று ஊரில்
பெரும்பாலும் மதில் வீடுகளைத் தவிர வேறெதையும் காணமுடியாது ஆகவே இந்த பிரச்சினை இப்போது
இல்லைப் போலும். பெரும்பான்மைக்கு எப்போதும் பாதுகாப்பு உண்டு என்பது உண்மையே.
அப்போது சினிமாக்களுக்கு மதில் போஸ்டர் ஒட்டுவதைவிட காரின்
கூரையில் எதிரும் புதிருமாக இரண்டு லவுட் ஸ்பீக்கர்களை கட்டிக் கொண்டு திரைப்பட விளம்பர அறிவிப்புச் செய்தபடி ஊரின் குச்சு
ஒழுங்கையெல்லாம் அச்சிட்ட விளம்பரங்களை விசிறி எறிந்து விட்டு போவதுமுண்டு.
காரின் சில்லுகள் மண் தெருவில் எழுப்பும் புழுதிக்குள் வர்ணக் கடதாசித் தாளில் அச்சிட்ட திரைப்பட விளம்பரங்களும் கலந்து பறக்க அவற்றை விழ முன்னர் பிடிப்பதற்காக ஓடினோம்.
யாழ் நகரம் சென்று படம் பார்க்க வசதிப்படாதவர்கள் அவரவர்
ஊருக்கு அருகிலுள்ள திரையரங்குக்கு கால் நடையாகவோ
அல்லது சைக்கிளிலோ செல்வதுண்டு. ஆனால் படம் பார்த்து விட்டு இரவில் தெரு விளக்கு வெளிச்சத்தில் நடந்து வருபவர்களைத் துரத்தும் தெரு நாய்களைச் சமாளிக்கும் சாமர்த்தியம்
வேண்டும்.
அந்த நாட்களில் வெளிவந்த ஆங்கிலப் படங்களில் ஒன்றில் ஒரு கறுப்பு நாயின் உருவில் இறந்த ஆவியொன்று வருவதாக
காட்டப்பட்ட து. இரவில் இந்த ஆங்கிலப் படம் பார்த்து விட்டு நடந்து வந்தவர்கள் தெருவில்
ஊளையிட்ட கறுப்பு நாயைக் கண்டு கல்லெறியப்
பயந்த கதையையும் கேள்விப்பட்டிருந்தோம்.
நகர திரையரங்குகளில் தினமும் காலை 10.30, பகல் 2.30, மாலை
6.30 என்ற காட்சிகளை விட இரவு 10.30 க்கு ஓடும்
செகண்ட் ஷோவும் காட்டப்பட்டது.
செகண்ட் ஷோ முடிந்து வருவதானால் அவரவர் சைக்கிளிலோ அல்லது
வேறு வாகனத்திலோதான் வரலாம். ஏனென்றால் கடைசி பஸ் இரவு பத்து மணிக்குப் புறப்பட்ட பிறகு யாழ் பஸ் நிலையம் ஓய்ந்து வெறிச்சோடி
விடுகிறது.
அடிமைப்பெண்
திரைப்படத்துக்காக எம் ஜி ஆரின் கட் அவுட்
ஒன்று பஸ் நிலையத்துக்கருகில் ராணித் தியேட்டருக்கு முன்பாக ஓவியர் மணியம் வரைந்து
வைத்ததை பார்த்த நினைவும், கஸ்தூரியார் வீதியில் விசாலமான வசதியான முறையில் கட்டப்பட்டிருந்த
புதிய வின்ட்ஸர் திரையரங்கில் பார்த்த ராஜ ராஜ சோழன் திரைப்படத்தின் நினைவும் இருக்கிறது,
ஊரிலிருந்து மாலை 6.30 மணிக்குப் படம் பார்க்க யாழ் நகரம் போனவர்கள்
இரவு 9,30 க்கு படம் முடிந்தபின் நகரிலிருந்து புறப்படும்
கடைசி பஸ்ஸை பத்து மணிக்குப் பிடித்து ஊருக்கு வந்து சேர இரவு பத்தரை மணி தாண்டுகிறது.
பெரும்பாலும் இப்படி படம் பார்த்து விட்டு வருபவர்களே அந்த கடைசி பஸ்ஸில் ஏறி
பஸ்ஸை நிறைக்கின்றனர். பஸ் முழுவதும் வெவ்வேறு திரைப்பட அலசல்களுடன் புறப்படும்
அந்த பஸ் ஊரில் பட பஸ் என்ற இடுகுறிப் பெயரால் அழைக்கப்பட்டது.
பட பஸ்ஸை விட்டு விட்டால் பிறகு துணிவே துணை என்று நடந்து
வருவதற்கு எவரும் துணிந்ததில்லை. அதுவும் மானிப்பாய் வீதியிலுள்ள கோம்பையன் மணல் மயானத்தைத்
தாண்டி வரும் துணிவு படத்தில் பத்துப் பதினைந்து வில்லன்களை அடித்து வீழ்த்தி விடும் ஹீரோவுக்கு கூட இருக்காது
இந்தப் பட பஸ், ஊர்ப் பேச்சு வழக்கில் இன்னொரு குறியீடாகவும்
பேசப்பட்டது. இறுதிப் பரீட்சைகளில் அல்லது
வாழ்வில் ஏதோ ஒரு வகையில் கடைசி சந்தர்ப்பத்தையும் தவற விட்டு விட்டவர்களைப்
பார்த்து “பட பஸ்ஸையும் தவற விட்டு விட்டாயே!” என்று கேலி செய்வதுண்டு.
இப்படிப் பட பஸ் என்பது ஒரு காலத்தின் சுவடாகி விட்டது.
No comments:
Post a Comment