சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது
கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை
சம்பந்தனின் கடிதத்துடன் சுமந்திரன் தலைமையிலான குழு ஜெனிவா விரைவு
ரணில் - மோடி சந்தித்தனர்
யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை
கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை
'பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக" கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது
14/09/2015 ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம், சர்வதேச விசாரணை வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் ஐந்தாவது நாளான இன்று யாழப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் அன்றையதினம் மாலை ஆனையிறவை வந்தடைந்தது.
ஆனையிறவிலிருந்து இரண்டாம் நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (11) பளையை வந்தடைந்தது. மூன்றாம் நாள் நடைபணம் வெள்ளிக்கிழமை (11) பளையிலிருந்து ஆரம்பித்து கொடிகாமத்தை வந்தடைந்தது.
கொடிகாமத்திலிருந்து நேற்று ஆரம்பித்த நடைபயணம் நேற்று கைதடியைச் சென்றடைந்து.
இந்நிலையில் இன்றைய தினம் கைதடியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் யாழ் நகரைச் சென்றடைந்துள்ளது.
இந்த நடைபயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை
14/09/2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்கு மூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி தொடர்பிலேயே இவர்களிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சம்பந்தனின் கடிதத்துடன் சுமந்திரன் தலைமையிலான குழு ஜெனிவா விரைவு
14/09/2015 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா நோக்கி பயணமாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 30ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுனர் குழுவினரே நேற்று முன்தினம் ஜெனீவா நோக்கி பயணமாகினர்.
இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
இதன்போது இலங்கை இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.
இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,
தமிழர் நீதிக்கான கூட்டமைப்பின் குரல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமைந்துள்ள ஜெனிவாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்கவுள்ளது. ஜெனிவா அமர்வில் வெளியிடப்படவுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்படவுள்ளது.
ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடரில் உத்தியோகபுர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும். அவ்வாறு அமுல் படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சமுகத்தின் ஈடுபாட்டுடன் நடைப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிகை கைவிடப்போவதில்லை என்றார்.
ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை உள்ளக விசாரணைப் பொறிமுறையுடாக நிறைவேற்ற வேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில அரசாங்கத்தின் சார்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் உள்ளதோடு அதனை நியாப்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து தமது செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவுள்னது.
இதேவேளை ஜெனீவா விரைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கடிதமொன்றையும் பெற்றுக்கொண்டு சென்றதாக தெரிய வருகின்றது. இக்கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் எனபதை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ரணில் - மோடி சந்தித்தனர்
15/09/2015 இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை
15/092015 சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்று காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் இந்த கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டனர். நன்றி வீரகேசரி
கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை
17/09/2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக" கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
17/09/2015 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம், கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய சமாதான முன்னணி ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாக முன்றலில் நடைபெற்றது.
'நேற்று வித்தியா.. இன்று சேயா.. நாளை..?" 'சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு மரண தண்டனை வழங்கு.!" 'பாலியல் குற்றவாளிகளை கொலைகாரர்களை தூக்கிலிடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதோடு கொலைகளும் அதிகரித்துள்ளதாகவும் இதற்கெதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மொஹமட் மிப்லார் தெரிவித்தார்.
தண்டனை வழங்கப்படுவதில் உள்ள சட்ட குறைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளதாகவும் கடந்த 4,5 வருடங்களில் இக்கொடூர செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான கொடூர செயல்கள் இடம்பெறுவதற்கு போதைப்பொருள் பாவனையும் ஒரு முக்கிய காரணமாகும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளும் நீதிவான்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக் காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு புதிய சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படப்பட வேண்டும் என தெரிவித்தார்.
போராட்டத்தின் பின்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment